கொடுத்த பணத்தைத் திருப்பிக்கேட்ட நண்பனை அவரது நண்பன் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையைச் சேர்ந்த 37 வயதான ஐயப்பன், அதே பகுதியைச் சேர்ந்த அவரது நண்பர் வினோத்திற்கு, கடந்த சில மாதங்களுக்கு முன்பு 10 ஆயிரம் ரூபாய் பணம் கொடுத்துள்ளார்.

கடனைப் பெற்றுக்கொண்ட வினோத், பணத்தைத் திருப்பித் தராமல், தினமும் காலம் தாழ்த்தி வந்ததாகத் தெரிகிறது. இதன் காரணமாக, நண்பர்கள் இருவருக்கும் இடையில் பிரச்சனை எழுந்துள்ளது.

இந்நிலையில் ஐயப்பன் தனது நண்பர் வினோத்திடம் கொடுத்த பணத்தை மீண்டும் கேட்டுள்ளார். அப்போது, இருவருக்கும் இடையில் கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த வினோத், ஐயப்பனை அரிவாளால் கடுமையாகத் தாக்கிவிட்டு அங்கிருந்து ஓடியுள்ளார்.

இதில் ரத்த வெள்ளத்தில் மிதந்த ஐயப்பனை, அங்கிருந்தவர்கள் மீட்டு, அருகில் உள்ள தேவகோட்டை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். இதில், மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியிலேயே பரிதாபமாக அவர் உயிரிழந்தார்.

இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார், தலைமறைவாக உள்ள வினோத்தைத் தேடிவருகின்றனர். இதனிடையே, பணப் பிரச்சனையால் நண்பனையே நண்பன் கொலை செய்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.