சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வரவிருக்கும் திரைப்படம் ‘ஜெயிலர்’. நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் பக்கா ஆக்ஷன் திரைப்படமாக உருவாகி உள்ள இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகரித்து வருகின்றது. சன்பிக்சர்ஸ் தயாரிப்பில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் இப்படத்தில் ரம்யா கிருஷ்ணன் முன்னணி வேடத்தில் நடிக்கின்றனர். மேலும் படத்தில் நடிகை தமன்னாவும் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். இவர்களுடன் மலையாள நடிகர் மோகன் லால், கன்னட நடிகர் சிவராஜ்குமார், தெலுங்கு நடிகர் சுனில், ஹிந்தி நடிகர் ஜாக்கி ஷெராஃப், நடிகர் வசந்த் ரவி, யோகி பாபு, மலையாள விநாயகன், ஆடுகளம் கிஷோர் ஆகியோர் நடித்துள்ளனர். பிரம்மாண்டமாக உருவாகியிருக்கும் ஜெயிலர் திரைப்படத்திற்கு ஒளிப்பதிவாளர் விஜய் கார்த்திக் கண்ணன் ஒளிப்பதிவு செய்ய , நிர்மல் படத்தொகுப்பு செய்துள்ளார். மேலும் படத்திற்கு ராக்ஸ்டார் அனிருத் இசையமைக்கிறார். இவரது இசையில் முன்னதாக வெளியான காவாலா. ஹுக்கும் பாடல்கள் இணையத்தில் ரசிகர்களின் வரவேற்பை பெற்று மிகப்பெரிய அளவு டிரெண்டிங்கில் இருந்து வருகிறது. நாளுக்கு நாள் ரசிகர்களின் ஆவலை தூண்டும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் ஜெயிலர் திரைப்படம் வரும் ஆகஸ்ட் 10ஆம் தேதி உலகெங்கும் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

இந்நிலையில் படத்தின் இசை வெளியீட்டு விழா குறித்து அறிவிப்பை வெளியிட்டுள்ளது படக்குழு அறிவிப்பின் படி வரும் ஜூலை 28ம் தேதி சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் பிரம்மாண்டமாக நடைபெறவுள்ளது. இந்த விழாவில் தென்னிந்தியாவின் முன்னணி நடிகர்கள் மற்றும் திரைகலைஞர் பலர் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்ளவிருக்கின்றனர். மேலும் மோகன் லால், சுனில், ஜாக்கி ஷரப், சிவராஜ் குமார் போன்ற இந்தியாவின் முன்னணி திரைபிரபலங்கள் இந்த நிகழ்வில் கலந்து கொள்ளவிருப்பதால் இந்த இசை வெளியீட்டு விழாவினை ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்திருக்கின்றனர். மேலும் இசை வெளியீட்டு விழாவில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் பேச்சுக்கே தனி ஆவல் இருந்து வருவது குறிப்பிடதக்கது.

முன்னதாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் இயக்குனர் சிவா இயக்கத்தில் கடைசியாக வெளியான ‘அண்ணாத்த’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெறாததால் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தனர். அதை ஈடு செய்யும் விதத்தில் தயாரிப்பு நிறுவனம் சன் பிக்சர்ஸ் ஜெயிலர் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவினை பிரம்மாண்டமாக நடத்தவுள்ளது.

ஜெயிலர் படத்தையடுத்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தன் மகளும் இயக்குனருமான ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் வெளியாகவுள்ள ‘லால் சலாம்’ படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார். அதை தொடர்ந்து லைகா ப்ரோடக்ஷன் தயாரிப்பில் ‘தலைவர் 170 படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கிறார். இப்படத்தினை ‘ஜெய் பீம்’ பட இயக்குனர் TJ.ஞானவேல் அவர்கள் இயக்க இருக்கிறார். அதையடுத்து ‘தலைவர் 171’ திரைப்படத்தை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகவிருக்கும் இப்படத்திற்கான வேலையில் லோகேஷ் தற்போது இறங்கியுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.