மாத்தி யோசி மற்றும் ஆனந்தம் விளையாடும் வீடு உள்ளிட்ட படங்களின் இயக்குனரும், பாலிவுட்டில் டாப்சி நடிப்பில் வெளிவந்த ராஷ்மி ராக்கெட் படத்தின் கதாசிரியருமான இயக்குனர் நந்தா பெரியசாமி இயக்கத்தில் உருவாகும் புதிய த்ரில்லர் படத்தில் இயக்குனர் சமுத்திரக்கனி கதாநாயகனாக நடிக்க இருக்கிறார். தென்னிந்திய சினிமாவின் மிக முக்கிய நடிகர்களில் ஒருவராகவும் சிறந்த இயக்குனராகவும் திகழும் சமுத்திரக்கனி அவர்கள் தற்போது தெலுங்கில் பவர் ஸ்டார் பவன் கல்யாண் தனது திரைப் பயணத்தில் 31வது படமாக நடிக்கும் புதிய PSPK31 திரைப்படத்தை இயக்கி வருகிறார். கடந்த 2021 ஆம் ஆண்டு இயக்குனர் சமுத்திரக்கனி இயக்கி நடித்து நேரடியாக ZEE5 தளத்தில் வெளிவந்து ரசிகர்களுடைய மிகப்பெரிய வரவேற்பை பெற்ற வினோதய சித்தம் திரைப்படத்தின் தெலுங்கு ரீமேக்காக சமுத்திரகனி இயக்கும் இந்த PSPK31 படத்தில் பவன் கல்யாண், தமிழில் சமுத்திரக்கனி நடித்த வேடத்தில் நடித்து வருகிறார்.

நடிகராக இந்த 2023 ஆம் ஆண்டு இதுவரை வெளிவந்த அஜித் குமாரின் துணிவு, தனுஷின் வாத்தி, மற்றும் சமீபத்தில் நடிகர் நானி நடிப்பில் வெளிவந்த தசரா உள்ளிட்ட திரைப்படங்களில் மிக முக்கிய வேடங்களில் நடித்த சமுத்திரக்கனி, ஒரே சமயத்தில் பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில், உலகநாயகன் கமல்ஹாசன் நடிக்கும் இந்தியன் 2 திரைப்படத்திலும் ராம்சரண் கதாநாயகனாக நடிக்கும் கேம் சேஞ்சர் திரைப்படத்திலும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த வரிசையில் அடுத்ததாக இயக்குனர் நந்தா பெரியசாமி இயக்கத்தில் உருவாகும் புதிய திரில்லர் படத்தில் சமுத்திரகனி நடிக்கிறார். மேலும் அவருடன் இணைந்து இயக்குனர் இமயம் பாரதிராஜா, நாசர் மற்றும் நடிகை அனன்யா ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்கும் இந்த புதிய திரைப்படம் தற்போது பூஜையுடன் தொடங்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பரபரப்பான திரில்லர் படமாக உருவாகும் இந்த புதிய திரைப்படத்தின் படப்பிடிப்பு கேரள மாநிலத்தின் எல்லையான மூணாறு, மேகமலை மற்றும் குமுளி ஆகிய பகுதிகளில் ஒரே கட்ட படப்பிடிப்பாக நடைபெற இருப்பதாக தெரிகிறது.

இயக்குனர் நந்தா பெரியசாமியிடம் கதையைக் கேட்ட அடுத்த நிமிடமே சமுத்திரக்கனி இப்படத்திற்கு ஓகே சொல்லி இருக்கிறார். மேலும் படப்பிடிப்பிற்கான மொத்த தேதிகளையும் தந்து முழு ஈடுபாட்டோடு இந்த படத்தில் ஹீரோவாக நடிக்கிறார். மைனா, கும்கி, மான் கராத்தே, பைரவா, மாமனிதன், யசோதா படங்களின் ஒளிப்பதிவாளர் M.சுகுமார் ஒளிப்பதிவில் உருவாகும் இப்படத்திற்கு, ஜில் ஜங் ஜக், குற்றம் 23, ரங்கூன், சிம்பா, ஜாக்பாட், ஓ மண பெண்ணே மற்றும் சமீபத்தில் துல்கர் சல்மான் நடிப்பில் வெளிவந்த சீதாராமம் ஆகிய படங்களில் தொடர்ந்து தனது இசையால் ரசிகர்களை மகிழ்விக்கும் இசையமைப்பாளர் விஷால் சந்திரசேகர் இசை அமைக்கிறார். முன்னணி பாடலாசிரியர் சினேகன், இயக்குனர் ராஜூ முருகன் மற்றும் பொன்னியின் செல்வன் படத்தின் பாடலாசிரியர் இளங்கோ கிருஷ்ணன் ஆகியோர் இப்படத்திற்கான பாடல்களை எழுதுகின்றனர். தற்போது பூஜையுடன் திரைப்படம் தொடங்கி இருக்கும் நிலையில் இதர நடிகர் நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களின் விவரங்கள் விரைவில் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.