தமிழ் சினிமாவின் முன்னணி கதாநாயகர்களில் ஒருவரான நடிகர் சிலம்பரசன்.TR மாநாடு திரைப்படத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து அடுத்தடுத்து ஒவ்வொரு படங்களையும் பார்த்து பார்த்து தேர்ந்தெடுத்த நடித்து வருகிறார். அந்த வகையில் கடைசியாக சிலம்பரசன்.TR நடிப்பில் வெளிவந்த தணிந்தது காடு திரைப்படம் பிளாக் பஸ்டர் ஹிட் ஆனது. இதனிடையே சிலம்பரசன்.TR நடிப்பில் அடுத்த மாஸ் திரைப்படமாக தயாராகி இருக்கும் பத்து தல திரைப்படம் வருகிற மார்ச் 30ஆம் தேதி உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீஸ் ஆகிறது. கன்னடத்தில் நடிகர் சிவராஜ்குமார் நடிப்பில் வெளிவந்து சூப்பர் ஹிட்டான மஃப்டி திரைப்படத்தின் தமிழ் ரீமேக்காக, சூர்யாவின் சில்லுனு ஒரு காதல் & ஆரியின் நெடுஞ்சாலை ஆகிய படங்களை இயக்கிய இயக்குனர் ஒபெலி.N.கிருஷ்ணா இயக்கத்தில் சிலம்பரசன்.TR மற்றும் கௌதம் கார்த்திக் இணைந்து முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ள பத்து தல திரைப்படத்திற்கு இசை புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார்.

முன்னதாக சிலம்பரசன்.TRன் பிறந்தநாள் பரிசாக வெளிவந்த பத்து தல படத்தின் முதல் பாடலான நம்ம சத்தம் பாடலும் கடந்த சில தினங்களுக்கு முன்பு வெளிவந்த பத்து தல திரைப்படத்தின் டீசரும் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், பத்து தல படத்தின் ட்ரெய்லருக்காக மிகுந்த ஆவலோடு அனைவரும் காத்திருக்கின்றனர். இந்நிலையில் தனது அடுத்த திரைப்படமாக சிலம்பரசன்.TR நடிக்கும் STR48 திரைப்படத்தின் அறிவிப்பும் பெரும் எதிர்பார்த்தை ஏற்படுத்தி உள்ளது. ஏற்கனவே இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா & ஜூங்கா ஆகிய படங்களின் இயக்குனர் கோகுல் இயக்கத்தில் கொரோனா குமார் திரைப்படத்தில் சிலம்பரசன்.TR நடிப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ள நிலையில், கடந்த சில தினங்களாக கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்தின் இயக்குனர் தேசிங் பெரியசாமி இயக்கத்தில் அடுத்த படத்தில் சிலம்பரசன்.TR நடிக்க இருப்பதாகவும் தகவல்கள் வெளி வருகின்றன. இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளிவரும் என தெரிகிறது.

இந்நிலையில் வெந்து தணிந்தது காடு ரிலீஸ் சமயத்தில் நமது கலாட்டா பிளஸ் சேனலில் திரு.பரத்வாஜ் ரங்கன் அவர்களுடன் சிறப்பு நேர்காணலில் பேசிய வீடியோவை தனது ட்விட்டர் பக்கத்தில், பகிர்ந்துள்ள நடிகர் சிலம்பரசன்.TR, “பொறுமை என்பது ஒரு வரம் அதற்காக நிறைய நம்பிக்கை தேவைப்பட்டது ஆனால் இந்த காத்திருப்பும் சிறப்பானது தான்!” என தெரிவித்து STR48 என குறிப்பிட்டுள்ளார். அந்த சிறப்பு பேட்டியில் சிலம்பரசன்.TR பகிர்ந்து உள்ள இந்த வீடியோவில், “நிறைய கதைகள் கேட்டிருக்கிறேன். அதில் ஒரு சில சுவாரசியமான கதைகள் நல்ல இயக்குனர்களோடு இருக்கின்றன. ஆனால் இப்போது நான் ஒருவித பசியில் இருக்கிறேன். ஒரு பயங்கரமான பசி இருக்கிறது. இந்த பசிக்கான கதைக்காக காத்திருக்கிறேன். காட்டு பசி என்று சொல்வார்கள் அல்லவா அந்த மாதிரி பசி இருக்கிறது. இதற்கு முன் இப்படி ஒரு நிலையில் நான் மன்மதன் படம் செய்தேன். அதை நானே இயக்கினேன் ஒருவேளை நான் இயக்குவேன் அல்லது ஒரு நல்ல கதையைச் தேர்ந்தெடுப்பேன். ஆனால் சில சுவாரஸ்யமான கதைகள் வரிசையில் இருக்கின்றன. இதற்கு முன்பு என் பசியை திருப்திப்படுத்தும் வகையில் ஒரு படம் செய்ய விரும்புகிறேன்” என தெரிவித்துள்ளார். எனவே நடிகர் சிலம்பரசன்TRன் அடுத்த திரைப்படத்தை அவரே இயக்குவாரா? , இயக்குனர் தேசிங் பெரியசாமி இயக்குவாரா? இயக்குனர் கோகுல் இயக்குவாரா? அல்லது வேறு ஒரு இயக்குனர் இயக்குவாரா? என்ற அறிவிப்பு வெகு விரைவில் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.