அரசுப் பேருந்து மீது இருசக்கர வாகனம் மோதிய விபத்தில் கல்லூரி மாணவர்கள் 2 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிப்புத்தூரில் உள்ள தனியார் கல்லூரியில் 3 ஆம் ஆண்டு படித்து வரும் மணிகண்டன் மற்றும் மகாராஜன் ஆகிய இருவரும் கல்லூரி முடிந்து, இருசக்கர வாகனத்தில் வீட்டிற்குச் சென்றுள்ளனர்.

அப்போது, ஸ்ரீவில்லிப்புத்தூர் அருகே உள்ள கிருஷ்ணன் கோயில் பகுதியில் சென்றுகொண்டிருந்தபோது, கட்டுப்பாட்டை இழந்த இருசக்கர வாகனம், எதிர்பாராத விதமாக எதிரே வந்த அரசு பேருந்து மீது மோதியுள்ளது. இதில் இருசக்கர வாகனத்தில் வந்த 2 மாணவர்களும், படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

விபத்து குறித்து வழக்குப் பதிவு செய்த கிருஷ்ணன் கோயில் போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், உயிரிழந்த இருவரின் உடலையும் மீட்டு, பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.