தனக்கே உரித்தான உடல் மொழியில் நூற்றுக்கணக்கான திரைப்படங்களில் பலவிதமான கதாபாத்திரங்களில் நடித்து மக்களை மகிழ்வித்து வந்த நடிகர் மனோபாலா திடீரென காலமானார். தமிழ் சினிமாவில் நடிகர், இயக்குனர், தயாரிப்பாளர் என பன்முகத் தன்மை கொண்ட கலைஞராக வலம் வந்த நடிகர் மனோ பாலா கல்லீரல் பாதிப்பு காரணமாக உடல்நிலை பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். நடிகர் மனோ பாலாவின் மறைவால் வாடும் அவரது குடும்பத்தினருக்கும் ரசிகர்களுக்கும் கலாட்டா குழுமம் தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறது.

இயக்குனர் இமயம் பாரதிராஜா அவர்களிடம் உதவி இயக்குனராக சேர்ந்து பின்னர் இயக்குனராக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ஊர்க்காவலன், மோகன் நடித்த பிள்ளை நிலா, விஜயகாந்தின் சிறைப் பறவை உட்பட 20க்கும் மேற்பட்ட திரைப்படங்களை இயக்கிய மனோபாலா அவர்கள் தயாரிப்பாளராக இயக்குனர் H.வினோத் இயக்குனராக அறிமுகமாகிய சதுரங்க வேட்டை திரைப்படத்தை தயாரித்துள்ளார். இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் தற்போது தயாராகி வரும் லியோ படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ள நடிகர் மனோபாலா திடீரென தற்பொழுது உயிரிழந்திருப்பது தமிழ் திரையுலகிலும் தமிழக மக்கள் மத்தியிலும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நடிகராக மட்டுமல்லாமல் தென்னிந்திய நடிகர் சங்கத்தின் செயற்குழு உறுப்பினராகவும் பதவி வகித்த நடிகர் மனோபாலா அவர்களின் மறைவுக்கு தற்போது தெனிந்திய நடிகர் சங்கம் தனது இரங்கல் அறிக்கையை வெளியிட்டுள்ளது.

அந்த அறிக்கையில்,

தென்னிந்திய நடிகர் சங்கத்தின் செயற்குழு உறுப்பினரும், திரைப்பட இயக்குநரும், பிரபல நகைச்சுவை நடிகருமான மனோபாலா அவர்கள் தனது 69-ம் வயதில் உடல்நல குறைவால் காலமானார்.

மிகவும் எளிமையான, பண்பான, பாசமிக்க மனிதர். தென்னிந்திய நடிகர் சங்க நடவடிக்கைகளில் தன்னை முழுமையாக ஈடுபடுத்தி கொண்டவர். தென்னிந்திய நடிகர் சங்க உறுப்பினர்களின் சுகதுக்கங்களில் முனைப்புடன் பங்கெடுத்தவர். சங்க பணிகளின் வளர்ச்சிக்கு அயராமல் எப்பொழுதும் இளமையாக சுறுசுறுப்புடன உழைத்து உறுதுணையாக இருந்தவர். சங்க கட்டிடம் கட்டி முடிக்க ஒரு இலட்சியத்துடன் தன்னாலான செயல்பாடுகளை செய்ய ஆர்வம் மிக்கவராகவும் இருந்தார். திரையுலகினருக்கு அவருடைய இழப்பு ஒரு மாபெரும் ஈடு இணையில்லாத இழப்பாகும். அவருக்கு நிகர் அவரே. அவரை இழந்து அவருடைய குடும்பத்தாருக்கும் உறவினர்களுக்கும், திரையுலகினருக்கு, தென்னிந்திய நடிகர் சங்கம் வாடும் ரசிக பெருமக்களுக்கு தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறது. அன்னாரது ஆன்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறோம்.

என தெரிவிக்கப்பட்டுள்ளது. தென்னிந்திய நடிகர் சங்கத்தின் அந்த இரங்கல் அறிக்கை இதோ…