சின்னத்திரையில் இருந்து தனது கடின உழைப்பால் வெள்ளித்திரையில் நுழைந்து தற்போது தமிழ் சினிமாவின் நட்சத்திர நடிகர்களில் ஒருவராக இடம் பிடித்திருக்கும் சிவகார்த்திகேயன் நடிப்பில் இன்று ஜூலை 14ம் தேதி ரிலீசாகியிருக்கும் திரைப்படம் தான் மாவீரன். முன்னதாக யோகி பாபு நடிப்பில் வெளிவந்து ஒட்டுமொத்த சினிமா ரசிகர்களின் கவனம் ஈர்த்த மண்டேலா படத்தின் இயக்குனர் மடோன் அஸ்வின் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் கதாநாயகனாக நடித்திருக்கும் மாவீரன் திரைப்படத்தில் அதிதி ஷங்கர் கதாநாயகியாக நடித்திருக்கிறார். முதல் முறையாக முழு நீள வில்லனாக இயக்குனர் மிஷ்கின் நடித்திருக்கும் மாவீரன் திரைப்படத்தில் சரிதா, பிரபல தெலுங்கு நடிகர் சுனில், யோகி பாபு ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். சாந்தி டாக்கீஸ் நிறுவனம் தயாரிக்க தமிழில் மாவீரன் , தெலுங்கில் மஹாவீருடு என வெளிவந்துள்ள இத்திரைப்படத்திற்கு விது அய்யனா ஒளிப்பதிவில், ஃபிலோமின் ராஜ் படத்தொகுப்பு செய்ய, பரத் ஷங்கர் இசையமைத்துள்ளார்.

இந்த நிலையில் நமது கலாட்டா பிளஸ் சேனலில் திரு.பரத்வாஜ் ரங்கன் அவர்களோடு சிறப்பு நேர்காணலில் பேசிய நடிகை சரிதா, நடிகர் சிவகார்த்திகேயன் அவர்களோடு இணைந்து பணியாற்றியது குறித்து மனம் திறந்து பேசினார். அப்படி பேசுகையில், “சிவகார்த்திகேயன் இதுவரை நடித்த படங்களிலேயே மொத்தமும் மாறுபட்ட வித்தியாசமான படம் இது. அவருடைய நடிப்பிலும் அப்படி தான். மிகச் சிறப்பாக இருக்கிறது.” என்றார்.

தொடர்ந்து அவரிடம், உங்கள் இருவருக்கும் இடையிலான அனுபவம் எப்படி இருந்தது முதல் நாளிலிருந்து..? எனக் கேட்ட போது, “ஆமாம் முதல் நாளில் இருந்தே நாங்கள் இணைந்து விட்டோம். அதுதான் நடந்தது.. நான் கொஞ்சம் வருத்தப்பட்டு இருந்தேன். கொஞ்சம் இருக்கும் தானே மனசிற்குள், அவர் இப்போதைய சூப்பர் ஸ்டார்களில் ஒருவர்... எப்படி இருக்குமோ?, இணைந்து பணியாற்றுவது எப்படி இருக்குமோ என்று நினைத்தேன். எனக்கு பணியாற்ற அந்த இடம் கொடுத்து.. பார்த்தீர்கள் என்றால் எல்லா ஹீரோக்களும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் எதற்காக இவ்வளவு முக்கியத்துவம் அம்மா கதாபாத்திரத்திற்கு, என்பது இருக்கலாம். இந்த சந்தேகமும் எனக்கு இருந்து கொண்டே இருந்தது. இங்கே ஏற்றுக் கொண்டோம் அங்கே போகும் போது இதெல்லாம் சரி வருமா என... ஆனால் அவர் இதை ஊக்குவித்து கொண்டு தொடர்ந்து பாராட்டிக் கொண்டும்... டப்பிங் முடித்த பிறகும் அவர் எனக்கு போன் செய்து எனது நடிப்பை பற்றி அவ்வளவு நேரம் பேசினார். எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. ஒரு இளம் நடிகர் ஒரு சீனியர் நடிகைக்கு இவ்வளவு மரியாதை கொடுப்பது பெரிய விஷயம். அதை அவர் செய்தார். நான் அவரை எப்போதும் ஆசீர்வதித்துக் கொண்டே இருப்பேன். அவர் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் இதே மாதிரியே இருக்க வேண்டும் என... இவர் ஒரு அற்புதமான மனிதர்.. சிவகார்த்திகேயன் பற்றி என்ன சொன்னாலும் பத்தாது. அவர் அவ்வளவு அற்புதமான ஒரு கதாபாத்திரம். இளம் தலைமுறைக்கு ஒரு அழகான ரோல்மாடல் என நான் நினைக்கிறேன்." என தெரிவித்திருக்கிறார் இன்னும் பல சுவாரஸ்ய தகவல்களை பகிர்ந்து கொண்ட நடிகை சரிதாவின் அந்த முழு பேட்டியை கீழே உள்ள லிங்கில் காணலாம்.