சுவாமி மலை அருகே நடுவழியில் மினி பேருந்து தீ பற்றி எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்திலிருந்து நாள்தோறும் சுவாமி மலைக்குப் பயணிகள் வசதிக்காக மினி பேருந்து இயக்கப்பட்டு வருகிறது. அதன்படி, நேற்று சுவாமி மலையிலிருந்து மினி பேருந்து கும்பகோணத்திற்கு சென்றுகொண்டிருந்தது.

அப்போது, எதிர்பாராமல் வழியிலேயே பேருந்தில் தீ பற்றத் தொடங்கியது. இதனையடுத்து, பேருந்திலிருந்த பயணிகள் அனைவரும் அலறி அடித்துக்கொண்டு பேருந்தைவிட்டு வெளியே ஓடி வந்தனர். பயணிகள் வெளியேறிய சிறிது நேரத்திலேயே, பேருந்து முழுமையாக தீ பற்றி எரிந்தது.

பின்னர், விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் போராடி தீயை அணைத்தனர். ஆனால், அதற்குள் பேருந்து தீயில் கருகி எலும்புக்கூடாக்கக் காட்சி அளித்தது.

இதனிடையே, பேருந்தில் தீ பற்றிய நிலையிலேயே பயணிகள் அனைவரும் கீழே இறக்கிவிடப்பட்டால், யாருக்கும் எந்த காயமும் இல்லாமல் அனைவரும் உயிர் தப்பினர். இதனால், உயிர்ச் சேதம் முற்றிலுமாக தவிர்க்கப்பட்டது.

இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார், விசாரணை மேற்கொண்டனர். அப்போது, பேருந்தில் மின் கசிவு ஏற்பட்டு தீ பிடித்திருக்கலாம் என்று முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்தது.