தமிழ் சினிமாவில் முன்னணி நகைச்சுவை நடிகராக இருந்து இன்று பக்காவான கமர்ஷியல் காமெடி படங்களில் ஹீரோவாக நடித்து ரசிகர்களின் மனதை கவர்ந்தவர் நடிகர் சந்தானம். சின்னத்திரையில் அறிமுகமாகி பின் தமிழ் திரையுலகில் நம்பர் ஒன் காமெடி நடிகராக வலம் வந்தவர் நடிகர் சந்தானம். அஜித் குமார், விஜய், ரஜினி காந்த், கார்த்தி, சூர்யா, விஷால் போன்ற முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கினார். பின் தமிழ் சினிமாவில் ‘கண்ணா லட்டு தின்ன ஆசையா’ படத்தின் மூலம் கதாநாயகனாகவும் தயாரிப்பாளராகவும் அறிமுகமானார். பின் தொடர்ந்து ‘வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்’, இனிமே இப்படிதான், டகால்டி, பிஸ்கோத், பாரிஸ் ஜெயராஜ், டிக்கிலோனா, ஏ 1, சபாபதி, குலு குலு ஆகிய படங்களில் நடித்து அட்டகாசமான காமெடி படங்களை கொடுத்து தமிழ் மக்களின் மனங்களை கவர்ந்தார். மேலும் இவர் நடிப்பில் கிக், சர்வர் சுந்தரம் ஆகிய படங்கள் வெளியாகும் நிலையில் உள்ளது.

இந்த படங்களில் சந்தானம் நடித்து மெகா பிளாக் பஸ்டர் ஹிட் அடித்த திரைப்படம் என்றால் அது ‘தில்லுக்கு துட்டு’ திரைப்படம் தான். மிகப்பெரிய வெற்றி நிகழ்ச்சியாகவும் சந்தானம் அவர்களுக்கு பேர் வாங்கி கொடுத்த நிகழ்ச்சியாகவும் இருந்த லொள்ளு சபா தொலைக்காட்சி நிகழ்ச்சியை இயக்கிய ராம் பாலா அவர்கள் இப்படத்தினை இயக்கினார். திகில் திரைப்படங்கள் காமெடி காட்சிகளுடன் உருவான கதைக்களத்தில் சந்தானம் பேய்களையே கலாய்த்து தள்ளும் இந்த திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை சந்தானம் அவர்களுக்கு கொடுத்தது. ஹீரோவாக மட்டுமல்லாமல் அவருக்கு தயாரிப்பாளராகவும் இந்த படம் வெற்றியை கொடுத்தது. இந்த வெற்றியே இந்த படத்தின் இரண்டாம் பாகம் உருவாக காரணமாக இருந்தது. முதல் படம் போல் இல்லையென்றாலும் இரண்டாம் பாகம் நல்ல வரவேற்பை ரசிகர்களிடம் பெற்று தந்தது.

முன்னணி நகைச்சுவை நடிகராக இருந்து கதாநாயகனாக அறிமுகமாகி ஆரம்பத்தில் வெற்றியை கொடுத்த திரைப்படங்கள் சமீபத்தில் அவருக்கு பெரிதளவு கை கொடுக்காமல் போனது. அதன்படி முன்னதாக இவர் நடிப்பில் வெளியான டிக்கிலோனா,சபாபதி, குலுகுலு, ஏஜென்ட் கண்ணாயிரம் ஆகிய படங்கள் சந்தானம் அவர்களுக்கு எதிர்பார்த்த வெற்றியை தரவில்லை. இதனிடையே மீண்டும் சந்தானம் காமெடி நடிகராக நடிக்கவிருப்பதாக வதந்தியும் பரவியது.

இந்நிலையில் மீண்டும் தமிழ் சினிமாவில் பிளாக் பஸ்டர் ஹிட் கொடுக்க அவரது வெற்றி படமான தில்லுக்கு துட்டு படத்தினை கையிலெடுத்துள்ளார். அதன்படி தில்லுக்கு மூன்றாம் பாகம் ‘DD Returns’ என்ற பெயரில் உருவாகவுள்ளது. இப்படத்தினை பிரமானந்த் இயக்கவுள்ளார். இப்படத்தில் சந்தானம் அவர்களுக்கு கதாநாயகியாக சுரபி நடிக்க மேலும் இவர்களுடன் ரெடின் கிங்ஸ்லி, மாறன், மொட்டை ராஜேந்திரன், சங்கர், விஜயன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

ஆர்கே என்டர்டைன்மெண்ட் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு ஆப்ரோ இசையமைக்க அசல் கோலார் மற்றும் துரை பாடல்கள் எழுதவுள்ளனர். இந்நிலையில் தமிழ் புத்தாண்டு தினத்தையொட்டி தில்லுக்கு துட்டு 3 படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டருடன் சிறப்பு டைட்டில் டீசரையும் படக்குழு வெளியிட்டுள்ளது. மிரட்டலான காட்சிகளுடன் வழக்கமான சந்தானம் காமெடி காட்சிகளும் இடம் பெற்றுள்ள 'டிடி ரிட்டர்ன்ஸ்' டீசர் தற்போது ரசிகர்களிடையே வைரலாகி வருகிறது.