கன்னட சினிமாவின் குறிப்பிடப்படும் நடிகர்களில் ஒருவராக திகழும் ரிஷப் ஷெட்டி இயக்குனராகவும் அற்புதமான படைப்புகளை தொடர்ந்து வழங்கி வருகிறார். அந்த வகையில் ரிஷப் ஷெட்டி இயக்கி நடித்த காந்தாரா திரைப்படம் கடந்த 2022ம் ஆண்டு வெளிவந்து உலக அளவில் ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்று பிளாக்பஸ்டர் ஹிட்டானதோடு பாராட்டுகளையும் வாரிக் குவித்தது.

கதையின் நாயகனாக ரிஷப் ஷெட்டி தந்தை மகன் என இரு வேடங்களில் நடிக்க, சப்தமி கௌடா கதாநாயகியாக நடித்தார். தென்னிந்திய சினிமாவின் தனித்துவமான நடிகர்களில் ஒருவரான கிஷோர் கதையின் மிக முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க, அச்சுத்குமார், பிரமோத் ஷெட்டி, பிரகாஷ் தும்மினாட், மானசி சுதிர் உள்ளிட்டோர் மற்ற முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர்.

கே ஜி எஃப் திரைப்படத்தின் தயாரிப்பு நிறுவனமான ஹோம்பெல் ஃபிலிம்ஸ் நிறுவனம் தயாரித்த காந்தாரா திரைப்படத்தை தமிழில் ட்ரீம் வாரியார் பிக்சர்ஸ் நிறுவனம் வெளியிட்டது. வெறும் 16 கோடி ரூபாய் பொருட்செளவில் உருவாக்கப்பட்ட காண்டரா திரைப்படம் பாக்ஸ் ஆபிஸில் 450 கோடி ரூபாய் வரை வசூல் வைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. திரையரங்குகளில் கொண்டாடப்பட்ட காந்தாரா திரைப்படத்தை தொடர்ந்து OTTயிலும் ரசிகர்கள் ரசித்து வருகின்றனர்.

இதனிடையே காந்தாரா திரைப்படத்தின் 100வது நாள் கொண்டாட்டம் கடந்த ஓரிரு தினங்களுக்கு முன்பு நடைபெற்றது. இந்த விழாவில் பேசிய ரிஷப் ஷெட்டி காந்தாரா திரைப்படத்தின் 2வது பாகம் குறித்த மிக முக்கிய அறிவிப்பை வெளியிட்டார். முன்னதாக காந்தாரா திரைப்படத்தின் 2வது பாகம் விரைவில் தயாராக இருப்பதாக செய்திகள் வெளிவந்த நிலையில், “வரப்போவது 2வது பாகம் அல்ல நீங்கள் பார்த்தது தான் 2வது பாகம். முதல் பாகம் தான் அடுத்து தயாராகி வருகிறது” என ரிஷப் ஷெட்டி அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளார். எனவே காந்தாரா 2 திரைப்படம் PREQUEL திரைப்படமாக இருக்கும் என ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்தோடு எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.