இந்திய திரை உலகின் முன்னணி நட்சத்திர கதாநாயகிகளில் ஒருவராகவும் சிறந்த நடிகையாகவும் தொடர்ந்து படத்திற்கு படம் வித்தியாசமான கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடித்து வரும் நடிகை சமந்தா நடிப்பில் கடைசியாக சயின்ஸ் ஃபிக்ஷன் ஆக்ஷன் திரில்லர் படமாக தயாராகிய யசோதா திரைப்படம் PAN INDIAN திரைப்படமாக வெளிவந்து நல்ல வரவேற்பை பெற்றது.

அடுத்தடுத்து சமந்தா நடிக்கும் திரைப்படங்கள் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த வகையில் முன்னதாக நடிகர் விஜய் தேவரகொண்டா உடன் இணைந்து ரொமான்டிக் காமெடி என்டர்டெய்னராக குஷி திரைப்படத்தில் தற்போது சமந்தா நடித்து வருகிறார். தொடரந்து இதிகாச கதாபாத்திரமான சகுந்தலா கதாபாத்திரத்தை மையப்படுத்தி சாகுந்தலம் திரைப்படத்தில் நடிகை சமந்தா சகுந்தலா கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

இதனிடையே சில வாரங்களுக்கு முன்பு நடிகை சமந்தா மயோசிடிஸ் எனும் அரிய வகை நோயால் பாதிக்கப்பட்டு இருப்பதாக தெரிவித்திருந்தார். தொடர்ந்து அதற்கான சிகிச்சைகளும் மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில் தற்போது சிகிச்சைக்காக மீண்டும் நடிகை சமந்தா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக சமூக வலைதளங்களில் வதந்திகள் பரவி வந்தன.

இதுகுறித்து தற்போது சமந்தா தரப்பில் இருந்து விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. நடிகை சமந்தா வீட்டில் ஓய்வில் இருப்பதாகவும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக வெளிவந்திருக்கும் தகவல்கள் அனைத்தும் வதந்திகள் என்றும் சமந்தா தரப்பில் இருந்து திட்டவட்டமாக தெரிவிக்கப்பட்டுள்ளது. விரைவில் நடிகை சமந்தா பூரண குணமடைந்து மீண்டு வர வேண்டுமென கலாட்டா குழுமம் சார்பாக வேண்டிக் கொள்கிறோம்.