1981 ல் வெளிவந்த 'சட்டம் ஒரு இருட்டறை' என்ற படத்தின் மூலம் பிரபலமடைந்த இயக்குனர் எஸ் ஏ சந்திரசேகர். பின் சமூக பிண்ணனியுள்ள படங்களை இயக்க ஆரம்பித்தார். இவர் தமிழ்,தெலுங்கு, கன்னடம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் 70க்கும் மேற்பட்ட திரைப்படங்களை இயக்கியுள்ளார். இவர் இயக்கிய பெரும்பாலான படங்கள் மக்கள் மத்தியில் அமோக வரவேற்பு பெற்றவை. குறிப்பாக ‘நான் சிகப்பு மனிதன்’ மேலும் சிரஞ்சீவியை வைத்து தெலுங்கில் இவர் இயக்கியுள்ள சத்தின் கீ லெவு திரைப்படம் அந்த மொழியில் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. நடிகர் விஜயகாந்துடனான இவரது கூட்டணி பெரும்பாலும் வெற்றியையே கொடுத்தது. இன்று முன்னணி இயக்குனர்களாக இருக்கும் சங்கர், எம்.ராஜேஷ் மற்றும் பொன்ராம் போன்ற இயக்குனர்கள் இவரது உதவி இயக்குனர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது இயக்குனர் எஸ்.ஏ சந்திர சேகர் நீண்ட இடைவெளிக்கு பின் 'நான் கடவுள் இல்லை' என்ற படத்தை இயக்கியுள்ளார். இப்படத்தில் சமுத்திரக்கனி கதாநாயகனாகவும் இனியா ,சாக்ஷி அகர்வால், சரவணன்,ரோகினி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். வரும் பிப்ரவரி 3 ஆம் தேதி நான் கடவுள் இல்லை திரைப்படம் வெளியாகவுள்ள நிலையில் இயக்குனர் எஸ் ஏ சந்திரசேகர் நமது கலாட்டா தமிழ் சிறப்பு பேட்டியில் கலந்து கொண்டார். இதில் படம் குறித்தும் தான் கடந்து வந்த திரைப்பயணம் குறித்தும் கலந்துரையாடினார். மேலும் பேசிய அவர்,
“செல்லும் எல்லா இடங்களிலும் விஜயின் அப்பா போறாரு அம்மா போறாங்க னு சொல்றாங்க. இந்த பெருமையை நீங்க ஒவ்வொருத்தரும் உங்க அப்பா அம்மாக்கு தரணும். 92 ல் நான் விஜயை அறிமுகம் செய்யும் பொழுது அவரை என்ன சொன்னார்கள், ‘இயக்குனர் எஸ்.எ.சந்திரசேகரின் மகன் நடிக்கிறார் ..போய் பார்ப்போம்..’ என்று வந்தார்கள். ஏனென்றால் அன்று நான் முக்கிய இயக்குனர்களில் ஒருவராக இருந்தேன். நிறைய மொழிகளில் படம் செய்தேன் நல்ல வசதியாக இருந்தேன்.
பிறகு 'பூவே உனக்காக' முக்கியமாக ‘காதலுக்கு மரியாதை’ படத்திற்கு பின் விஜய் அப்டியே வேறு ஒரு இடத்திற்கு சென்று விட்டார். இன்னொரு கொடுப்பினை எண்னென்றால் , அவருக்கு நல்ல ரசிகர்கள் இருக்கிறார்கள் அதையும் தாண்டி பொதுமக்களுக்கு தனிப்பட்ட வகையில் மிகவும் பிடித்த நடிகராக உள்ளார். நான் இந்த படத்தை (வாரிசு) ஐந்து ஊர்களில் பார்த்துவிட்டு வருகிறேன். யாருக்கும் தெரியாமல் மாஸ்க் எல்லாம் போட்டுகொண்டு பார்த்தேன் . அப்போது அங்கு பேசிக்கொண்டிருந்தவர்கள், இரண்டு படங்கள் ஓடிக்கொண்டிருந்த நிலையில் எந்த படத்திற்கு போவீர்கள் என்ற போது படத்தின் பெயரை குறிப்பிடாமல் விஜய் படம் என்றார்கள் . வாரிசு என்று அவர்கள் குறிப்பிடவில்லை . குழந்தையை கேட்டால் கூட சொல்கிறது, விஜய் அண்ணா படம் என்று.” என விஜய் குறித்து பேசினார்.

மேலும் அவர் படம் குறித்தும் தான் கடந்து வந்த திரைப்பயணம் குறித்தும் பேசிய வீடியோ இதோ..