தமிழ் சினிமாவின் மிக முக்கிய இயக்குனர்களில் ஒருவராக தொடர்ந்து தனக்கென தனி பாணியில் ரசிகர்கள் விரும்பும் வகையிலான படங்களைக் கொடுத்து வரும் இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில் கடைசியாக வெளிவந்த திரைப்படம் நானே வருவேன். நீண்ட இடைவெளிக்கு பிறகு இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில் நடிகர் தனுஷ் இரட்டை வேடத்தில் நடித்த நானே வருவேன் திரைப்படம் கடந்த ஆண்டு வெளிவந்து சூப்பர் ஹிட் ஆனது. இதனிடையே நடிகராகவும் புதிய அவதாரம் எடுத்த செல்வராகவன், தளபதி விஜயின் பீஸ்ட், இயக்குனர் அருண் மாதேஸ்வரனின் சாணிக் காயிதம் மற்றும் தனுஷ் நடித்த நானே வருவேன் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்திருந்தார். தொடர்ந்து சமீபத்தில் வெளிவந்த பகாசூரன் மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் இன் பர்ஹானா உள்ளிட்ட திரைப்படங்களிலும் நடித்த இயக்குனர் செல்வராகவன் விரைவில் நடிகர் விஷால் எஸ் ஜே சூர்யா நடிப்பில் வெளிவர இருக்கும் மார்க் ஆண்டனி திரைப்படத்திலும் மிக முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார்.

இந்த நிலையில் இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளிவந்திருக்கும் மாமன்னன் திரைப்படத்தில் இடம் பெற்றிருக்கும் மெலடி பாடலை ரசித்த இயக்குனர் செல்வராகவன் இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மானை புகழ்ந்திருக்கிறார். தமிழ் சினிமா ரசிகர்களின் எக்கச்சக்கமான எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இயக்குனர் மாரி செல்வராஜின் மாமன்னன் திரைப்படம் கடந்த சில தினங்களுக்கு முன்பு வெளியாகி பெரும் வரவேற்பு பெற்றுள்ளது. வைகைப்புயல் வடிவேலு மாமன்னன் எனும் கதையின் நாயகனாக நடித்திருக்கும் இப்படத்தில் உதயநிதி ஸ்டாலின், பகத் பாசில் மற்றும் கீர்த்தி சுரேஷ் ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். பரியேறும் பெருமாள் மற்றும் கர்ணன் என தொடர்ச்சியாக சமூக நீதிப் பேசக்கூடிய தரமான படைப்புகளை வழங்கி வரும் இயக்குனர் மாறி செல்வராஜ் ஹட்ரிக் வெற்றியாக மாமன்னன் திரைப்படத்திலும் தனது சமூகநீதி அரசியலை மிகச் சரியாக கையாண்டு இருக்கிறார். பல்வேறு விவாதங்களை ஏற்படுத்தி இருக்கும் மாமன்னன் திரைப்படம் விமர்சன ரீதியாக பாராட்டுகளை பெற்றதோடு வர்த்தக ரீதியிலும் நல்ல வசூல் செய்து வருகிறது.

ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் தயாரிப்பில் தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவில் செல்வா ஆர் கே படத்தொகுப்பு செய்திருக்கும் மாமன்னன் திரைப்படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைத்திருக்கிறார். ஏற்கனவே ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் வெளிவந்த பாடல்கள் அனைத்தும் ரிலீசுக்கு முன்பே ரசிகர்களின் இதயங்களை வென்ற நிலையில் தற்போது படத்தின் பின்னணி இசையும் பிரமாதமாக இருப்பதாக ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் மாமன்னன் திரைப்படத்தில் இடம் பெற்றிருக்கும் நெஞ்சமே நெஞ்சமே பாடலை கேட்டு ரசித்த இயக்குனர் செல்வராகவன் அது குறித்து ஏ.ஆர்.ரஹ்மான் அவர்களை புகழ்ந்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு இருக்கிறார். அந்தப் பதிவில், “தமிழில் இப்படி ஒரு பாடல் கேட்டு எவ்வளவு நாள் ஆயிற்று நெஞ்சமே நெஞ்சமே ஐயா ஏ.ஆர்.ரஹ்மான் தலைவா நாடி நரம்புக்குள் புகுந்து மயக்கும் அதிசயம் என்ன ஒரு வரிகள் யுகபாரதி #மாமன்னன்” என குறிப்பிட்டு பதிவிட்டு இருக்கிறார் இயக்குனர் செல்வராகவனின் இந்த பதிவு தற்போது ட்விட்டரில் வைரலாகி வருகிறது. அந்தப் பதிவு இதோ…