கடந்த மாதம் ஜூலை 17ல் உலகமெங்கும் ரசிகர்களின் எதிர்பார்ப்பின் மத்தியில் தமிழ் மற்றும் தெலுங்கில் வெளியான திரைப்படம் ‘மாவீரன்’. மண்டேலா பட இயக்குனர் இயக்குனர் மடோன் அஷ்வின் இயக்கத்தில் உருவான இப்படத்தில் சிவகார்த்திகேயன் மாறுபட்ட கதாபாத்திரத்தில் ஹீரோவாக நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக அதிதி ஷங்கர் நடிக்க மேலும் இவர்களுடன் இயக்குனர் மிஷ்கின், சரிதா, யோகி பாபு, தெலுங்கு நடிகர் சுனில், மோனிஷா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். மேலும் படத்தில் கூடுதல் சிறப்பாக மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இப்படத்திற்கு சிறப்பு கதாபாத்திரத்திற்காக குரல் கொடுத்துள்ளார்.

சாந்தி டாக்கீஸ் நிறுவனம் தயாரிப்பில் உருவான இப்படத்திற்கு ஒளிப்பதிவாளர் விது அய்யனா ஒளிப்பதிவு செய்ய ஃபிலோமின் ராஜ் படத்தொகுப்பு செய்துள்ளார். மேலும், பரத் ஷங்கர் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். மாறுபட்ட கதைகளத்தில் பேண்டசி ஆக்ஷன் திரைப்படமாக உருவாகி திரையரங்குகளில் வெளியான மாவீரன் திரைப்படம் ரசிகர்களால் வெகுவிமர்சியாக கொண்டாடப்பட்டது. எதிர்பார்ப்பின் மத்தியில் கொண்டாட்டங்களுடன் வெளியான இப்படம் நான்காவது வாரத்தையடுத்து திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும். மேலும் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் மிகப்பெரிய வெற்றியை பெற்றது.

இதையடுத்து சிவகார்த்திகேயனின் மாவீரன் படத்தின் ஒடிடி ரிலீஸ் குறித்து படக்குழு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அறிவிப்பின் படி, வரும் ஆகஸ்ட் 11ம் தேதி அமேசான் பிரைம் தளத்தில் மாவீரன் திரைப்படம் வெளியாகவுள்ளது. இந்த அறிவிப்பினை ரசிகர்கள் தற்போது கொண்டாட்டத்துடன் பகிர்ந்து வருகின்றனர்.

தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் ஹிட் அடித்த மாவீரன் படத்தையடுத்து சிவகார்த்திகேயன் நடிப்பில் நீண்ட நாளுக்கு முன் உருவாகி தற்போது VFX காட்சி வேலையில்ன் இருக்கும் ‘அயலான்’ படம் தீபாவளி பண்டிகையையொட்டி வெளியாகவுள்ளது. இன்று நேற்று நாளை இயக்குனர் R ரவிகுமார் இயக்கத்தில் ஏலியன் கதைக்களத்தில் உருவாகிய அயலான் படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் தனி எதிர்பார்ப்பு இருந்து வருகிறது. இப்படத்தையடுத்து தற்போது சிவகார்த்திகேயன் உலகநாயகன் கமல் ஹாசனின் ராஜ் கமல் ஃபிலிம் இன்டர்நேஷனல் தயாரிப்பில் SK21 திரைப்படத்தில் நடித்து வருகிறார். இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் அதிரடி ஆக்ஷன் திரைப்படமாக உருவாகும் இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக சாய் பல்லவி நடித்து வருகிறார். இதனையடுத்து இந்திய சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவரான இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் அவர்களோடு புதிய படத்தில் சிவகார்த்திகேயன் இணைய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.