தமிழ் ரசிகர்களை தன் நடிப்பின் மூலம் கவர்ந்து குறிப்பிடத்தக்க நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் சுனைனா. காதலில் விழுந்தேன், மாசிலாமணி போன்ற படங்கள் மூலம் தமிழ் சினிமாவில் குறுகிய காலத்திலே பிரபலமடைந்த நடிகை சுனைனா. பின் தொடர்ந்து பல ஹிட் திரைப்படங்களில் நடித்து திரையுலகின் கவனத்தை ஈர்த்தார். அதன்படி பாண்டி ஒலிபெருக்கி நிலையம், திருத்தணி, நீர்ப்பறவை, சமர், காளி, தொண்டன், சில்லு கருப்பட்டி உள்ளிட்ட படங்களில் கதாநாயகியாக நடித்தார். கடைசியாக சுனைனா தமிழில் விஷால் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான ‘லத்தி’ திரைப்படத்தில் நடித்திருப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் சுனைனா முதல் முறையாக கதாநாயகி மையப்படுத்தி உருவாகும் பக்கா திரில்லர் ஆக்ஷன் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். YELLOW BEAR PRODUCTION LLP நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் சதீஷ் நாயர் தயாரித்துள்ள இப்படத்தில் சுனைனா முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்க இவருடன் இணைந்து நிவாஸ் ஆதித்யன், ரித்து மந்த்ரா, ஆனந்த் நாக், தீனா, கஜராஜ், விவேக் பிரசன்னா, பவா செல்லத்துரை, அப்பாணி சரத், ரஞ்சன், பசுபதி ராஜ், ஞானவேல் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இயக்குனர் டோமின் டி சிவா இயக்கியுள்ள இப்படத்திற்கு ஒளிப்பதிவாளர் பவி கே பவன் ஒளிப்பதிவு செய்ய, படத்தொகுப்பாளர் டோபி ஜான் படத்தொகுப்பு செய்துள்ளார். மேலும் இப்படத்திற்கு தயாரிப்பாளர் சதீஷ் நாயர் பாடல்களுக்கு இசையமைத்து படத்தின் பின்னனி இசையிலும் பணியாற்றியுள்ளார்.

முற்றிலும் மாறுபட்ட கதாபாத்திரத்தில் அதிரடி ஆக்ஷன் என்று அசத்தியுள்ள சுனைனாவின் ரெஜினா படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களின் எதிர்பார்ப்பை பெற்றுள்ளது. வரும் ஜூன் 23ம் தேதி உலகமெங்கும் தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் ஆகிய மொழிகளில் வெளியாகவுள்ளது. இந்நிலையில் ரெஜினா படப்பிடிப்பில் நடைபெற்ற சுவாரஸ்யமான நிகழ்வு குறித்த தகவல் இணையத்தில் வெளியாகியுள்ளது.

ரெஜினா படப்பிடிப்பின் போது கேரளாவில் உள்ள தொடுபுழாவை சேர்ந்த மலைபகுதிகளில் முக்கியமான காட்சிகள் படமாக்கப் பட்டது. மலை பகுதியில் வாகனங்கள் செல்ல முடியாது என்பதால் படக்குழுவினர் அப்பகுதியில் சில மைல் தூரம் நடக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

இதில் படக்குழுவினர் சாதனங்கள் உட்பட பொருட்களை தாங்களே சுமந்து சென்றனர். அதில் சுனைனாவும் சில பொருட்களை தானே சுமந்து மலையேறி வந்துள்ளார். சில நாட்கள் மலையில் காட்சியாக்கப் பட்ட நாட்களிலும் சுனைனா இதை தான் செய்துள்ளார். இந்த நிகழ்வு குறித்து சுனைனாவின் அர்பணிப்பு மற்றும் ஆதரவு குறித்து தங்கள் மகிழ்ச்சியினை தெரிவித்துள்ளனர். தற்போது இது குறித்து வெளியான புகைப்படங்கள் இணையத்தில் ரசிகர்களால் வைரலாகி வருகிறது.