இந்திய சினிமாவின் முன்னணி நடிகர்களில் மிக முக்கியமான நடிகர்களில் ஒருவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். பல தசாப்தங்கள் கடந்தும் இன்னும் அதே மார்க்கெட்டை தக்க வைத்து கொண்டு ரசிகர்களை உற்சாகபடுத்தி வருகிறார். தற்போது அவர் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் ‘ஜெயிலர்’ திரைப்படத்தில் நடித்து வருகிறார். மிரட்டலான ஆக்ஷன் திரைப்படமாக உருவாகி வரும் இப்படம் வரும் ஆகஸ்ட் 10ம் தேதி பான் இந்திய திரைப்படமாக வெளியாகவுள்ளது. இப்படத்தை தொடர்ந்து லைகா தயாரிப்பில் ஜெய் பீம் இயக்குனர் தசெ ஞானவேல் இயக்கும் புதிய படத்திலும் நடிக்கவுள்ளார். இதனிடையே தனது மகளும் இயக்குனருமான ஐஸ்வர்யா ரஜினிகாந்த் அவர்களின் இயக்கத்தில் நடிகர்கள் விஷ்ணு விஷால், விக்ராந்த் நடித்து வரும் ‘லால் சலாம்’ திரைப்படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்து வருகிறார். இப்படத்திற்கு ஏ ஆர் ரஹ்மான் இசையமைத்து வருகிறார் என்பது குறிப்பிடதக்கது.

கிரிக்கெட் கதைக்களத்தில் உருவாகும் இப்படத்தில் இஸ்லாமிய கதாபாத்திரத்தில் மொய்தீன் பாய் என்ற பெயரில் ரஜினிகாந்த் நடித்து வருகிறார். இது தொடர்பாக படப்பிடிப்பு தற்போது மும்பை பகுதிகளில் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் படப்பிடிப்பு தளத்தில் முன்னாள் இந்திய அணி கிரிக்கெட் கேப்டன் கபில் தேவ் அவர்களை சந்தித்தது குறித்து ரஜினிகாந்த் அவர்கள் தனது சமூக வலை தளத்தில் பதிவிட்டுள்ளார். “இந்தியா கிரிக்கெட் அணிக்கு முதல் முறையாக உலக கோப்பையை வென்று தந்த இந்தியாவின் மிக சிறந்த ஆளுமை, மதிப்புமிக்க அற்புதமான மனிதர் கபில் தேவ் அவர்களுடன் வேலை பார்ப்பதில் மகிழ்ச்சியடைகிறேன். “ என்று குறிப்பிட்டு மொய்தீன் பாய் கெட்டப்பில் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். இதையடுத்து ரசிகர்களால் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களின் பதிவு மிகப்பெரிய அளவு வைரலானது குறிப்பிடத்தக்கது.

மேலும் ரஜினிகாந்த் அவர்களின் பதிவின் அடிப்படையில் முன்னாள் இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் கபில் தேவ் லால் சலாம் படத்தில் நடிப்பது உறுதியாகியுள்ளது. இந்த அப்டேட்டினை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.