தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனராகவும் - நடிகராகவும் திகழும் சசிகுமார் அவர்கள் நடிப்பில் கடைசியாக இந்த 2023 ஆம் ஆண்டு வெளிவந்த அயோத்தி திரைப்படம் ரசிகர்களுடைய நல்ல வரவேற்பு பெற்றது. மேலும் விமர்சன ரீதியாகவும் பெரும் பாராட்டுகளை பெற்றது. தொடர்ந்து பகைவனுக்கு அருள்வாய், நா நா மற்றும் நந்தன் ஆகிய திரைப்படங்கள் சசிகுமார் நடிப்பில் அடுத்தடுத்து வெளிவர இருக்கின்றன. முன்னதாக சசிகுமார் அவர்கள் நடிகர், இயக்குனர் & தயாரிப்பாளர் என பன்முகத்தன்மை கொண்ட கலைஞராக தனது முதல் படைப்பிலேயே அனைவரையும் திரும்பி பார்க்க வைத்தது சுப்ரமணியபுரம் திரைப்படத்தில் தான். சசிகுமார் உடன் இணைந்து ஜெய் கதையின் நாயகனாக நடித்த சுப்பிரமணியபுரம் திரைப்படம் ரசிகர்களால் கொண்டாடப்பட்டது. 1980ல் நடைபெறும் பீரியட் கதையாக இன்று வரை தமிழ் சினிமாவின் கலெக்டர் கிளாசிக் திரைப்படங்களில் ஒன்றாக விளங்கும் சுப்பிரமணியபுரம் திரைப்படம் வெளிவந்து தற்போது 15 ஆண்டுகள் நிறைவடைந்து இருக்கின்றன. ஒளிப்பதிவாளர் SR.கதிர் அவர்களின் ஒளிப்பதிவில், காட்சிகள் ஒவ்வொன்றும் ரசிகர்களுக்கு புதிதாகவும் மனதிற்கு மிகவும் நெருக்கமாகவும் அமைய இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் அவர்களின் பாடல்களும் மிகப்பெரிய வரவேற்பை பெற்று ஹிட்டானது.

இந்த நிலையில் சுப்ரமணியபுரம் திரைப்படம் 15 ஆண்டுகள் நிறைவு செய்ததை கொண்டாடும் வகையில் நமது கலாட்டா பிளஸ் சேனலில் நடைபெற்ற சிறப்பு நேர்காணலில் திரு பரத்வாஜ் ரங்கன் அவர்களோடு கலந்துரையாடிய சசிகுமார் அவர்கள் நம்மோடு பல சுவாரசிய தகவல்களை பகிர்ந்து கொண்டார். அந்த வகையில், சுப்பிரமணியபுரம் திரைப்படத்தில் உங்களுடைய கதாபாத்திரம் ரஜினிகாந்த் போலவும் ஜெய்யின் கதாபாத்திரம் கமல்ஹாசன் போலவும் இருக்கிறது... எனக் சொன்ன போது,

“நான் எடுத்துக் கொண்டதும் அப்படித்தான் கமல் சாரும் ரஜினி சாரும் இந்த இரண்டு கதாபாத்திரங்களில் நடித்தால் எப்படி இருக்கும்? அப்படித்தான் நான் யோசித்தேன். ஸ்கிரிப்ட் எழுதி முடித்த பிறகு ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு ஆட்டிட்யூட் கொடுக்க வேண்டும் என நினைத்தபோது, அழகர் கதாபாத்திரம் கமல் சார், அவன் காதலிப்பதால், அதனால் தான் பார்த்தீர்கள் என்றால் ஜெய் உடைய காஸ்டியூம்கள் எல்லாமே கலர்ஃபுல்லாக இருக்கும் கமல் சார் போடுவது போல இருக்கும். அவர் டிஸ்கோ ஹேர் ஸ்டைல் வைத்திருப்பார். என்னுடைய கதாபாத்திரத்தை பார்க்கிறீர்கள் என்றால் ரஜினி சார் அப்போது போடக்கூடிய செக்குடு சட்டைகள், ஸ்டெப் கட்டிங் என்ற சொல்வார்கள் அந்த ஹேர் ஸ்டைல் வைத்திருப்பேன். அப்படித்தான் நான் கதை தயாரான பிறகு கதாபாத்திரங்களை வடிவமைத்தேன். அவர்கள் அப்போது இதை செய்யவில்லை ஒருவேளை செய்திருந்தால் எப்படி இருக்கும். இவர்கள் இருவரையும் ரீக்கிரியேட் செய்த மாதிரி தான் ஒரு ஸ்ட்ரக்ச்சரில் தான் இதை நான் செய்தேன்.” என பதில் அளித்துள்ளார் காலம் கடந்தும் பேசும் சிறந்த படைப்பாக விளங்கும் சுப்ரமணியபுரம் திரைப்படத்தின் 15 ஆண்டுகளை நினைவு கூறும் வகையில் நடைபெற்ற இந்த சிறப்பு நேர்காணலில் இன்னும் பல சுவாரஸ்யமான தகவல்களை இயக்குனர் சசிகுமார் பகிர்ந்து கொண்டார். கலாட்டா பிளஸ் சேனல் சசிகுமார் அவர்கள் பங்கு பெற்ற இந்த சிறப்பு நேர்காணலை கீழே உள்ள லிங்கில் காணலாம்.