தமிழ் திரைத்துறையில் மிக முக்கியமான நடிகர் சிலம்பரசன் TR. தனது சிறுவயதிலே திரைத்துறையில் அறிமுகமாகி தற்போது தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத ஸ்டாராக வளர்ந்துள்ளார். நிறைய பிளாக் பஸ்டர் படங்களை கொடுத்து சிறுவயதில் இருந்தே ரசிகர்களை உற்சாகப்படுத்தி வரும் சிம்புவிற்கு தீவிர ரசிகர் பட்டாளம் உள்ளது. இடையே ஏற்பட்ட சில பிரச்சனைகளில் திரைத்துறையில் இருந்து விலகி இருந்த சிம்புவிற்கு உடல் எடை அதிகமாக பட வாய்ப்புகளும் குறைந்தது. விமர்சனத்திற்கும் ஆளானார் சிலம்பரசன். அதன் பின் தனது உடல் எடையை கடின உழைப்பினால் குறைத்து தனது இரண்டாவது இன்னிங்க்ஸ் அட்டகாசமாக ஆரம்பித்தார். மாநாடு தொடங்கி வெந்து தணிந்தது காடு வரை மெகா பிளாக் பஸ்டரை கொடுத்து வருகிறார் சிம்பு. தற்போது நெடுஞ்சாலை பட இயக்குனருடன் இணைந்து ‘பத்து தல என்ற படத்தில் நடித்து வருகிறார். ஏ ஆர் ரஹ்மான் இசையில் சிம்புவுடன் இணைந்து கெளதம் கார்த்திக், கௌதம் வாசுதேவ் மேனன், பிரியா பவானி சங்கர், கலையரசன், டிஜே உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர். இப்படம் வரும் மார்ச் மாதம் 30 ம் தேதி வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் சிலம்பரசனுக்கு திருமண பேச்சு தொடங்கி விட்டதாகவும் அவருக்கு இலங்கை பெண்ணுடன் நிச்சயம் முடிந்துவிட்டதாகவும் தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது முன்னதாக சிம்புவிற்குத் திருமணம் செய்ய பெண் தேடும் பணியில் அவரது பெற்றோர் டி.ராஜேந்தர், உஷா ராஜேந்தர் தம்பதியர் தீவிரமாக ஈடுபட்டுள்ளதாக தெரிவித்திருந்தனர். இலங்கையைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவரின் மகளை சிம்புவுக்கு திருமணம் செய்ய பேசி முடித்திருப்பதாகவும், விரைவில் இது குறித்து அறிவிப்பு வெளியாகும் என்று தகவல் வெளியானது.

இதனையடுத்து சிலம்பரசன் தரப்பினர் இந்த தகவலை முழுமையாக மறுத்து அறிவிப்பை வெளியிட்டுள்ளனர். அதில் “சிலம்பரசன் டிஆர் இலங்கைத் தமிழ் பெண்ணுடன் நிச்சயதார்த்தம் செய்து கொண்டார் என்ற செய்தியை நாங்கள் கடுமையாக மறுக்கிறோம். அதில் எந்த உண்மை தன்மையும் இல்லை. "திருமணம்" என்பது தனிப்பட்ட விஷயம் என்பதை எங்கள் ஊடக நண்பர்களுக்கு தெரிவித்து கொள்கிறோம். திருமணத்தைப் பற்றிய நல்ல செய்திகள் எதவாது வந்தால், அதை முதலில் அழைப்பதும், தெரிவிப்பதும் ஊடக நண்பர்களுடன்தான்” என்று தெரிவித்து உள்ளனர். இதனையடுத்து சிலம்பரசன் ரசிகர்கள் இந்த அறிவிப்பினை வைரலாக்கி வருகின்றனர்.