தனது கடின உழைப்பாலும் அசாத்தியமான நடிப்பாலும் சிறந்த நடிகராக மக்களின் மனதை கொள்ளையடித்த நடிகர் சூர்யா தமிழ் சினிமாவில் முன்னணி நட்சத்திர கதாநாயகராக திகழ்கிறார். அந்த வகையில், கடைசியாக கடந்த (2022) ஆண்டு சூர்யா நடிப்பில் வெளிவந்த எதற்கும் துணிந்தவன் திரைப்படத்தை தொடர்ந்து இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்து வெளிவந்த பிளாக்பஸ்டர் ஹிட்டான விக்ரம் திரைப்படத்தில் ரோலக்ஸ் கதாபாத்திரத்தில் முக்கிய கௌரவ வேடத்தில் நடித்தார். சில நிமிடங்கள் மட்டுமே திரையில் தோன்றினாலும் தனது ஆக்ரோஷமான நடிப்பால் ஒட்டுமொத்த ரசிகர்களின் ஆரவாரத்தையும் கவனத்தையும் ரோலக்ஸ் சார் என ஈர்த்தார் சூர்யா. தொடர்ந்து நடிகர் மாதவன் முதல் முறை இயக்குனராக களமிறங்கிய ராக்கெட்ரி - நம்பி விளைவு திரைப்படத்தில் கௌரவ வேடத்தில் நடித்த நடிகர் சூர்யா, தனக்கு முதல் தேசிய விருது பெற்று கொடுத்த சூரரைப் போற்று திரைப்படத்தின் ஹிந்தி ரீமேக்காக இயக்குனர் சுதா கோங்கர இயக்கத்தில் அக்ஷய் குமார் கதாநாயகனாக நடித்து வரும் புதிய படத்திலும் கௌரவ வேடத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்ததாக இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகும் வாடிவாசல் திரைப்படத்தில் சூர்யா கதாநாயகனாக நடிக்க இருக்கிறார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு வாடிவாசல் படத்தின் டெஸ்ட் ஷூட் நடைபெற்ற நிலையில் விரைவில் படப்பிடிப்பு தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையே தனது திரை பயணத்தில் 42 ஆவது திரைப்படமாக சூர்யா நடிக்கும் புதிய திரைப்படத்தை இயக்குனர் சிவா இயக்குகிறார். தனக்கென தனி பாணியில் பக்கா கமர்சியல் திரைப்படங்களை கொடுத்து வரும் இயக்குனர் சிவா இயக்கத்தில் கடைசியாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த அண்ணாத்த திரைப்படத்திற்கு பிறகு, பிரம்மாண்டமான திரைப்படமாக தயாராகும் சூர்யா 42 திரைப்படத்தை ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் தயாரிக்கிறது. 3D தொழில்நுட்பத்தில் UV CREATIONS வழங்க பிரம்மிப்பூட்டும் பீரியட் திரைப்படமாக தயாராகி வரும் சூர்யா 42 திரைப்படத்தை இந்தியாவின் 10 மொழிகளில் பேன் இந்தியா படமாக வெளியிடப்பட குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.

சூர்யாவுடன் இணைந்து பிரபல பாலிவுட் நடிகை திஷா பதானி கதாநாயகியாக நடிக்கும் சூர்யா 42 திரைப்படத்தில் வெற்றி பழனிசாமி ஒளிப்பதிவில், நிஷாத் யூசுப் படத்தொகுப்பு செய்ய, தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். முன்னதாக சூர்யா42 படத்தின் அறிவிப்பு ப்ரோமோ வீடியோ வெளிவந்து ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்ற நிலையில், படத்தின் டைட்டில் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் ப்ரோமோ ஆகியவற்றிற்காக ரசிகர்கள் மிகுந்த ஆவலோடு காத்திருக்கின்றனர். கடந்த சில வாரங்களாகவே சூர்யா 42 படத்தின் டைட்டில் அறிவிப்பு ப்ரோமோ வீடியோ வருகிற தமிழ் புத்தாண்டு வெளியீடாக ஏப்ரல் 14 ஆம் தேதி வெளிவரும் என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்து இருந்த நிலையில், காத்திருந்த ரசிகர்களுக்கு விருந்தாக வருகிற ஏப்ரல் 16ஆம் தேதி காலை 9.05 மணியளவில் சூர்யா 42 திரைப்படத்தின் டைட்டில் அறிவிப்பு வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் வெறும் டைட்டில் மட்டும் அறிவிக்கப்படுமா டைட்டில் அறிவிக்கும் ப்ரோமோ வீடியோவும் வெளியாகுமா என மிகுந்த எதிர்பார்ப்போடு ரசிகர்கள் காத்திருக்கின்றனர். முன்னதாக இந்த அதிரடி அறிவிப்பை அறிவிக்கும் வகையில் சூர்யா 42 படக்குழுவினர் அட்டகாசமான புது போஸ்டர் ஒன்றை வெளியிட்டனர். அந்த போஸ்டர் இதோ…