தமிழ் திரையுலகில் ரசிகர்களிடையே அதிகம் எதிர்பார்ப்புகளை கொண்டு வெளியாகவிருக்கும் திரைப்படம் சிவகார்த்திகேயனின் ‘மாவீரன்’. முன்னதாக யோகி பாபு நடிப்பில் வெளியாகி உலக மேடைகளில் அலங்கரித்த ‘மண்டேலா’ திரைப்படத்தின் இயக்குனர் மடோன் அஷ்வின் இயக்கத்தில் உருவான இப்படத்தில் மாறுபட்ட கதாபாத்திரத்தில் சிவகார்த்திகேயன் ஹீரோவாக நடிக்க அவருக்கு ஜோடியாக பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் அவர்களின் மகளும் விருமன் படத்தின் நாயகியுமான அதிதி ஷங்கர் நடித்துள்ளார். மேலும் படத்தில் மிரட்டலான வில்லனாக இயக்குனர் மிஷ்கின் நடிக்க அவருடன் மிக முக்கியமான கதாபாத்திரத்தில் நடிகை சரிதா நடித்துள்ளார். மேலும் இவர்களுடன் யோகி பாபு, மோனிஷா, தெலுங்கு நடிகர் சுன்ல் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

சாந்தி டாக்கீஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு ஒளிப்பதிவாளர் விது அய்யனா ஒளிப்பதிவு செய்ய ஃபிலோமின் ராஜ் படத்தொகுப்பு செய்கிறார். மேலும் படத்திற்கு பரத் ஷங்கர் இசையமைக்கிறார். இவரது இசையில் முன்னதாக வெளியான மூன்று பாடல்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து டிரெண்ட்டிங்கில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

பக்கா ஆக்ஷன் காட்சிகளுடன் பேண்டசி கலந்த திரைக்கதையுடன் உருவான மாவீரன் படத்தின் டிரைலர் முன்னாதாக வெளியாகி ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. இந்த டிரைலரில் சிவகார்த்திகேயன் அடிக்கடி வானத்தை பார்ப்பதும் அதன்பின் அப்பாவியான அவர் அதிரடி நாயகனாக மாறுவதும் போன்ற சுவாரஸ்யம் நிறைந்த விஷயம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்திருந்தது. அதன்படி படக்குழுவினரின் தகவலின் படி வானத்தில் இருந்து ஒரு குரல் கேட்க அதன்படி சிவகார்த்திகேயன் அப்படி மாறுகிறார் என்ற அட்டகாசமான விஷயம் தெரியவந்தது. அதையடுத்து ரசிகர்கள் சர்ப்ரைஸ் குரல் யாராக இருக்கும் என்று இணையத்தில் பல கருத்துகளை பகிர்ந்து வந்தனர். தற்போது அந்த சர்ப்ரைஸ் குரல் யார் என்று படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.

அறிவிப்பின் படி சிவகார்த்திகேயனின் மாவீரன் திரைப்படத்தில் சிறப்பு குரலாய் ஒலிக்கவிருக்கும் குரல் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி என்பதை சிறப்பு வீடியோவுடன் அறிவித்துள்ளது படக்குழு. மேலும் இது குறித்து நடிகர் சிவகார்த்திகேயன் தனது ட்விட்டர் பக்கத்தில்,

“எனது அன்பு சகோதரா விஜய் சேதுபதி, இந்த தன்மைக்கு நன்றி.. மாவீரனில் உங்கள் குரலோடு இணைவதில் மிக்க மகிழ்ச்சி” என்று குறிப்பிட்டுள்ளார். இதையடுத்து சிவகார்த்திகேயனின் பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது. அட்டகாசமான சர்ப்ரைஸ்களுடன் உருவாகியுள்ள மாவீரன் திரைப்படம் வரும் ஜூலை 14ம் தேதி தமிழில் மாவீரன் என்றும் தெலுங்கில் மகாவீரடு என்ற பெயரிலும் உலகம் முழுவதும் வெளியாகவுள்ளது.