உலகநாயகன் கமல்ஹாசனின் மகளான ஸ்ருதிஹாசன் தனது தந்தையுடன் இணையும் புதிய ப்ராஜெக்ட் குறித்து முக்கிய அப்டேட் கொடுத்திருக்கிறார். குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பின்னர் பாலிவுட்டில் கதாநாயகியாக களமிறங்கிய நடிகை ஸ்ருதி ஹாசன் தொடர்ந்து தமிழ், தெலுங்கு, ஹிந்தி என இந்திய சினிமாவில் மிகவும் பிரபலமான முன்னணி கதாநாயகியாக நடிகை ஸ்ருதி ஹாசன் வலம் வருகிறார். அந்த வகையில் நடிப்பில் தெலுங்கில் கடைசியாக ஒரே தினத்தில் இரண்டு திரைப்படங்கள் ரிலீஸ் ஆகின. தெலுங்கு சினிமாவின் உச்ச நட்சத்திர நாயகர்களான மெகா ஸ்டார் சிரஞ்சீவி மற்றும் நந்தாமுரி பாலகிருஷ்ணா ஆகியோரது நடிப்பில் மாஸ் திரைப்படங்களாக வெளிவந்த வால்டர் வீரய்யா மற்றும் வீரசிம்மர் ரெட்டி ஆகிய திரைப்படங்கள் கடந்த ஜனவரி மாதம் சங்கராந்தி வெளியீடாக ரிலீஸாகி நல்ல வரவேற்பு பெற்று பிளாக் பஸ்டர் வெற்றி பெற்றன. நடிகை ஸ்ருதிஹாசன் தான் இந்த இரண்டு திரைப்படங்களிலும் கதாநாயகி.

இதனைத் தொடர்ந்து அடுத்தடுத்த அட்டகாசமான திரைப்படங்கள் ஸ்ருதி ஹாசன் நடிப்பில் வெளிவர தயாராகிய வருகின்றன. அந்த வகையில் தற்போது முதல்முறையாக ஹாலிவுட்டில் காலடி எடுத்து வைக்கும் நடிகை ஸ்ருதிஹாசன் THE EYE எனும் ஆங்கில திரைப்படத்தில் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். முன்னதாக கே ஜி எஃப் படங்களின் இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் மற்றும் ஒரு பிரம்மாண்ட படைப்பாக தற்போது தயாராகி வரும் சலார் திரைப்படத்தில் நடிகர் பிரபாஸ் உடன் இணைந்து கதாநாயகியாக ஸ்ருதி ஹாசன் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த செப்டம்பர் 28ஆம் தேதி ரிலீஸ் ஆக இருந்த சலார் திரைப்படம் சில காரணங்களால் ஒத்திவைக்கப்பட்டு இருக்கிறது. விரைவில் புதிய ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழில் கடைசியாக மறைந்த இயக்குனர் SP.ஜனநாதன் இயக்கத்தில் 2021 ஆம் ஆண்டு வெளிவந்த லாபம் திரைப்படத்தில் ஸ்ருதி ஹாசன் நடித்திருந்தார். லாபம் திரைப்படத்திற்கு பிறகு கடந்த இரண்டு ஆண்டுகளாக தமிழ் சினிமாவில் புதிய திரைப்படங்களில் கமிட் ஆகாமல் இருந்த நடிகை ஸ்ருதி ஹாசன் வெகு விரைவில் புதிய தமிழ் படங்களில் நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையே தனது தந்தையும் இந்திய சினிமாவின் ஜாம்பவானுமான உலகநாயகன் கமல்ஹாசன் உடன் இணையும் புதிய ப்ராஜெக்ட் பற்றி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

இன்ஸ்டாகிராமில் ரசிகர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்து வந்த நடிகை ஸ்ருதிஹாசனிடம் ரசிகர் ஒருவர் அப்பாவோடு இணையும் ப்ராஜெக்ட் பற்றிய அப்டேட் என கேட்க, “அப்பாவோடு புதிய மியூசிக்கல் ப்ராஜெக்ட் ஒன்றில் இணைகிறேன் அது என்ன என்பது குறித்த அறிவிப்பு வெகு விரைவில் வர இருக்கிறது நான் அதற்காக மிகவும் உற்சாகமாக இருக்கிறேன்.” என பதில் அளித்து இருக்கிறார் நடிகை ஸ்ருதிஹாசனின் இந்த பதிலால் ரசிகர்கள் மிகுந்த உற்சாகம் அடைந்து இருக்கிறார்கள் அவர் அறிவித்தது போலவே விரைவில் இந்த அறிவிப்பு வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே கமல்ஹாசன் அவர்களின் உன்னைப் போல் ஒருவன் திரைப்படத்திற்கு நடிகை ஸ்ருதிஹாசன் அவர்கள் இசையமைத்திருக்கும் நிலையில் இந்த புதிய மியூசிக்கல் ப்ராஜெக்ட் குறித்த அறிவிப்புகள் எப்போது வரும் என ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.