இந்தியாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் நடிகர் ரஜினிகாந்த். பல தாசப்தங்களை கடந்து இன்னும் வசூல் மன்னனாக வலம் வரும் ரஜினிகாந்த் தற்போது இயக்குனர் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் ஜெயிலர் திரைப்படத்தில் நடித்து வருகிறார். மிக பிரம்மாண்டமாக உருவாகி வரும் இப்படத்தில் ரஜினிகாந்த் அவர்களுடன் இணைந்து மலையாள நடிகர் மோகன் லால், கன்னட நடிகர் சிவராஜ் குமார். தெலுங்கு நடிகர் சுனில் மற்றும் பாலிவுட் பிரபலம் ஜாக்கி ஷராப், தமன்னா மற்றும் பலர் நடித்து வருகின்றனர். அனிரூத் இசையில் உருவாகி வரும் இப்படம் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. ரசிகர்களின் எதிர்பார்ப்பில் ஜெயிலர் திரைப்படம் அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகையையொட்டி வெளியாகவுள்ளது மேலும் லைகா தயாரிப்பில் மகள் ஐஸ்வர்யா இயக்கி வரும் 'லால் சலாம்' திரைப்படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவின் முன்னணி தொழிலதிபரான முகேஷ் அம்பானி அவரது மனைவி நீடா அம்பானி இந்தியாவின் தொன்மையான பண்பாட்டை விளக்கும் வகையில் ‘நீடா முகேஷ் அம்பானி கலாசாரம் மையம்’ ஒன்றை மும்பையில் தொடங்கியுள்ளார். கோலாகலமாக நடைபெற்ற இந்த தொடக்க விழாவில் இசை மற்றும் ஆடை அலங்கார கண்காட்சி மற்றும் கண்கவர் கலைநிகழ்சிகள் நடைபெற்றன. இந்த விழாவில் நடிகர் ரஜினிகாந்த் தனது இளைய மகளான சௌந்தர்யா ரஜினிகாந்த் அவர்களுடன் கலந்து கொண்டார்.

இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வந்தது. இந்நிலையில் ரஜினிகாந்த் அந்த பண்பாட்டு மையம் குறித்து இணையத்தில் புகைப்படங்களுடன் புகழ்ந்து பதிவு செய்துள்ளார். அதில்

இந்தியாவின் முதல் ஆடம்பரமான உலகத்தரம் வாய்ந்த பிராட்வே திரையரங்கம் மும்பையில் பிரமாண்டமாக அமைந்துள்ளது. இதை சாத்தியமாக்கிய என் அருமை நண்பர் முகேஷ் அம்பானிக்கு மிக்க நன்றி மற்றும் வாழ்த்துகள்...

நீதா அம்பானி அவர்களை பாரட்ட வார்த்தைகளே இல்லை. இதுபோன்ற அற்புதமான, தேசபக்தி, மனதைக் கவரும் மற்றும் மயக்கும் நிகழ்ச்சிக்காகவும் சிறந்த இந்திய இசை - நாகரீகம் தேசத்திற்கும் உங்களையும் உங்கள் குழுவையும் வாழ்த்துகிறேன். இப்போது.. இந்த அற்புதமான திரையரங்கில் நாடகம் நடிக்க வேண்டும் என்ற ஏக்கம் மற்றும் கனவு ஒன்று உருவாகியிருக்கிறது.. அது விரைவில் நடக்கும் என்று நம்புகிறேன்!!”

இதையடுத்து பிரம்மாண்ட அரங்கம் புகைப்படத்துடன் ரஜினிகாந்த் அவரது பதிவும் வைரலாகி வருகிறது. இந்த தொடக்க விழாவில் சிறப்பு விருந்தினர்களாக ஷாருக் கான், சல்மான் கான், தீபிகா படுகோன், ரன்வீர் சிங், பிரியங்கா சோப்ரா அவரது கணவர் நிக் ஜோன்ஸ், ஐஸ்வர்யா ராய், ஆலியா பட், ஜான்வி கபூர், வருண் தவான், கரீனா கபூர் ஆகியோர் கலந்து கொண்டனர். மேலும் சச்சின் டெண்டுல்கர் அவரது குடும்பத்தினர் மற்றும் பலர் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.