பெரிய ஹீரோக்களின் படமாக இருந்தாலும் கூட நல்ல படமாக இருந்தால் தான் ரசிகர்கள் பார்ப்பார்கள் என தற்போதைய சினிமாவின் ட்ரெண்ட் குறித்து நடிகை தமன்னா மனம் திறந்து பேசி இருக்கிறார். ஹிந்தி திரை உலகில் நடிகையாக களமிறங்கி ஹிந்தி, தமிழ், தெலுங்கு என எல்லா மொழிகளிலும் நடித்து கிட்டத்தட்ட 18 ஆண்டுகளாக இந்திய சினிமாவில் பல கோடி ரசிகர்களின் ஃபேவரட் நாயகியாக திகழ்பவர் நடிகை தமன்னா. அந்த வகையில் அடுத்தடுத்து தமன்னா நடிக்கும் ஒவ்வொரு திரைப்படங்கள் ரசிகர்களிடையே பெரும் ஆர்வத்தை ஏற்படுத்தி இருக்கின்றன. முன்னதாக இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் முதல் முறை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுடன் இணைந்து நடிகை தமன்னா நடித்திருக்கும் ஜெயிலர் திரைப்படம் வருகிற ஆகஸ்ட் 10ஆம் தேதி உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீஸ் ஆகிறது. குறிப்பாக ஜெயிலர் திரைப்படத்தில் தமன்னாவின் ஸ்டைலான நடனத்தில் வெளிவந்த காவாலா பாடல் தற்போது மிகப்பெரிய ட்ரெண்டிங் ஹிட் ஆகியிருக்கிறது.

தொடர்ந்து வருகிற ஆகஸ்ட் 11ஆம் தேதி ரிலீஸ் ஆகும் வேதாளம் படத்தின் தெலுங்கு ரீமேக் படமான போலா ஷங்கர் படத்தில் மெகா ஸ்டார் சிரஞ்சீவியுடன் இணைந்து தமன்னா நடித்திருக்கிறார். தற்போது இயக்குனர் சுந்தர்.சி-யின் ஃபேவரட் சீரிஸான அரண்மனை சீரிஸ் படங்களின் நான்காவது பாகமாக உருவாகும் அரண்மனை 4 படத்தில் கதாநாயகியாக நடிக்கும் தமன்னா மலையாளத்தில் பான்த்ரா மற்றும் ஹிந்தியில் வேதா ஆகிய திரைப்படங்களிலும் நடித்து வருகிறார். இந்த நிலையில் நமது கலாட்டா தமிழ் சேனலில் நடைபெற்ற தமன்னா ரசிகர்கள் கொண்டாட்டத்தில் கலந்து கொண்ட நடிகை தமன்னா நம்மோடு பல சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்து கொண்டார். அந்த வகையில் பேசும் போது, “உங்களுடைய எதிர்பார்ப்புகள் எப்படி இருக்கின்றன. பொதுவாகவே சினிமாவில் சொல்வார்கள் ஒரு பெரிய ஹீரோவுடன் நடித்து விட்டால் தொடர்ந்து பெரிய ஹீரோக்களுடன் மட்டும்தான் இணைந்து நடிக்க வேண்டும் அதன் பிறகு தொடர்ச்சியாக அவர்கள் எக்ஸ்பிரிமெண்ட் செய்ய மாட்டார்கள் என்று சொல்வார்கள் இதை எப்படி பார்க்கிறீர்கள்?” என கேட்டபோது,

“நான் இது உண்மை இல்லை என பார்க்கிறேன்.. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களே இயக்குனர் நெல்சன் அவர்கள் பண்ணிய மாதிரி படம் பண்ணுகிறார் வழக்கமான படமாக அல்லாமல் வித்தியாசமான கதாபாத்திரங்கள்... இந்த ட்ரெண்ட் மாறிக் கொண்டே இருக்கின்றது. எவ்வளவு கமர்சியல் படங்கள் இருந்தாலும் ஏதோ ஒன்று புதிதாக இல்லை என்றால் ரசிகர்களும் பார்க்க மாட்டார்கள். அவர்களுக்கு ஏற்கனவே தெரிந்த படத்தை ஏன் மறுபடியும் பார்க்கப் போகிறார்கள். அதை டிவியிலோ அல்லது ஒரு ஓடிடி தளத்திலோ பார்த்துக் கொள்வார்கள். தியேட்டருக்கு போகிறார்கள் என்றால் ஒரு புது அனுபவத்திற்காக போகிறார்கள். கண்டிப்பாக பெரிய ஸ்டார் இருந்தாலும் கூட நல்ல படமாக இருந்தால் தான் ரசிகர்கள் ஆதரவு கொடுப்பார்கள்…” என பதில் அளித்துள்ளார். இன்னும் பல சுவாரசியமான அனுபவங்களையும் தகவல்களையும் பகிர்ந்து கொண்ட நடிகை தமன்னாவின் அந்த ரசிகர்கள் கொண்டாட்ட நிகழ்வின் அந்த முழு வீடியோவை கீழே உள்ள லிங்கில் காணலாம்.