கள்ளக் காதலை தன்பாலின உறவாக மாற்றி கணவன் - மனைவி நாடகம் ஆடியது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

சேலத்தில் பெண்ணை ஒருவர் அடித்துத் துன்புறுத்துவது போல் சமீபத்தில் வீடியோ ஒன்று உலா வந்தது. இது குறித்து போலீசார் விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில், வீடியோவில் பெண்ணை அடித்துத் துன்புறுத்துவது சேலத்தைச் சேர்ந்த மோகன்ராஜ் என்பதை போலீசார் கண்டுபிடித்தனர்.

ஆட்டோ ஓட்டுநரான மோகன்ராஜ், 2 ஆட்டோக்களில் ஒன்றை வாடகைக்குக் கொடுத்துவிட்டு, மற்றொன்றைத் தானே ஓட்டி வருகிறார்.
இவருக்கும், வீடியோவில் அடி வாங்கிய பெண்ணுக்கும் இடையே தகாத உறவு இருந்து வந்ததாகத் தெரிகிறது.

இதைப் பயன்படுத்தி, அந்த பெண் மோகன்ராஜிடம் அடிக்கடி பணம் பறித்துச் சென்றதாகக் கூறப்படுகிறது. இதேபோல், சமீபத்தில் அவர் 30 ஆயிரம் ரூபாய் மோகன்ராஜிடம் கேட்டதாகவும், ஆனால் அவர் பணம் கொடுக்க மறுத்ததாகவும் தெரிகிறது. இதனால், ஆத்திரமடைந்த அந்த பெண், மோகன்ராஜ் தொடர்பான ஆபாசப் படங்களை வெளியிட்டு விடுவேன் என்று மிரட்டி உள்ளார்.

இதனால், கடும் கோபமடைந்த மோகன்ராஜ், அந்த பெண்ணை பணம் தருவதாகத் தனியாக வரச்சொல்லி, அடித்து மிரட்டி உள்ளார். இதனையடுத்து, அதை வீடியோ எடுத்து அந்த பெண்ணை இவர் மிரட்டி உள்ளார். அந்த காட்சிகள் தான், பெண்ணை கொடுமைப் படுத்துவதாக உலா வந்த வீடியோ என்று போலீசார் தரப்பில் கூறப்படுகிறது.

இதனிடையே, மோகன்ராஜ் தன்னை மிரட்டியதைத் தொடர்ந்து, தன் கணவன் மூலம் அந்த பெண் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதில், தன் கணவரை அவர் “தன்பாலின உறவுக்கு” அழைத்ததாகக் குற்றம்சாட்டி உள்ளார்.

இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார், மோகன்ராஜை கைது செய்து விசாரித்து வருவது குறிப்பிடத்தக்கது. இதில் மோகன்ராஜ், தகாத உறவுக்கு மனைவியை அழைத்தாரா? அல்லது கணவனை அழைத்தரா என்று போலீசார் குழப்பமடைந்துள்ளனர்.