தமிழ் சினிமாவின் முன்னணி கதாநாயகர்களில் ஒருவரான நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் தற்போது தயாராகி வரும் மாவீரன் திரைப்படம் வருகிற ஆகஸ்ட் 11ம் தேதி உலகம் எங்கும் திரையரங்குகளில் ரிலீஸாகவுள்ளது. முன்னதாக சிவகார்த்திகேயன் நடிப்பில் பிரம்மாண்டமான ஏலியன் சயின்ஸ் ஃபிக்சன் திரைப்படமாக தயாராகி வருகிறது அயலான் திரைப்படம். இன்று நேற்று நாளை படத்தின் இயக்குனர் R.ரவிக்குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் உடன் இணைந்து நடிகை ரகுல் ப்ரீத் சிங் கதாநாயகியாக நடித்துள்ள அயலான் திரைப்படத்தில், இஷா கோபிகர், சரத் கேல்கர், பானுப்பிரியா, யோகி பாபு, கருணாகரன், பால சரவணன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். 24AM ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்க, KJR ஸ்டுடியோஸ் நிறுவனம் வழங்கும் அயலான் திரைப்படத்திற்கு நீரவ் ஷா ஒளிப்பதிவில் ரூபன் படத்தொகுப்பு செய்ய இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். நீண்ட காலமாக அயலான் படத்திற்காகவும் அதன் அறிவிப்புகளுக்காகவும் ரசிகர்கள் ஆவலோடு காத்திருந்த நிலையில், தயாரிப்பு நிறுவனத்தின் சார்பில் தற்போது அதிகாரப்பூர்வ அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில்,

சிவகார்த்திகேயன் மற்றும் ரகுல் ப்ரீத் சிங் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ள, ஆர். ரவி குமார் இயக்கத்தில், ஏ.ஆர்.ரஹ்மான் இசையில், எங்களின் பிரம்மாண்ட படைப்பு 'அயலான்' பற்றிய புதிய அறிவிப்பை வெளியிடுவதில் நாங்கள் பெரும் மகிழ்ச்சியடைகிறோம்.

இந்த திரைப்படத்தை இடைவிடாத கடின உழைப்பை செலுத்தி படமாக்கியுள்ளோம். மேலும் பல தடைகளை தாண்டி, நாளை ஏப்ரல் 24, 2023 காலை 11:04 மணிக்கு ‘அயலான்' அறிவிப்பை வெளியிடுவதில் மகிழ்ச்சி அடைகிறோம்.

"அயலான்" திரைப்படத்தின் தரத்தில் சமரசம் செய்ய விரும்பாத நாங்கள், படத்தின் CGI காட்சிகளுக்கு பெரும் மெனக்கெடலுடன் பணி புரிந்துள்ளோம். அயலான், ஒரு பான்-இந்தியன் திரைப்படத்திற்கு அதிக எண்ணிக்கையிலான CGI காட்சிகளைக் கொண்டிருக்கும் திரைப்படமாக உருவாகியுள்ளது. திரைப்படம் கச்சிதமாக முழுமையடைய எங்களுக்கு போதிய நேரம் தேவைப்பட்டது. திரைப்படம் முழுவதும் வரும் வேற்றுகிரகவாசி கதாபாத்திரம் அனைவரும் விரும்பும் வகையில் காட்சிப் படுத்தபட்டுள்ளது. மேலும், 4500+ VFX காட்சிகளைக் கொண்ட இந்தியசினிமாவின் முதல் முழு நீள லைவ்-ஆக்சன் திரைப்படமாக 'அயலான்' இருக்கும் என்பதை உங்களுக்குத் தெரிவிப்பதில் எங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. இந்த நேரத்தில், பல ஹாலிவுட் திரைப்படங்களின் CG-க்குப் பின்னால் உள்ள Phantom FX நிறுவனத்திற்கு, அவர்களது அளப்பரிய CG பணிக்காக நன்றியையும் தெரிவிக்க விரும்புகிறோம்.

உங்களது பொறுமை மற்றும் இடைவிடாத ஆதரவிற்காக அனைத்து ரசிகர்களுக்கும் நன்றி தெரிவிக்க விரும்புகிறோம். உங்களது எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யும் திரைப்படமாக அயலான் இருக்கும் என்று நாங்கள் உறுதியளிக்கிறோம். நாளைய அயலான் அப்டேட் நிச்சயமாக உங்களை மகிழ்விக்கும்.
'அயலான்' மூலம் கற்பனைக்கு அப்பாற்பட்ட, அதிசயங்கள் நிறைந்த புதிய
உலகத்திற்கு செல்ல தயாராகுங்கள்!

என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே நாளை ஏப்ரல் 24 ஆம் தேதி காலை வெளிவரும் சிவகார்த்திகேயனின் அயலான் படத்தின் அறிவிப்புக்காக ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்தோடு காத்திருக்கின்றனர். அந்த அறிக்கை இதோ…