நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் கடைசியாக வெளிவந்த மாவீரன் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு பெற்று சூப்பர் ஹிட் ஆனது. மண்டேலா படத்தின் இயக்குனர் மடோன் அஸ்வின் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வெளிவந்த மாவீரன் திரைப்படம் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் மாவீரன் திரைப்படத்தை பார்த்து சிவகார்த்திகேயன் மற்றும் மாவீரன் படக்குழுவினரை தொலைபேசியில் அழைத்து பாராட்டி இருக்கிறார். இந்த நிலையில் ரஜினிகாந்த் அவர்களின் பாராட்டுக்கு நன்றி தெரிவித்த சிவகார்த்திகேயன் தற்போது வீடியோ ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். அந்த வீடியோவில்,

“எல்லோருக்கும் வணக்கம் இந்த வீடியோவை நேற்று போட்டிருக்க வேண்டும் இங்கே காஷ்மீரில் இரவு பகலாக படப்பிடிப்பு நடக்கிறது அதனால் கொஞ்சம் தாமதம். முதலில் மாவீரன் திரைப்படம் 25 நாட்கள் வெற்றிகரமாக கடந்திருக்கிறது. இவ்வளவு பெரிய பாக்ஸ் ஆபீஸ் வெற்றியையும் இவ்வளவு பாராட்டுகளையும் கொடுத்த எல்லோருக்கும் பெரிய நன்றி. படம் பார்த்த அத்தனை பேருக்கும் நன்றி. எல்லா நடிகர்களுடைய ரசிகர்கள், பார்வையாளர்கள், எல்லா மாநிலங்களிலும் இருக்கும் சினிமா ரசிகர்கள், ஊடகத்துறையினர் எல்லோருக்கும் நன்றி. என்னுடைய சகோதர சகோதரிகளுக்கு ஸ்பெஷல் நன்றிகள். இந்த வீடியோ இன்னொரு முக்கியமான விஷயத்தை சொல்வதற்காக தான். சூப்பர் ஸ்டார் தலைவர் ரஜினிகாந்த் சார் மாவீரன் திரைப்படம் பார்த்துவிட்டு போன் செய்து பாராட்டினார். எங்கள் மொத்த படக்குழுவினருக்கும் ஸ்பெஷலான ஒரு உணர்வு. எனக்கு ரொம்ப ரொம்ப ஸ்பெஷல். ஜெயிலர் இசை வெளியீடு இருக்கிறது. படத்தின் ரிலீஸ் இருக்கிறது. மாவீரன் திரைப்படத்தின் ரிலீஸ் போது அவர் ஊரில் இல்லை. மிஸ் ஆகிவிடும் தலைவர் பார்க்க முடியாதே என நினைத்திருந்தேன். இவ்வளவு பரபரப்புக்கு நடுவிலும் நேரம் ஒதுக்கி மாவீரன் படம் பார்த்து எனக்கு போன் செய்து வாழ்த்தியது எனக்கு மட்டும் இல்லாமல் என் படக்குழுவில் இருப்பவர்களுக்கும் வாழ்த்தியது, “தலைவா யூ ஆர் ஆல்வேஸ் கிரேட்…” போன் பண்ணி பேசிய போது, “சிவா நான் மொத்தமாக என்ஜாய் பண்ணேன் ரொம்ப கிராண்ட் ஆக இருந்தது. ரொம்ப நன்றாக நடித்திருந்தீர்கள். கதை வித்தியாசமாக இருந்தது, வித்தியாச வித்தியாசமாக கதைகளை பிடிக்கிறீர்கள்.” எனக் கேட்டார். எனக்கு அப்படியே ஜிலுஜிலு என ஆகிவிட்டது. தேங்க்யூ சோ மச் தலைவா உங்களுடைய மிகப்பெரிய ரசிகன் எப்போது கேட்டாலும் எத்தனை முறை கேட்டாலும் சொல்லுவேன் உங்களை பார்த்து சினிமாவிற்குள் வந்தவன். உங்களுக்கு பேனர் வைத்து உங்களுடைய சினிமாக்களை கொண்டாடியவன். அப்படி இருக்கும் என்னுடைய படம் பார்த்து நீங்கள் வாழ்த்துகிறீர்கள் என்பது எனக்கு லைஃப் டைம் செட்டில்மெண்ட் தான். ஒவ்வொரு முறை நீங்கள் போன் செய்யும்போதும் எனக்கு அப்படித்தான் இருக்கும். இதே சந்தோஷத்தில் இன்னொரு விஷயத்தையும் பகிர்ந்து கொள்கிறேன். நாளைக்கு (ஆகஸ்ட் 10) எல்லோருக்குமே இன்னொரு ஸ்பெஷல் நாள். ஜெயிலர் திரைப்படத்தின் ரிலீஸ் நாள். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களின் சரித்திரத்தில் இன்னும் ஒரு சிறப்பான நாளாக நிச்சயமாக இருக்கும். தலைவா உங்களை வாழ்த்த வயதில்லை வணங்குகிறோம். என்றென்றும் உங்கள் ரசிகன்.. நீங்கள் இன்னும் எங்களை என்டர்டெய்ன் செய்து கொண்டே இருக்க வேண்டும். நாங்களும் உங்களை ரசித்து கொண்டாடிக் கொண்டே இருப்போம். ஒட்டு மொத்த ஜெயிலர் பட குழுவிற்கும் என்னுடைய வாழ்த்துக்கள். ஒரு மெகா பிளாக்பஸ்டர் படமாக இந்த ஜெயிலர் இருக்கும் நன்றி!” என தெரிவித்துள்ளார். நடிகர் சிவகார்த்திகேயன் பேசிய அந்த முழு வீடியோவை கீழே உள்ள லிங்கில் காணலாம்.