இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் வெளிவந்து பிளாக்பஸ்டர் ஹிட்டான வாரணம் ஆயிரம் திரைப்படத்தின் ரீ-ரிலிஸை கொண்டாடிய ரசிகர்களுக்கு நடிகர் சூர்யா நன்றி தெரிவித்திருக்கிறார். தமிழ் சினிமாவின் ஆகச்சிறந்த நடிகர்களில் ஒருவராகவும் தென்னிந்திய சினிமாவின் முன்னணி நட்சத்திர நடிகராகவும் திகழும் நடிகர் சூர்யா தற்போது இயக்குனர் சிவா இயக்கத்தில் கங்குவா திரைப்படத்தில் நடித்து வருகிறார். ஸ்டுடியோ கிரீன் தயாரிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் இந்த கங்குவா திரைப்படம் 3D தொழில்நுட்பத்தில் உலகம் முழுக்க பத்திற்கும் மேற்பட்ட மொழிகளில் ரிலீஸாகவுள்ளது. அட்டகாசமான அதிரடி பீரியட் ஆக்சன் படமாக உருவாகி வரும் கங்குபா திரைப்படத்தின் முதல் GLIMPSE கடந்த சில தினங்களுக்கு முன்பு நடிகர் சூர்யாவின் பிறந்தநாள் பரிசாக வெளிவந்து ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. முன்னதாக தனது வெற்றி படமான சூரரைப் போற்று திரைப்படத்தின் ஹிந்தி ரீமேக்காக இயக்குனர் சுதா கோங்கரா இயக்கத்தில் அக்ஷய் குமார் கதாநாயகனாக நடிக்கும் புதிய படத்தில் முக்கியமான கௌரவ வேடத்தில் நடித்திருக்கிறார் நடிகர் சூர்யா.

அடுத்ததாக முதல் முறை இயக்குனர் வெற்றிமாறனுடன் வாடிவாசல் படத்தில் கைகோர்க்கிறார். ஜல்லிக்கட்டு பற்றி இதுவரை திரையுலகில் பெரிதும் பேசப்படாத பக்கங்களை பேசும் அழுத்தமான படைப்பாக இயக்குனர் வெற்றிமாறன் உருவாக்கும் இந்த வாடிவாசல் திரைப்படத்திற்காக பிரத்தியேகமாக ஒரு காளையை அனிமேட்ரானிக்ஸ் முறையில் ரோபோவாக பட குழு உருவாக்கி வருகின்றனர். ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கும் வாடிவாசல் திரைப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையே நடிகர் சூர்யாவின் வாரணம் ஆயிரம் திரைப்படத்தின் தெலுங்கு வெர்ஷனான சூர்யா சன் ஆஃப் கிருஷ்ணன் திரைப்படம் தெலுங்கில் தற்போது ரீ-ரிலீசாகி ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது.

கடந்த 2008 ஆம் ஆண்டு வெளிவந்த வாரணம் ஆயிரம் திரைப்படம் திரைப்படம் காலம் கடந்தும் பேசக்கூடிய கிளாசிக் ஹிட்டாக இன்று வரை தமிழ் சினிமா ரசிகர்களால் ரசிக்கப்பட்டு வருகிறது. தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்களில் ஒருவரான இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் சூர்யா, சிம்ரன், சமீரா ரெட்டி, திவ்யா ஸ்பெந்தனா ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்க ஹாரிஸ் ஜெயராஜ் அவர்களின் இசையில் வாரணம் ஆயிரம் படத்தின் பாடல்கள் எல்லாமே ஆல் டைம் ஹிட்டாக இப்போதும் ஃபிரஷ்ஷாக ரசிகர்களின் ஃபேவரட் லிஸ்டில் இருக்கின்றன. சிறந்த படத்திற்கான தேசிய விருதும் பெற்ற வாரணம் ஆயிரம் திரைப்படம் வெளிவந்து 15 ஆண்டுகள் ஆகியிருக்கும் நிலையில் தற்போது இதன் தெலுங்கு வெர்ஷனான சூர்யா சன் ஆஃப் கிருஷ்ணன் திரைப்படம் தற்போது ஆந்திரா தெலுங்கானாவில் ரீ-ரிலீஸ் செய்யப்பட்டு இருக்கிறது. இந்த நிலையில் தற்போது சூர்யா சன் ஆஃப் கிருஷ்ணன் படத்தில் ரீ-ரிலிசை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். அந்த வகையில் தியேட்டரில் "அஞ்சல" பாட்டை தியேட்டரில் ரசிகர்கள் கொண்டாடும் வீடியோவை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்த நடிகர் சூர்யா, "இந்த அன்பு மிகவும் சர்ப்ரைஸ்!! சூர்யா சன் ஆஃப் கிருஷ்ணன் படக்குழுவிடமிருந்து பெரிய நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்." என குறிப்பிட்டு பதிவிட்டு இருக்கிறார். நடிகர் சூர்யாவின் அந்த பதிவு இதோ…