இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ் கநாயகனாக நடிக்கும் கேப்டன் மில்லர் திரைப்படத்தில் முன்னணி நடிகர் தன் பகுதி படப்பிடிப்பை நிறைவு செய்துள்ளார். இந்திய சினிமாவின் மிக முக்கிய கதாநாயகர்களில் ஒருவராக திகழும் நடிகர் தனுஷ் தமிழ் தெலுங்கு ஹிந்தி ஆங்கிலம் என தொடர்ச்சியாக பல்வேறு மொழிகளில் பல்வேறு திரைப்படங்களில் நடித்து வருகிறார். அந்த வகையில் கடைசியாக தனுஷ் நடிப்பில் தெலுங்கு - தமிழ் என இரை மொழிகளில் வெளிவந்த படம் வாத்தி. பிளாக்பஸ்டர் ஹிட்டாகி 100 கோடி ரூபாய் வசூலித்த வாத்தி திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து மீண்டும் தெலுங்கு மற்றும் தமிழ் என இரு மொழிகளில் தேசிய விருது பெற்ற இயக்குனர் சேகர் கமுலா இயக்கத்தில் பிரம்மாண்டப் படத்தில் தனுஷ் நடித்து வருகிறார். அடுத்ததாக ராஞ்ஜனா (அம்பிகாபதி) படத்தின் இயக்குனர் ஆனந்த் எல் ராய் இயக்கத்தில் மூன்றாவது முறையாக தேரே இஷ்க் மெயின் எனும் புதிய ஹிந்தி படத்தில் நடிக்க இருக்கிறார்.

மேலும் ஒரு தெலுங்கு இயக்குனரின் புதிய படத்திலும் நடிக்க இருக்கும் தனுஷ், விடுதலை பாகம் 2 மற்றும் வாடிவாசல் படத்திற்கு பின் இயக்குனர் வெற்றிமாறன் உடன் வடசென்னை 2 படத்திலும் இணைகிறார். இதனிடையே தனுஷ் நடிப்பில் அடுத்த அதிரடி ஆக்ஷன் திரைப்படமாக தயாராகி வரும் திரைப்படம் தான் கேப்டன் மில்லர். ராக்கி மற்றும் சாணிக் காயிதம் என தனக்கென தனி பாணியில் மிரட்டலான ஆக்சன் படங்களை கொடுத்து வரும் இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷுடன் இணைந்து பிரியங்கா மோகன் கதாநாயகியாக நடிக்க, சந்தீப் கிஷன் முன்னணி வேடத்தில் நடிக்கிறார். மேலும் கன்னட நடிகர் சிவராஜ்குமார், நிவேதிதா சதீஷ், ஜான் கொக்கென், இளங்கோ குமரவேல், பிரபல ஹாலிவுட் நடிகர் எட்வர்ட் சொன்னேன்பிலிக் ஆகியோர் கேப்டன் மில்லர் படத்தில் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்க, ஸ்ரேயாஸ் கிருஷ்ணா ஒளிப்பதிவில் நாகூரான் படத்தொகுப்பு செய்யும் கேப்டன் மில்லர் திரைப்படத்திற்கு ஜீவி பிரகாஷ் குமார் இசையமைக்கிறார்.

1930-களில் நடைபெறும் கதைக்களத்தை கொண்ட பக்கா அதிரடி பீரியட் ஆக்சன் திரைப்படமாக உருவாகும் தனுஷின் கேப்டன் மில்லர் திரைப்படத்தில் படப்பிடிப்பு தென்காசி மற்றும் மதுரையில் நடைபெற்ற போது பல்வேறு விதமான சர்ச்சைகள் வந்த நிலையிலும் தொடர்ந்து படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது. அடுத்த மாதம் 28ஆம் தேதி தனுஷின் பிறந்தநாள் அன்று கேப்டன் மில்லர் திரைப்படத்தின் டீசர் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக ஒரு சில தினங்களுக்கு முன்பு வெளிவந்த கேப்டன் மில்லர் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த நிலையில் நடிகர் சந்திப் கிஷன் கேப்டன் மில்லர் படத்திற்கான தன் பகுதி படப்பிடிப்பை நிறைவு செய்திருப்பதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளிவந்துள்ளது. இயக்குனர் அருண் மாதேஸ்வரன், நடிகர் சந்திப் கிஷன் உடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து இதனை தெரிவித்துள்ளார். அந்தப் பதிவு இதோ…