தனது ஆன்மீக பயணத்தில் தற்போது உத்திர பிரதேச மாநிலத்திற்கு சென்றிருக்கும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அந்த மாநிலத்தின் ஆளுநர் அவர்களை சந்தித்ததோடு அந்த மாநிலத்தின் முதல்வருடன் ஜெயிலர் திரைப்படத்தை பார்க்க இருக்கிறார். கிட்டத்தட்ட 48 ஆண்டுகளாக இந்திய சினிமாவின் சூப்பர் ஸ்டாராக விளங்கும் ரஜினிகாந்த் அவர்களின் அடுத்தடுத்த திரைப்படங்கள் மிகப்பெரிய ஆர்வத்தை ரசிகர்கள் மத்தியில் ஏற்படுத்தி இருக்கின்றன. அந்த வகையில் தனது மகளும் இயக்குனருமான ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் கிரிக்கட்டை மையப்படுத்திய ஸ்போர்ட்ஸ் திரைப்படமாக உருவாகி இருக்கும் லால் சலாம் திரைப்படத்தில் மொய்தின் பாய் எனும் மிக முக்கிய கௌரவ வேடத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் நடித்திருக்கிறார். அடுத்ததாக ஜெய் பீம் படத்தின் இயக்குனர் ஞானவேல் இயக்கத்தில் உருவாகும் புதிய தலைவர் 170 திரைப்படத்தில் சூப்பர் ஸ்டார் நடிக்க இருக்கிறார். இந்த படத்தை லைகா ப்ரொடக்ஷன்ஸ் தயாரிக்கிறது. தொடர்ந்து இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தலைவர் 171 படத்தில் ரஜினிகாந்த் நடிக்க இருப்பதாக தெரிகிறது. இது குறித்து அறிவிப்புகளுக்காக மொத்த திரையுலகமும் மிகுந்த ஆவலோடு காத்திருக்கிறது.

முன்னதாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களின் பக்கா ஆக்சன் என்டர்டெய்னர் திரைப்படமாக தற்போது வெளிவந்திருக்கும் ஜெயிலர் திரைப்படம் பிளாக் பாஸ்டர் ஹிட் ஆகியிருக்கிறது. முதல் முறையாக இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இணைந்து நடித்திருக்கும் ஜெயிலர் திரைப்படம் ரசிகர்களின் ஏகோபித்த வரவேற்பால் மிகப்பெரிய வெற்றி பெற்று முதல் வாரத்திலேயே 375.40 கோடி ரூபாய் வசூலித்து மிகப்பெரிய சாதனை படைத்திருக்கிறது. தொடர்ந்து வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் ஜெயிலர் திரைப்படம் தமிழ் சினிமாவின் இண்டஸ்ட்ரி ஹிட்டாக வசூலில் புதிய உச்சத்தை தொடும் என எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக ஜெயிலர் திரைப்படத்தின் ரிலீஸுக்கு ஓரிரு தினங்களுக்கு முன்பு தனது ஆன்மீகப் பயணத்தை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தொடங்கினார். அடிக்கடி இமயமலைக்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சென்று வருவது நாம் அனைவரும் அறிந்ததே. அந்த வகையில் நான்கு ஆண்டுகள் இடைவெளிக்கு பிறகு தற்போது மீண்டும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனது இமயமலை பயணத்தை தொடங்கினார். இந்த ஆன்மீகப் பயணத்தில் பல முக்கிய கோவில்களுக்கும் ஆசிரமங்களுக்கும் ரஜினிகாந்த் சென்ற புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் தொடர்ச்சியாக சமூக வலைதளங்களில் வெளியாகி வந்தன.

நேற்று ராஞ்சி சென்ற சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ராஞ்சியில் அமைந்திருக்கும் யோகதா சத்சங்க ஆசிரமத்திற்கு சென்று அங்கு இருக்கும் அருங்காட்சியகத்தை பார்வையிட்டார். இதனைத் தொடர்ந்து தற்போது உத்திர பிரதேச மாநிலத்தில் தனது ஆன்மீகப் பயணத்தை ரஜினிகாந்த் தொடர்ந்து வருகிறார். அந்த வகையில் இன்று ஆகஸ்ட் 19ஆம் தேதி உத்திரபிரதேசத்தில் உத்திரப் பிரதேச மாநிலத்தின் ஆளுநர் ஆனந்திபெண் பட்டேல் அவர்களை லக்னோவில் இருக்கும் ராஜ் பவனில் சந்தித்தார். தொடர்ந்து இன்று உத்திர பிரதேசம் மாநிலத்தின் முதல்வர் யோகி ஆதியநாத்தை சந்திக்கிறார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். மேலும் யோகி ஆதிநாத் உடன் இணைந்து ஜெயிலர் திரைப்படம் பார்க்க இருக்கும் சூப்பர் ஸ்டார் நாளை இந்தியாவின் முக்கிய திருத்தலங்களில் ஒன்றான அயோத்தியாவை பார்வையிடுகிறார். இது குறித்து இந்தியாவின் முக்கிய செய்தி நிறுவனங்களில் ஒன்றான ANI செய்து நிறுவனத்தின் செய்தியாளரிடம் பேசியபோது பகிர்ந்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது. உத்திர பிரதேசம் மாநில ஆளுநர் மதிப்பிற்குரிய ஆனந்தி பெண் பட்டேல் அவர்களை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் நேரில் சந்தித்த புகைப்படங்கள் இதோ…