கல்லூரி பெண்களை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்து, பணம் கேட்டு மிரட்டிய இளைஞரை போலீசார் அதிரடியாகக் கைது செய்தனர்.

சேலம் மாவட்டம் மேட்டூரைச் சேர்ந்த சபரி அபிஷேக் என்ற இளைஞர், கல்லூரி மாணவிகளைக் காதலிப்பது போல், தொடர்ந்து பலரையும் ஏமாற்றி வந்துள்ளார். மாணவிகளைக் காதலிப்பதுபோல் ஆசைவார்த்தை கூறி, அவர்களைக் கல்லூரியை கட் அடிக்க வைத்து, வெளியூரில் உள்ள நட்சத்திர விடுதிகளுக்கு அழைத்துச் சென்று அவர்களுடன் உல்லாசம் அனுபவித்துள்ளார். அத்துடன், அந்த உல்லாச காட்சிகளை அவர்களுக்கேத் தெரியாமல் தனது செல்போனில் வீடியோவும் எடுத்துக்கொண்டுள்ளார்.

பின்னர், தனக்கு ஆசை வரும்போதெல்லாம் அந்த பெண்களை மிரட்டியே, தனது இச்சைகளைத் தீர்த்துக்கொண்டுள்ளார். ஒருகட்டத்தில், காதலிப்பதுபோல் ஏமாற்றி, ஆபாசப்படம் எடுத்த பெண்களிடமும் பணம் கேட்டு மிரட்டி உள்ளார்.

அதன்படி, அவரிடம் சிக்கிக்கொண்ட ஒரு கல்லூரி மாணவியைச் சந்திப்பதற்காகக் கடந்த 22 ஆம் தேதி சேலம் திருவகவுண்டனூருக்கு அந்த இளைஞர் வரச்சொல்லி மிரட்டி உள்ளார். அப்போது, அந்த மாணவியின் செயல்பாடுகளில் சந்தேகமடைந்த அவரது பெற்றோர்கள், மாணவியை அவருக்கேத் தெரியாமல் பின்தொடர்ந்துள்ளனர். அப்போது, இருவரையும் திருவகவுண்டனூரில் கையும் களவுமாகப் பிடித்து, அந்த இளைஞரை எச்சரித்துள்ளனர்.

அப்போது, தன்னை காதலித்து ஏமாற்றிவிட்டு தன்னை ஆபாசப்படம் எடுத்து மிரட்டுவதாக அந்த இளம் பெண், தனது பெற்றோரிடம் கண்ணீர் மல்கக் கூறியுள்ளார். இதனால், கடும் அதிர்ச்சியடைந்த இளம் பெண்ணின் பெற்றோர், சேலம் மாநகர காவல் ஆணையரிடம் புகார் அளித்துள்ளனர். இதனையடுத்து, வழக்குப் பதிவு செய்த போலீசார், தனிப்படை அமைத்து, அந்த இளைஞரைக் கைது செய்தனர்.

அதனைத்தொடர்ந்து, சபரி அபிஷேக்கிடம் விசாரணை நடத்தி, அவனது செல்போனை ஆய்வு செய்தனர். அதில் பல கல்லூரி இளம் பெண்களுடைய ஆபாச படங்களும், அவர்களைக் கட்டாயப்படுத்தி பாலியல் பலாத்காரம் செய்த வீடியோவும் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும், ஆபாச படம் எடுத்து அனைத்து பெண்களையும், அவர் பணம் கேட்டு மிரட்டி உள்ளதும் விசாரணையில் தெரியவந்தது.பின்னர், சேலம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, சபரி அபிஷேக்கை மத்தியச் சிறையில் அடைத்தனர்.

பொள்ளாச்சி பாலியல் பலாத்கார சம்பவம் போல், சேலத்திலும் கல்லூரி பெண்களைக் குறிவைத்து, இளைஞர் ஒருவர் ஆபாச படம் எடுத்து பணம் கேட்டு மிரட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.