தென்னிந்தியாவின் பெரும் திரை ஆளுமைகளில் ஒருவர் நடிகர் சிரஞ்சீவி. பல தசாப்தங்களாக அட்டகாசமான கமர்ஷியல் திரைப்படங்கள் மூலம் ரசிகர்களை மகிழ்வித்து தொடர்ந்து முன்னணி நடிகர்களில் ஒருவராக இருந்து வருகிறார். கடந்த ஆண்டு இவரது நடிப்பில் வெளியான ‘ஆச்சர்யா’, ‘காட்பாதர்’ ஆகிய திரைப்படங்கள் வெளியாகி பிளாக் பஸ்டர் ஹிட் அடித்தது. அதை தொடர்ந்து இந்த ஆண்டு ஜனவரியில் சிரஞ்சீவி நடிப்பில், ‘வால்டர் வீரய்யா’ திரைப்படம் வெளியாகி வசூலை குவித்தது. அதை தொடர்ந்து தற்போது மெகா ஸ்டார் சிரஞ்சீவி நடிப்பில் வெளியாகவிருக்கும் திரைப்படம் ‘போலா ஷங்கர்’.

இயக்குனர் மெகர் ரமேஷ் இயக்கத்தில் உருவான இப்படம் தமிழில் அஜித் குமார் இயக்குனர் சிவா கூட்டணியில் கடந்த 2015ல் வெளியான வேதாளம் படத்தின் அதிகாரபூர்வ ரீமேக்காகும். இப்படத்தில் சிரஞ்சீவிக்கு ஜோடியாக தமன்னா நடிக்க மேலும் படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார். ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்பின் மத்தியில் போலா ஷங்கர் திரைப்படம் வரும் ஆகஸ்ட் 11 ம் தேதி உலகமெங்கும் வெளியாகவுள்ளது.

இந்நிலையில் சமீபத்தில் போலா ஷங்கர் படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் படத்தின் நாயகன் மெகா ஸ்டார் சிரஞ்சீவி அவர்கள் படம் குறித்து பல சுவாரஸ்யமான தகவல்களை தனது ரசிகர்களிடம் கலந்து கொண்டார். அதில் தொடர்ந்து ரீமேக் படங்களில் நடித்து வருவது குறித்து எழும் விமர்சங்கள் குறித்து பேசினார்.

மேடையில் இதுகுறித்து அவர் பேசுகையில், “கைதி 160 பட வசனத்தை மேற்கோள் காட்டி பேசிய சிரஞ்சீவி, “போலா சங்கர் எனக்கு பிடித்ததால் பண்ணேன்.. அது ரசிகர்களுக்கு பிடிக்கும் என்பதால் பண்ணேன்.. என்று பேசி பின் தொடர்ந்து ஏன் ரீமேக் படம் படங்களிலே தொடர்ந்து நடித்து வருகிறீர்கள் என்று பலர் கேட்டு வருகின்றனர். என்னை பொறுத்தவரை கதை நன்றாக இருக்கும் போது தயாரிப்பாளர்கள், நடிகர்கள் அதை ரீமேக் செய்து நல்ல கதையை தெலுங்கு ரசிகர்களுக்கு கொடுப்பதில் என்ன தவறு உள்ளது?

ஒடிடி வந்த பின் அனைத்து மொழி ரசிகர்களும் அனைத்து மொழிகளிலும் பார்க்க முடிகிறது. மேலும் பல வகையான திரைப்படங்களை ரீமேக் செய்ய வேண்டும் என்றும் ரசிகர்கள் கேட்கின்றனர். வேதாளம் திரைப்படம் எந்த ஒரு ஒடிடி தளத்திலும் இல்லை. அதுதான் எனக்கு நம்பிக்கையை தந்தது. இந்த காரணத்தினால் அதன் ரீமேக்கில் நடிக்க ஒப்புக் கொண்டேன். அது நல்ல பொழுது போக்கை ரசிகர்களுக்கு வழங்கும் என நம்புகின்றேன்.” என்றார் நடிகர் சிரஞ்சீவி.

சமீப காலமாக சிரஞ்சீவி அவர்கள் தொடர்ந்து பல நல்ல நல்ல படங்களை தேர்ந்தெடுத்து அதை ரீமேக் செய்து நடித்து வருகிறார். அதன்படி முன்னதாக மலையாளத்தில் மெகா ஹிட் அடித்த மோகன் லாலின் ‘லூசிஃபர்’ படத்தை தெலுங்கில் ‘காட் பாதர்’ என்ற பெயரில் ரீமேக் செய்தார். அதற்கு முன்னதாகவே தளபதி விஜயின் கத்தி படத்தை ‘கைதி 160’ என்ற பெயரில் ரீமேக் செய்தார். அதை தொடர்ந்து தற்போது வேதாளம் ரீமேக் ‘போலா ஷங்கர்’ வெளியாகவுள்ளது. இதனிடையே மலையாளத்தில் ஹிட் அடித்த ‘ப்ரோ டேடி’ என்ற மோகன் லால் படத்தை தற்போது தெலுங்கில் ரீமேக் செய்யவுள்ளதாக பேச்சு வார்த்தை நடந்து வருகிறது. இது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.