தான் வெறும் நகைச்சுவை நடிகர் மட்டுமல்ல தேர்ந்த நடிகர் என்பதை நிரூபிக்கும் வகையில் விடுதலை பாகம் ஒன்று திரைப்படத்தின் மூலம் ரசிகர்களின் இதயங்களை கொள்ளையடித்த நடிகர் சூரி அடுத்த கதாநாயகனாக நடித்திருக்கும் கொட்டு காளி திரைப்படத்தின் படப்பிடிப்பு குறித்த முக்கிய தகவல் தற்போது வெளியானது. கூட்டத்தில் ஒருவனாக பல படங்களில் சிறுசிறு வேடங்களில் நடித்து தனது கடின உழைப்பால் நகைச்சுவை நடிகராக வளர்ந்து முன்னணி நகைச்சுவை நடிகர் என்ற இடத்திற்கு உயர்ந்த சூரி நடிப்பில் கடைசியாக வெளிவந்த விடுதலை பாகம் 1 திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. தமிழ் சினிமாவின் ஆகச்சிறந்த இயக்குனர்களில் ஒருவராக திகழும் இயக்குனர் வெற்றிமாறன் அவர்களின் விடுதலை திரைப்படத்தில் குமரேசன் எனும் காவலர் கதாபாத்திரத்தில் கதையின் நாயகனாக நடித்த நடிகர் சூரி ஆக்ஷன் காட்சிகளில் துடிப்பாகவும் படம் முழுக்க அந்த கதாபாத்திரமாகவே எதார்த்தமாகவும் நடித்திருந்தார். தொடர்ந்து இயக்குனர் வெற்றிமாறனின் விடுதலை பாகம் 2 மற்றும் இயக்குனர் ராமின் ஏழு கடல் ஏழுமலை ஆகிய திரைப்படங்கள் அடுத்தடுத்து சூரி நடிப்பில் வெளிவர இருக்கின்றன.

விடுதலை திரைப்படத்தின் மூலம் சூரிக்கு கிடைத்த பாராட்டுக்கள் அனைத்தும் தொடர்ந்து இது மாதிரியான படங்களில் நடிகர் சூரி நடிக்க மிகப்பெரிய நம்பிக்கையை கொடுத்ததோடு ரசிகர்களுக்கும் பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தி இருக்கிறது. அந்த வகையில் ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்போடு காத்திருக்கும் திரைப்படம் தான் கொட்டுக்காளி. கூலாங்கல் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர் இயக்குனர் PS.வினோத் ராஜ். நடிகை நயன்தாரா மற்றும் இயக்குனர் விக்னேஷ் சிவனின் ரௌடி பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவான கூலாங்கல் திரைப்படம் உலக அளவில் பல சர்வதேச திரைப்பட விழாக்கள் திரையிடப்பட்டதோடு IFFR TIGER AWARD என்ற சர்வதேச விருதையும் வென்றது. ஆஸ்காருக்காக இந்தியா சார்பில் நேரடியாக தேர்ந்தெடுக்கப்பட்ட படம் கூலாங்கல் தான் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த வரிசையில் தனது அடுத்த படமாக இயக்குனர் PS.வினோத் ராஜ் இயக்கும் கொட்டுக்காளி படத்தில் நடிகர் சூரி கதையின் நாயகனாக நடிக்க, அவரோடு இணைந்து நடிக்கும் பிரபல இளம் மலையாள நடிகை அணா பென் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமாகிறார். இந்தக் கதையில் சேவல் ஒரு முக்கிய அங்கமாக இருக்கும் என தெரிகிறது. ஏனென்றால் கொட்டுக்காளி திரைப்படத்தின் முதல் அறிவிப்பு போஸ்டரிலும் ப்ரோமாவிலும் சேவல் மிக முக்கிய அங்கமாக காண்பிக்கப்பட்டது. நடிகர் சிவகார்த்திகேயன் தனது சிவகார்த்திகேயன் ப்ரொடக்ஷன்ஸ் சார்பில் தயாரித்துள்ள கொட்டுக்காளி படத்தில் சக்திவேல் ஒளிப்பதிவில், கணேஷ் சிவா படத்தொகுப்பு செய்துள்ளார். கடந்த மார்ச் மாதம் இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது.

இந்நிலையில் கொட்டுக்காளி திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது நிறைவடைந்திருப்பதாக படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். மேலும் முழு வீச்சில் போஸ்ட் ப்ரொடக்ஷன் பணிகளை தொடங்க இருப்பதாகவும் அனைவருக்கும் மறக்க முடியாத ஒரு சினிமா அனுபவத்தை கொடுக்க தயாராகி வருவதாகவும் கொட்டுக்காளி பட தயாரிப்பு நிறுவனமான சிவகார்த்திகேயன் ப்ரொடக்சன் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஷூட்டிங் ஸ்பாட்டில் கேக் வெட்டி கொட்டுக்காளி படத்தின் படப்பிடிப்பை படக்குழுவினர் நிறைவு செய்துள்ளனர். அந்த நிகழ்வின் புகைப்படங்கள் இதோ…