தமிழ் சினிமாவில் பல தசாப்தங்களாக தமிழ் மக்களை தன் நடிப்பினாலும் தன் நாடக கதை வடிவத்தினாலும் ஈர்க்க வைத்தவர் ஒய்.ஜி மகேந்திரன்.அவர் தொடங்கியுள்ள SARP PRODUCTIONS மற்றும் அதன் மூலம் தயாரிக்கப்படவுள்ள "சாருகேசி" திரைப்படம் குறித்த அறிவிப்பு விழா சமீபத்தில் சென்னை தியாகராய நகரில் உள்ள வாணி மஹாலில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் நடிகர் ரஜினி காந்த் தலைமை விருந்தினராக கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தார். பின் திரைப்படம் குறித்து அறிவித்த பின்னர் ரஜினி காந்த் அன்பு குறித்து பேசிய வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

அதில் அவர், “நான் இந்த வயசுலையும் ஆரோக்கியமா படம் நடித்து வருகிறேன்.அதற்கு காரணம் என் மனைவி லதா தான். நான் நடத்துனராக இருக்கும்போது கூடா நட்பினால் சில கெட்ட பழக்கங்கள் வைத்திருந்தேன் அப்போதே இரண்டு வேளை மாமிசம் சாப்பிடுவேன். தினமும் குடிப்பேன். இரண்டு பாக்கெட்டுக்கு மேல் சிகரெட் குடிப்பேன். அப்போதெல்லாம் சைவப் பிரியர்களை பார்த்தால் எனக்கு பாவமாக தெரியும்.

சிகரெட், குடி பழக்கம், மாமிசம் இது மூன்றும் மோசமான பழக்கம் இவை அளவுக்கு மீறி தொடர்பவர்கள் 60 வயது வரை ஆரோக்கியமா வாழ்ந்ததில்லை.அப்படி வாழ்ந்தாலும் படுக்கையில் தான் வாழ்கிறார்கள். அந்த மாதிரி தீய பழக்கங்களை வைத்திருந்த என்னை அன்பாலே மாற்றியது என் மனைவி லதா தான். என்னை ஒழுக்கமிக்கவனாக மாற்றி, என்னை வாழ வைத்தவர் என் மனைவி லதா. எனது மனைவியை எனக்கு அறிமுகப்படுத்தி வைத்தவர் என்கிற முறையில் அதற்காகவே ஒய்.ஜி மகேந்திரனுக்கு எனது நன்றி" என்று குறிப்பிட்டார்.

மேலும் அவரை தொடர்ந்து மேடையில் பேசிய நடிகர் ஒய் ஜீ மகேந்திரன் “ஒரே ஒரு மக்கள் திலகம், ஒரே ஒரு நடிகர் திலகம், ஒரே ஒரு மெல்லிசை மன்னர், ஒரே ஒரு கவிஞர் கண்ணதாசன் ஒரே ஒரு ரஜினிகாந்த்தான் சூப்பர் ஸ்டாராக இருக்க முடியும்” என்று ரஜினியை புகழ்ந்தார்.

தமிழ் சினிமாவில் மட்டுமல்லாமல் உலகளவில் ரஜினியை பின்தொடரும் ரசிகர் கூட்டம் உள்ளது. ஒவ்வொரு முறை ரஜினிகாந்த் மேடை ஏறும்போதும் தன் கடந்த கால கசப்பு அனுபவத்தை சுட்டிக் காட்டி ஆரோக்கியமான அல்லது ஆன்மீக மாற்றத்தை கொண்டு வர ரஜினிகாந்த் பேசுவது ரசிகர்களை பெருவாரியாக கவரும். அந்த வகையில் இந்த விழாவில் ரஜினி பேசியதும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. இதனால் ரஜினி பேசிய வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.