அஜித் குமாரின் வாலி, தளபதி விஜயின் குஷி ஆகிய திரைப்படங்களின் மூலம் ரசிகர்களின் இதயங்களை கொள்ளையடித்து பின்னர் நியூ மற்றும் அன்பே ஆருயிரே ஆகிய படங்களை இயக்கி நடித்த எஸ்.ஜே.சூர்யா கடைசியாக இயக்கி நடித்த திரைப்படம் இசை. இதனையடுத்து இவரது இயக்கத்தில் உருவாகும் அடுத்த படத்திற்காக ரசிகர்கள் ஆவலோடு காத்திருக்கும் நிலையில், கில்லர் என்னும் திரைப்படத்தை எஸ்.ஜே.சூர்யா இயக்கி நடிக்க இருப்பதாக அறிவிப்பு வெளியானது. மறுபுறம் நடிகராக பிஸியாக அடுத்தடுத்து பல படங்களில் நடித்து வரும் எஸ்.ஜே.சூர்யா எப்போது கில்லர் படத்தை தொடங்குவார் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டிருக்கும் நிலையில், தற்போது அது குறித்து மனம் திறந்து பேசி இருக்கிறார். முன்னதாக இயக்குனர் ராதா மோகன் இயக்கத்தில் எஸ்.ஜே.சூர்யா கதாநாயகனாக நடித்திருக்கும் பொம்மை திரைப்படம் நாளை ஜூன் 16ஆம் தேதி உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீஸ் ஆகிறது.

இந்த நிலையில் நமது கலாட்டா பிளஸ் சேனலில் திரு பரத்வாஜ் ரங்கன் அவர்களோடு சிறப்பு நேர்காணலில் பேசிய எஸ்.ஜே.சூர்யா அவர்கள் பல சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்து கொண்டார். அந்த வகையில் தொடர்ச்சியாக பல படங்களில் தற்போது நடித்து வருவதாக தெரிவித்த எஸ்.ஜே.சூர்யா அவர்களிடம், “இப்போது உங்களுக்கு இயக்க வேண்டும் என்ற எண்ணமே இல்லையா?” எனக் கேட்டபோது, “கில்லர் படத்தை இயக்கப் போகிறேன். என்னை நானே இயக்கக்கூடிய ஒரு படம். அதற்கான ப்ரீ ப்ரொடக்ஷன் பணிகள் அனைத்தும் கிட்டதட்ட முடிந்தது. எனது கைவசம் நடிக்க இருக்கும் படங்கள் முடித்தவுடன் அடுத்து அதுதான். இந்தப் படங்கள் எல்லாம் முடிப்பதற்காக தான் காத்திருக்கிறேன். இவை முடிந்தவுடன் அதை ஆரம்பித்து விடுவேன். அதற்கெல்லாம் பொம்மை வலிமை கொடுக்க வேண்டும். உங்களுக்கென சில ரசிகர்கள் இருக்கிறார்கள் அது போக கலாட்டாவிற்கென்று விரும்பிகள் இருக்கிறார்கள். இரண்டு அபிமானிகளுக்கும் நேயர்களுக்கும் சேர்த்து நான் ஒரு வேண்டுகோள் வைக்கிறேன். இந்த நிகழ்ச்சியை நீங்கள் பார்க்கும் போது இந்த எஸ்.ஜே.சூர்யாவிற்காக… ஒரு குறுகிய காலத்தில் நான் இந்த படத்தை திட்டமிட்டு இருக்கிறேன். இந்த நிகழ்ச்சியை பார்த்து விட்டு எஸ்.ஜே.சூர்யாவிற்காக நீங்கள் செய்ய வேண்டியது என்னவென்றால், உங்கள் போன் எடுத்து ஒரு பத்து நண்பர்களுக்கு வருகிற ஜூன் 16ஆம் தேதி எஸ்.ஜே.சூர்யாவின் பொம்மை படம் ரிலீஸ் ஆகிறது என தெரியப்படுத்துங்கள். முடிந்தால் அவர்களை படம் பார்க்கச் சொல்லுங்கள் நீங்களும் முடிந்தால் பாருங்கள். அதேபோல் அந்த பத்து பேரை இன்னும் 10 பேருக்கு சொல்ல சொல்லுங்கள். இதை நீங்கள் செய்தீர்கள் என்றால் அடுத்த ஐந்து நாட்களுக்குள் இந்த படத்திற்கான ஒரு நல்ல ரிலீசும் அதற்கான ஒரு நல்ல வைப்ரேஷனும் சரியாக மொத்த தமிழ்நாடுக்கும் சென்று சேரும் என நினைக்கிறேன். எனவே இதை நான் உங்களிடம் வேண்டுகோளாக வைக்கிறேன். கண்டிப்பாக இது உதவும். நம்ம மக்கள் தானே! நான் வேறு யாரிடமா சொல்கிறேன். நம்ம மக்கள் நம்மை நேசிக்கும் மக்கள்!” என தெரிவித்துள்ளார். இன்னும் பல சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்திருக்கும் எஸ்.ஜே.சூர்யாவின் அந்த முழு பேட்டி இதோ…