இந்தியாவில் கிரிக்கெட் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக இந்திய அணி ஒருநாள் தொடர் தலைமையில் இன்று தொடங்கியுள்ளது. வழக்கமான கேப்டன் இல்லாமல் இரு அணிகளும் முதல் முதலாக மோதிக் கொள்கின்றனர். ஹர்திக் பாண்டியா தலைமையில் விளையாடிக் கொண்டிருக்கும் இந்திய அணி இறுதி இரண்டு போட்டிகளில் ரோஹித் ஷர்மா தலைமையில் விளையாடும் என்பது குறிப்பிடத்தக்கது. முன்னதாக டெஸ்ட் தொடரில் ஆஸ்திரேலிய அணி 1-2 என்ற கணக்கில் இழந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. முதலாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி பகல் - இரவு மோதலாக மும்பை வான்கடே மைதானத்தில் இன்று நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற ஹர்திக் பாண்டியா தலைமையிலான இந்திய அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்து அதன்படி ஆஸ்திரேலியா அணி பேட்டிங்க் செய்து வருகிறது.

இந்நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வான்கடேவில் நடைபெற்று வரும் ஒருநாள் தொடர் கிரிக்கெட் போட்டியினை நேரில் சென்று கண்டு ரசிக்கிறார். மும்பை கிரிக்கெட் சங்க தலைவருடன் இணைந்து போட்டியை நேரில் கண்டு ரசிக்கும் புகைப்படங்களை தனது அதிகாரப் பூர்வ சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளது மும்மை கிரிக்கெட் சங்கம். தற்போது அந்த புகைப்படங்கள் இணையத்தில் ரசிகர்களால் வைரலாகி வருகிறது.

நிகழ்வில் மும்பை கிரிக்கெட் சங்க தலைவர் அமோல் காலே “இந்தியாவின் தலை சிறந்த நடிகர் ரஜினிகாந்த் அவர்களை கிரிக்கெட் போட்டியை நேரில் காண அழைத்திருந்தேன். எங்கள் கோரிக்கையை ஏற்றுக் கொண்டு அவர் இன்று வந்துள்ளார். நீண்ட நாளுக்கு பின் அவரை வாங்கடே மைதானத்திற்கு வருவது எங்களுக்கு கௌரவமாக உள்ளது” என்று தெரிவித்திருந்தார்.

ரஜினிகாந்த் தற்போது நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் ஜெயிலர் திரைப்படத்தில் நடித்து வருகிறார். மிக பிரமாண்டமாக உருவாகி வரும் இப்படம் இந்த ஆண்டு இறுதி அல்லது அடுத்த ஆண்டு துவக்கத்தில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப் படுகிறது. ஜெயிலர் படத்தை தொடர்ந்து அவரது மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கவிருக்கும் லால் சலாம் திரைப்படத்தில் நடிக்கவுள்ளார். அதனை தொடர்ந்து ரஜினிகாந்த் லைகா நிறுவனம் தயாரிப்பில் ஜெய்பீம் இயக்குனர் தசெ ஞானவேல் உருவாகும் புதிய படத்திலும் நடிக்கவிருக்கிறார் என்பது குறிப்பிடதக்கது.