என்றென்றும் மக்களின் மனம் கவர்ந்த நாயகனாக திகழும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது ஜெயிலர் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இயக்குனர் நெல்சன் இயக்கத்தின் உருவாகும் ஜெயிலர் திரைப்படத்திற்கு பிறகு தனது மகளும் இயக்குனருமான ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் உருவாகும் லால் சலாம் திரைப்படத்தில் சிறப்பு கௌரவத் தோற்றத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்க இருக்கிறார். இதனைத் தொடர்ந்து தனது திரை பயணத்தில் 170 ஆவது திரைப்படமாக ஜெய் பீம் படத்தின் இயக்குனர் TJ.ஞானவேல் இயக்கத்தில் உருவாக்கும் புதிய திரைப்படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்க இருக்கிறார்.

இந்நிலையில் ஆந்திராவின் விஜயவாடா விமான நிலையத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுக்கு பிரம்மாண்ட வரவேற்பு கொடுத்த நந்தமுரி பாலகிருஷ்ணா அவர்கள் நேரில் வந்து வரவேற்றார். தெலுங்கு சினிமாவின் ஈடு இணையற்ற ஜாம்பவானாக திகழ்ந்த என்.டி.ராமராவ் அவர்களின் நூற்றாண்டு விழா கொண்டாட்டத்திற்காக தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திர நடிகரான சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் தற்போது ஆந்திராவிற்கு சென்று இருக்கிறார். என்.டி.ராமராவ் அவர்களின் மகனான நந்தமுரி பாலகிருஷ்ணா அவர்கள் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுக்கு சிறப்பான வரவேற்பு கொடுத்த விமான நிலைய புகைப்படங்களும் வீடியோக்களும் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.

தெலுங்கு சினிமாவின் மூத்த நடிகரும் ஆந்திராவின் முன்னாள் முதல்வருமான என்.டி.ராமராவ் அவர்களின் இந்த நூற்றாண்டு விழாவில் தெலுங்கு தேசம் கட்சியின் தலைவர் சந்திரபாபு நாயுடு மற்றும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இருவரும் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு விழாவை சிறப்பிக்க உள்ளனர். இந்த விழா விஜயவாடாவில் உள்ள பொரங்கி பகுதியில் இன்று ஏப்ரல் 28ஆம் தேதி நடைபெற இருக்கிறது. முன்னதாக கடந்த ஏப்ரல் 23ஆம் தேதி காணொளி வாயிலாக என்.டி.ராமராவ் அவர்களின் நூற்றாண்டு விழா நடைபெற உள்ளதாக ரசிகர்கள் பொதுமக்கள் என அனைவரைக்கும் பாலகிருஷ்ணா அவர்கள் அழைப்பு கொடுத்திருந்தார். மிக பிரம்மாண்டமாக நடைபெற இருக்கும் இந்த விழா மேடையில் சந்திரபாபு நாயுடு, ரஜினிகாந்த் மற்றும் பாலையா ஆகியோர் மேடையை அலங்கரிக்க உள்ளனர். விஜயவாடா விமான நிலையத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுக்கு நந்தமுரி பாலகிருஷ்ணா வரவேற்பு கொடுத்த புகைப்படங்கள் இதோ…