9 ஆம் வகுப்பு பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த இளைஞனுக்கு 4 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அடுத்த துரத்தியேந்தல் கிராமத்தைச் சேர்ந்த 27 வயதான பாலமுருகன், தினக் கூலி வேலை செய்து வருகிறார். இந்நிலையில், அங்குள்ள பக்கத்துக் கிராமத்தைச் சேர்ந்த 14 வயது சிறுமி, அங்குள்ள பள்ளியில் 9 ஆம் வகுப்பு படித்து வரும் நிலையில், அந்த சிறுமியைப் பாலமுருகன் பாலியல் தொல்லைக்கு ஆளாக்கி உள்ளார்.

இது தொடர்பாகக் கடந்த 2016 ஆம் ஆண்டு, மாணவியின் பெற்றோர் அளித்த புகாரின் அடிப்படையில், வழக்குப் பதிவு செய்த போலீசார், விசாரணை மேற்கொண்டு வந்தனர். மேலும், பரமக்குடி அனைத்து மகளிர் காவல் துறையினர், பாலமுருகனை போக்ஸோ சட்டத்தில் கைது செய்தனர்.

கடந்த 3 வருடங்களாக ராமநாதபுரம் மாவட்ட மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த இந்த வழக்கின் விசாரணை, தற்போது முடிவுக்கு வந்தது. வழக்கை விசாரித்த மாவட்ட மகளிர் நீதிமன்ற நீதிபதி டி.பகவதியம்மாள், ஒன்பதாம் வகுப்பு மாணவியைப் பாலமுருகன் பாலியல் துன்புறுத்தல் செய்ததை உறுதி செய்தார். இதனையடுத்து, அவருக்கு 4 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், 2 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து அதிரடியாக உத்தரவிட்டார்.