ரசிகர்களின் ஃபேவரட்டான இயக்குனர் சுந்தர்.C-யின் அரண்மனை 4 திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் ரிலீஸ் தேதி அறிவிப்பு தற்போது வெளிவந்துள்ளது. தமிழ் சினிமாவின் மிக முக்கிய இயக்குனராகவும் நடிகராகவும் திகழும் இயக்குனர் சுந்தர்.C முன்னதாக கடந்த சில வருடங்களுக்கு முன்பு பிரம்மாண்டமான சங்கமித்ரா திரைப்படத்தை இயக்க திட்டமிட்டு இருந்தார். அது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்புகளும் தொடர்ந்து வெளியான நிலையில் சில காரணங்களால் அத்திரைப்படம் தடைபட்டது. சமீபத்தில் இயக்குனர் மணிரத்தினத்தின் பொன்னியின் செல்வன் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றிருக்கும் நிலையில், தற்போது மீண்டும் சங்கமித்ராவை சுந்தர்.C கையில் எடுத்திருக்கிறார். முன்னதாக ஜெயம் ரவி மற்றும் ஆர்யா இணைந்து நடிக்க இருந்த சங்கமித்ரா திரைப்படத்தில் ஜெயம் ரவிக்கு பதிலாக விஷால் இணைய இருப்பதாக தெரிகிறது. சங்கமித்ரா திரைப்படத்தை இயக்குனர் சுந்தர்.C தொடங்க இருப்பது ரசிகர்களிஙடைய உற்சாகத்தை ஏற்படுத்தியிருக்கிறது. நடிகர் ஆர்யா சங்கமித்ரா திரைப்படத்திற்காக WORKOUT செய்யும் வீடியோவை வெளியிட்டு இருப்பதால் விரைவில் சங்கமித்ரா திரைப்படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளிவரும், விரைவில் இதன் படப்பிடிப்பும் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதனிடையே தன்னுடைய ஃபேவரட்டான அரண்மனை சீரிஸின் அடுத்த பாகமாக அரண்மனை 4 படத்தை சுந்தர்.C உருவாக்கி வருகிறார். இயக்குனர் சுந்தர்.Cயின் அரண்மனை சீரிஸ் படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் எப்போதும் தனி ஆர்வம் உண்டு. அந்த வகையில் தற்போது தயாராகி வரும் அரண்மனை 4 திரைப்படத்தில் முன்னணி கதாபாத்திரத்தில் சுந்தர்.C நடிக்க, அவரது தங்கை கதாபாத்திரத்தில் ராஷி கண்ணா நடிக்கிறார். கதையின் நாயகியாக நடிகை தமன்னா நடிக்க, முக்கிய வேடத்தில் யோகி பாபு நடிக்கிறார். மேலும் கே ஜி எஃப்-ல் கருடா கதாபாத்திரத்தில் நடித்த ராமச்சந்திர ராஜு, வைகைப்புயல் வடிவேலு, கே.பாக்யராஜ், மீனா, கோவை சரளா மற்றும் மொட்டை ராஜேந்திரன் ஆகியோரும் முக்கிய வேடங்களில் நடிப்பதாக தெரிகிறது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு அரண்மனை 4 திரைப்படத்தில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதியும் சந்தானமும் இணைந்த நடிப்பதாக பேசப்பட்டது. பின்னர் அடுத்தடுத்து பல படங்களில் நடிப்பதால் கால்ஷீட் காரணமாக விஜய் சேதுபதி அரண்மனை 4 படத்திலிருந்து விலகியதாகவும் தகவல்கள் வெளிவந்தன.

சமீபத்தில் தொடங்கப்பட்ட அரண்மனை 4 திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் தற்போது அரண்மனை 4 திரைப்படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை படக் குழு வெளியிட்டுள்ளது. அடுத்த 2024 ஆம் ஆண்டு பொங்கல் வெளியீடாக அரண்மனை 4 திரைப்படம் வெளிவரும் என தற்போது பட குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். ஏற்கனவே சிவகார்த்திகேயனின் ஏலியன் சயின்ஸ் பிக்சன் படமான அயலான் திரைப்படம் பொங்கல் ரிலீஸ்க்கு ரெடியாகி வரும் நிலையில் அதே பொங்கல் வெளியீடாக சுந்தர்.சி-யின் அரண்மனை 4 திரைப்படமும் வெளிவருவதால் அடுத்த பொங்கல் கொண்டாட்டமாக இருக்கும் என ரசிகர்கள் மிகுந்த ஆவலோடு எதிர்பார்க்கின்றனர். அரண்மனை 4 திரைப்படத்தின் அசத்தலான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இதோ…