இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் வெளிவந்த விடுதலை திரைப்படத்திற்கு பிறகு மீண்டும் நடிகர் சூரி கதாநாயகனாக நடிக்கும் மற்றொரு புதிய திரைப்படத்தின் பட பூஜை நடைபெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தனது திரைப் பயணத்தின் ஆரம்ப கட்டத்தில் பல திரைப்படங்களில் மிகச்சிறிய வேடங்களில் நடித்த நடிகர் சூரி வெண்ணிலா கபடி குழு திரைப்படத்திற்கு பிறகு அனைவராலும் பரோட்டா சூரி என அறியப்பட்டார். அதன் பின்னர் தொடர்ந்து தமிழ் சினிமாவில் தனக்கென தனி ஸ்டைலில் தொடர்ந்து பல படங்களில் நகைச்சுவையில் அசத்தி மக்களை மகிழ்வித்த நடிகர் சூரி தமிழ் சினிமாவின் நட்சத்திர நாயகர்கள் அனைவருடனும் இணைந்து காமெடியில் கலக்கி நட்சத்திர நகைச்சுவை நடிகராக வளர்ந்தார். இதனிடையே தனது வழக்கமான காமெடி கதாபாத்திரங்களில் இருந்து முற்றிலும் மாறுபட்டு இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் நடித்த விடுதலை திரைப்படத்திற்கு பிறகு தான் ஒரு தேர்ந்த நடிகர் என்பதை நிரூபித்திருக்கிறார்.

எழுத்தாளர் ஜெயமோகன் அவர்களின் துணைவன் சிறுகதையை தழுவி 2 பாகங்களாக இயக்குனர் வெற்றிமாறன் உருவாக்கி இருக்கும் இந்த விடுதலை திரைப்படத்தின் முதல் பாகம் கடந்த மார்ச் மாத இறுதியில் வெளிவந்தது. இதில் கதையின் நாயகனாக குமரேசன் என்ற காவலர் கதாபாத்திரத்தில் சூரி நடிக்க மற்றொரு முன்னணி கதாபாத்திரத்தில் பெருமாள் வாத்தியாராக விஜய் சேதுபதி நடித்திருந்தார். நிஜத்திற்கு மிகவும் நெருக்கமான ஒரு படைப்பாக ஒட்டுமொத்த ரசிகர்களின் மனதிலும் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்திய இயக்குனர் வெற்றிமாறன் அவர்களின் விடுதலை திரைப்படம் எக்கச்சக்கமான பாராட்டுகளை பெற்றதோடு நடிகராகவும் சூரி அவர்களுக்கு மிகப் பெரிய புகழை பெற்றுக் கொடுத்தது.

இதனைத் தொடர்ந்து நடிகர் சிவகார்த்திகேயன் தயாரிப்பில் கூழாங்கல் படத்தின் இயக்குனர் PS.வினோத் ராஜ் இயக்கத்தில் கொட்டுக் காளி படத்திலும் கதையின் நாயகனாக சூரி நடித்தார். இதுபோக தமிழ் சினிமாவின் மிக முக்கிய இயக்குனர்களில் ஒருவரான இயக்குனர் ராம் இயக்கத்தில் உருவாகி இருக்கும் ஏழு கடல் ஏழு மலை திரைப்படத்தில் நிவின் பாலி மற்றும் அஞ்சலியுடன் இணைந்து முன்னணி கதாபாத்திரத்தில் நடிகர் சூரி நடித்திருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த வரிசையில் அடுத்ததாக மற்றொரு புதிய திரைப்படத்தில் கதையின் நாயகனாக நடிகர் சூரி நடிக்க இருக்கிறார்.

எதிர்நீச்சல், காக்கிச்சட்டை, கொடி மற்றும் பட்டாஸ் உள்ளிட்ட படங்களை இயக்கிய இயக்குனர் துரை செந்தில்குமார் இயக்கத்தில் உருவாகும் இந்த புதிய படத்தில் கதையின் நாயகனாக சூரி நடிக்க, சசிகுமார் & மலையாள நடிகர் உன்னி முகுந்தன் ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர் என அறிவிக்கப்பட்டுள்ளது. இப்படத்திற்கான கதையை இயக்குனர் வெற்றிமாறன் எழுதியிருப்பதாகவும் இப்படத்தில் சமுத்திரக்கனி மொட்டை ராஜேந்திரன் ஷிவதா நாயர் மற்றும் ரேவதி சர்மா ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிப்பதாகவும் படத்திற்கு கருடன் என பெயரிடப்பட்டிருப்பதாகவும் தகவல்கள் வெளி வருகின்றன. இது குறித்து அறிவிப்புகள் விரைவில் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் இந்த புதிய திரைப்படத்தின் பட பூஜை கும்பகோணத்தில் நடைபெற்றுள்ளது இது குறித்து நடிகர் சூரி தனது ட்விட்டர் பக்கத்தில் படப்பூஜை புகைப்படங்களை வெளியிட்டு, "கதை நாயகனாக நான் நடிக்க இருக்கும் அடுத்த திரைப்படம் உங்கள் அனைவரின் ஆசீர்வாதங்களுடன் கும்பகோணத்தில் இனிதே தொடக்கம் இறைவனுக்கு நன்றி" என பதிவிட்டு இருக்கிறார். நடிகர் சூரியின் அந்த பதிவு இதோ…