தனது திரைப் பயணத்திலேயே முதல் முறையாக தனது நடிப்பை குறிப்பிட்டு வாழ்த்தியது மாவீரன் திரைப்படத்திற்காக தான் என படத்திற்கான வெற்றிக்கு நன்றி தெரிவிக்கும் விழாவில் நடிகர் சிவகார்த்திகேயன் மனம் திறந்து பேசி இருக்கிறார். தமிழ் சினிமா ரசிகர்களின் மனம் கவர்ந்த கதாநாயகர்களில் ஒருவராக உச்சத்தை நோக்கி நகர்ந்து வரும் நடிகர் சிவகார்த்திகேயன் அடுத்ததாக இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் உடன் புதிய படத்தில் இணை இருப்பதாக தெரிகிறது. அது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் விரைவில் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்சமயம் இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உலகநாயகன் கமல்ஹாசனின் ராஜ்கமல் ஃபிலிம் இன்டர்நேஷனல் தயாரிப்பில் உருவாகும் SK21 படத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வருகிறார்.

முன்னதாக நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் கடைசியாக வெளிவந்த பிரின்ஸ் திரைப்படம் எதிர்பார்த்த வரவேற்பை பெற தவறுயது. ஆனால் இந்த முறை அதை மாவீரன் திரைப்படத்தில் பூர்த்தி செய்து இருப்பதாக சிவகார்த்திகேயனுக்கு தற்போது வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன. மண்டேலா படத்தின் மூலம் அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்த இயக்குனர் மடோன் அஸ்வின் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், அதிதி சங்கர், மிஷ்கின், சரிதா, யோகி பாபு ஆகியோர் இணைந்து நடிக்க சாந்தி டாக்கீஸ் நிறுவனம் தயாரிப்பில் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் வெளியிட்ட இந்த மாவீரன் திரைப்படம் கடந்த ஜூலை 14ஆம் தேதி உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீஸாகி பெரும் வெற்றி பெற்று தற்போது 50 கோடிக்கு மேல் வசூலித்துள்ளது.

இந்த நிலையில் மாவீரன் திரைப்படத்தின் வெற்றிக்கு ஊடகத்திற்கும் ரசிகர்களுக்கும் நன்றி தெரிவிக்கும் வகையில் படக் குழுவினர் விழா ஒன்றை ஏற்பாடு செய்தனர். இந்த விழாவில் பேசிய நடிகர் சிவகார்த்திகேயன் மிகவும் எமோஷனலாக சில விஷயங்களை பேசினார். அப்படி பேசுகையில், “இது ஏன் நன்றிக்கான சந்திப்பு என்று சொல்கிறோம் என்றால்.. முதலில் நன்றி சொல்வது தான் சரியாக இருக்கும். இந்த படம் ஏன் வெற்றி, ஒருவேளை தயாரிப்பாளரின் பார்வையில் அவருடைய முதல் படம். ஒரு முதல் படம் இயக்கி அதை இப்படி ஒரு படமாக இப்படி ஒரு குழுவுடன் இணைந்து இயக்கி அது மக்களிடமும் விமர்சன ரீதியாகவும் வரவேற்பை பெற்று இருக்கிறது. அதை ஒரு காரணமாக சொல்லலாம். இல்லையென்றால் வசூல் ரீதியாக போஸ்டர் எல்லாம் போட்டார்கள் இவ்வளவு கலெக்சன் பண்ணி இருக்கிறது என்று... அதனால் இருக்கலாம். ஆனால் என்னை பொறுத்த வரைக்கும், இந்த வெற்றி என்பதற்கு பெரிய நன்றி நானும் சொல்லியே ஆக வேண்டும் என்ற கட்டாயத்தில் இருக்கிறேன். நான் நிறைய படங்கள் நல்ல படங்கள் நிறைய வெற்றி படங்கள் பண்ணியிருக்கிறேன். ஆனால் இந்த படத்தின் வெற்றி கொஞ்சம் எக்ஸ்ட்ரா ஸ்பெஷல். அதற்காக தான் எல்லாருக்கும் நன்றி சொல்ல வேண்டும். அதை நான் இன்னும் நேராக சொல்ல வேண்டுமென்றால் எனக்கு நம்முடைய பத்திரிக்கை நண்பர்களிடமிருந்து இதுவரை படத்தின் வெற்றிக்கு வாழ்த்து வந்திருக்கிறது. ஆனால் என்னுடைய நடிப்புக்கு வாழ்த்து வந்தது முதல் முறை இந்த படத்திற்காக தான்." என பேசி இருக்கிறார். நடிகர் சிவகார்த்திகேயன் பேசிய அந்த முழு வீடியோ இதோ…