இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் முதல் முறை நடிகர் சூர்யா இணைந்த காக்க காக்க திரைப்படம் வெளியாகி தற்போது 20 ஆண்டுகளை கடந்ததை கொண்டாடும் வகையில் நடிகர் சூர்யா காக்க காக்க ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படங்களை வெளியிட்டு ஸ்பெஷல் ட்வீட் செய்து இருக்கிறார். தமிழ் சினிமாவின் ஆகச்சிறந்த நடிகர்களில் ஒருவராகவும் தென்னிந்திய சினிமாவின் முன்னணி நட்சத்திர நடிகராகவும் திகழும் நடிகர் சூர்யா தற்போது இயக்குனர் சிவா இயக்கத்தில் கங்குவா திரைப்படத்தில் நடித்து வருகிறார். ஸ்டுடியோ கிரீன் தயாரிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் இந்த கங்குவார் திரைப்படம் 3D தொழில்நுட்பத்தில் உலகம் முழுக்க பத்திற்கும் மேற்பட்ட மொழிகளில் ரிலீஸாகவுள்ளது. அட்டகாசமான அதிரடி பீரியட் ஆக்சன் படமாக உருவாகி வரும் கங்குபா திரைப்படத்தின் முதல் GLIMPSE கடந்த சில தினங்களுக்கு முன்பு நடிகர் சூர்யாவின் பிறந்தநாள் பரிசாக வெளிவந்து ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றது.

முன்னதாக தனது வெற்றி படமான சூரரைப் போற்று திரைப்படத்தின் ஹிந்தி ரீமேக்காக இயக்குனர் சுதா கோங்கரா இயக்கத்தில் அக்ஷய் குமார் கதாநாயகனாக நடிக்கும் புதிய படத்தில் முக்கியமான கௌரவ வேடத்தில் நடித்திருக்கும் நடிகர் சூர்யா, அடுத்ததாக முதல் முறை இயக்குனர் வெற்றிமாறனுடன் வாடிவாசல் படத்தில் கைகோர்க்கிறார். ஜல்லிக்கட்டு பற்றி இதுவரை திரையுலகில் பெரிதும் பேசப்படாத பக்கங்களை பேசும் அழுத்தமான படைப்பாக இயக்குனர் வெற்றிமாறன் உருவாக்கும் இந்த வாடிவாசல் திரைப்படத்திற்காக பிரத்தியேகமாக ஒரு காளையை அனிமேட்ரானிக்ஸ் முறையில் ரோபோவாக பட குழு உருவாக்கி வருகின்றனர். எனவே விரைவில் வாடிவாசல் திரைப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என ரசிகர்கள் மிகுந்த ஆவலோடு காத்திருக்கின்றனர்.

இதனிடையே நடிகர் சூர்யாவின் காக்க காக்க திரைப்படம் வெளியாகி 20 ஆண்டுகள் நிறைவடைந்ததை ரசிகர்கள் தற்போது சமூக வலைதளங்களில் கொண்டாடி வருகின்றனர். நடிகர் சூர்யா மற்றும் இயக்குனர் கௌதம் வாசுதேவன் இருவரும் முதல் முறை இணைந்த காக்க காக்க திரைப்படம் இவர்கள் இருவரின் திரைப் பயணத்திலும் மிக முக்கிய திரைப்படமாக அமைந்தது. காக்க காக்க திரைப்படத்திற்கு கிடைத்த வரவேற்கும் வெற்றியும் நடிகர் சூர்யாவின் உழைப்பும் சூர்யாவை தமிழ் சினிமாவின் நட்சத்திர நாயகர்களுக்கான பட்டியலுக்குள் அழைத்துச் சென்றது. அதேபோல் தனக்கென தனி ஸ்டைலில் இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் மின்னலே திரைப்படத்திற்கு பிறகு இயக்கிய இந்த காக்க காக்க திரைப்படம் ரசிகர்களால் அந்த சமயத்தில் மிகவும் கொண்டாடப்பட்டது. இந்த வெற்றியின் காரணமாக தனது அடுத்த திரைப்படத்தில் உலகநாயகன் கமல்ஹாசன் உடன் வேட்டையாடு விளையாடு எனும் மெகா ஹிட் திரைப்படத்தில் இணைந்தார் கௌதம் வாசுதேவ் மேனன் என்பது குறிப்பிடத்தக்கது.

கலைப்புலி எஸ் தானு அவர்களின் தயாரிப்பில் உருவான இந்த காக்க காக்க படத்தில் சூர்யாவுடன் இணைந்து ஜோதிகா கதாநாயகியாக நடிக்க மிரட்டலான வில்லனாக ஜீவன் நடித்திருந்தார். ஆர்.டி.ராஜசேகர் அவர்களின் ஒளிப்பதிவில் ஹாரிஸ் ஜெயராஜ் இசை அமைத்த காக்க காக்க படத்தின் பாடல்கள் இன்றும் ரசிகர்களின் ஃபேவரட் தான். இன்று ஆகஸ்ட் 1ம் தேதியோடு காக்க காக்க திரைப்படம் வெளியாகி 20 ஆண்டுகள் நிறைவடைந்து இருக்கிறது. இந்த நிலையில் இதனை கொண்டாடும் வகையில் நடிகர் சூர்யா, காக்க காக்க திரைப்படத்தின் ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படங்களை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு, “ஒரு படம் எனக்கு எல்லாவற்றையும் கொடுத்தது. அன்புச்செல்வன் எப்போதும் என் இதயத்திற்கு மிகவும் நெருக்கமானவன். காக்க காக்க படத்தின் தொழில்நுட்ப கலைஞர்கள்,முதலில் இந்த படம் குறித்து என்னிடம் பேசிய ஜோதிகா மற்றும் என்னுடன் இணைந்து நடித்த சக நடிகர்கள் உட்பட இளம்கன்றுஸ் எல்லோருக்கும் வாழ்த்துக்கள். நன்றி கௌதம் வாசுதேவ் மேனன் நிறைய நல்ல நினைவுகள்” என குறிப்பிட்டு பதிவிட்டிருக்கிறார். நடிகர் சூர்யாவின் அந்த பதிவு இதோ…