நடிகர் சிவகார்த்திகேயனின் திரை பயணத்தில் அவரது நடிப்பிற்கு தரமான பாராட்டுகளை மாவீரன் திரைப்படம் பெற்றுக் கொடுத்திருப்பது குறித்து மாவீரன் திரைப்படத்தின் நன்றி கூறும் விழாவில் நடிகர் சிவகார்த்திகேயன் பேசியிருக்கிறார். சின்னத்திரையில் இருந்து தனது பயணத்தை தொடங்கி தற்போது வெள்ளித்திரையில் படிப்படியாக வளர்ந்து உச்ச நட்சத்திர நாயகர்களில் ஒருவராக முன்னேறி இருக்கும் நடிகர் சிவகார்த்திகேயன், தற்சமயம் உலகநாயகன் கமல்ஹாசன் அவர்களின் தயாரிப்பில் இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவாகி வரும் SK21 படத்தில் நடித்து வருகிறார். முன்னதாக இயக்குனர் R.ரவிக்குமார் இயக்கத்தில் ஏலியன் சயின்ஸ் பிக்சன் திரைப்படமாக உருவாகி இருக்கும் அயலான் திரைப்படம் சிவகார்த்திகேயன் நடிப்பில் வருகிற தீபாவளி வெளியீடாக ரிலீஸாக உள்ளது.

இதனிடையே மண்டேலா படத்தின் இயக்குனர் மடோன் அஸ்வின் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் கதையின் நாயகனாக நடித்திருக்கும் இந்த மாவீரன் திரைப்படத்தில் மிஷ்கின் அதிதி சங்கர் யோகி பாபு சரிதா ஆகியோர் மிக முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். சாந்தி டாக்கீஸ் நிறுவனம் தயாரிக்க ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் வெளியிட கடந்த ஜூலை 14-ஆம் தேதி உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீஸ் ஆகியிருக்கும் மாவீரன் திரைப்படம் இதுவரை பாக்ஸ் ஆபிஸில் 50 கோடி ரூபாய் வரை வசூலித்திருப்பதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.

இந்த நிலையில் மாவீரன் திரைப்படத்தின் வெற்றிக்கு ஊடகத்திற்கும் ரசிகர்களுக்கும் நன்றி தெரிவிக்கும் வகையில் படக் குழுவினர் விழா ஒன்றை ஏற்பாடு செய்தனர். இந்த விழாவில் பேசிய நடிகர் சிவகார்த்திகேயன் பல முக்கிய விஷயங்களை பகிர்ந்தார். அப்படி பேசுகையில், “நல்ல இயக்குனர்கள் நினைத்தால் யாரை வேண்டுமானாலும் நல்ல நடிகர்களாக மாற்றலாம். எனக்கு அப்படி மடோன் அஸ்வின் கிடைத்திருக்கிறார். இதற்கு முன்பு எனக்கு வாய்ப்பு கொடுத்த அத்தனை இயக்குனர்களும் ஏதாவது ஒரு பிளஸ்-ஐ எடுத்து வந்து ரசிகர்களிடம் சேர்க்க முயற்சிகளை செய்திருக்கிறார்கள். என்னை அறிமுகப்படுத்திய பாண்டிராஜ் சாரில் இருந்து எல்லா இயக்குனர்களுமே என்னிடமிருந்து ஏதோ ஒரு சிறந்ததை மக்களுக்கு கொடுக்க வேண்டும் என்றுதான்... என்னுடைய கம்ஃபர்ட் ஸோனில் இருந்து மொத்தமாகவே உடைத்து, இந்தப் படத்தில் எந்த இடத்திலும் நான் எந்த காமெடியும் பண்ண வில்லை. எந்த பஞ்சு வரிகளோ, கவுண்டர்களோ அடிக்கவில்லை. எமோஷனல் காட்சிகள் அவ்வளவு இருக்கின்றன. மேலும் ஆக்ஷன்... கடைசியில் நிறைய ஆக்சன் இருக்கிறது. இது எல்லாவற்றையும் என்னால் பண்ண முடியும் என்பதை நம்பிக்கை வைத்து அதை கதையில் எழுதிய மடோன் அஸ்வின் பிரதர் உங்களுக்கு என்னுடைய முதல் நன்றி. ஏனென்றால் நான் சில வருடங்களுக்கு முன்பு ஒரு படம் பண்ணி இருந்தேன் அப்போது ஒரு தளத்தில் வந்த விமர்சனம், “வெறும் கெட்டப் மாற்றுவது எல்லாம் நடிப்பா?” என்பது தான் விமர்சனமாக இருந்தது. இன்று அதே தளத்தில் வந்த விமர்சனத்தில் “வெல் டன் SK” என வந்திருக்கிறது. நல்லா நடித்திருக்கிறீர்கள் என வந்திருக்கிறது. இதை நான் மிகவும் ஊக்குவிப்பு கொடுப்பதாக பார்க்கிறேன்.” என சிவகார்த்திகேயன் தெரிவித்திருக்கிறார். இன்னும் சுவாரசியமான பல தகவல்களை பகிர்ந்து கொண்ட நடிகர் சிவகார்த்திகேயன் பேசிய அந்த முழு வீடியோ இதோ…