எக்கச்சக்கமான எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் தயாராகி வரும் சந்திரமுகி 2 திரைப்படத்தின் படப்பிடிப்பில் நடிகர் ராகவா லாரன்ஸ் தனக்கு தங்க மோதிரம் கொடுத்திருப்பதாக நடிகை ராதிகா சரத்குமார் தெரிவித்திருக்கிறார். தனக்கு தங்க மோதிரம் கொடுத்த முதல் ஹீரோ ராகவா லாரன்ஸ் தான் என தெரிவித்துள்ள நடிகை ராதிகா சரத்குமார் சந்திரமுகி 2 திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து இருப்பதாகவும் அதிகாரப்பூர்வமாக தெரிவித்து இருக்கிறார். முன்னதாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களின் திரை பயணத்தில் குறிப்பிடப்படும் திரைப்படங்களில் ஒன்றாக வெளிவந்து பிளாக்பஸ்டர் ஹிட்டான திரைப்படம் சந்திரமுகி. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுக்கு பணக்காரன், மன்னன், உழைப்பாளி போன்ற ஹிட் படங்களை கொடுத்த இயக்குனர் பி.வாசு பாபா திரைப்படத்திற்கு பிறகு சிறு இடைவெளி மீண்டும் சூப்பர் ஸ்டாருடன் கைகோர்த்த சந்திரமுகி திரைப்படம் மலையாளத்தில் நடிகர் மோகன்லால் நடிப்பில் வெளிவந்த சூப்பர் ஹிட்டான மணிசித்திரதாழ் திரைப்படத்தின் ரீமேக்காகும்.

குழந்தைகள் முதல் பெரியவர் வரை அனைத்து தரப்பு ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்று பிளாக்பஸ்டர் ஹிட்டான சந்திரமுகி திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து தற்போது சந்திரமுகி 2 திரைப்படம் தயாராகி வருகிறது. இந்த சந்திரமுகி 2 திரைப்படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ஹீரோ கதாபாத்திரத்தில் நடிகர் ராகவா லாரன்ஸ் நடித்துள்ளார். படப்பிடிப்பிற்கு முன்பாக சூப்பர் ஸ்டார் அவர்களை நேரில் சந்தித்து ஆசி பெற்று சந்திரமுகி 2 படத்தின் படப்பிடிப்பை ராகவா லாரன்ஸ் தொடங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது. பிரபல பாலிவுட் நடிகை நடிகை கங்கனா ரனாவத் கதாநாயகியாக நடிக்கும் சந்திரமுகி 2 திரைப்படத்தில், வைகைப்புயல் வடிவேலு, ராதிகா சரத்குமார், ரவிமரியா உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். R.D.ராஜசேகர் ஒளிப்பதிவு செய்யும் சந்திரமுகி 2 திரைப்படத்திற்கு ஆஸ்கார் விருது வென்ற பாகுபலி மற்றும் RRR திரைப்படங்களின் இசையமைப்பாளர் MM.கீரவாணி இசையமைக்கிறார்.

லைகா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரிக்கும் சந்திரமுகி 2 திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது முழுவீச்சில் நடைபெற்று வந்தது. இந்நிலையில் தற்போது படப்பிடிப்பு மொத்தமும் நிறைவடைந்து இருப்பதாக நடிகை ராதிகா சரத்குமார் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார். சந்திரமுகி 2 திரைப்படத்தின் ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு, “தனது கலை மற்றும் பணி சார்ந்த அனைத்தும் அறிந்த இயக்குனர் P.வாசு அவர்களோடு பணியாற்றியது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. சந்திரமுகி 2 படத்திற்காக லைகா ப்ரொடக்ஷனுக்கு நன்றி! தங்க இதயம் கொண்ட ராகவா லாரன்ஸ்… படத்தை நிறைவு செய்யும்போது எனக்கு தங்க மோதிரமும் கைகடிகாரமும் பரிசளித்தார். எனக்கு தங்கம் பரிசளித்த முதல் ஹீரோ இவர்தான். உங்களது நேர்மையான அன்பு என் மனதை தொட்டது” எனக் குறிப்பிட்டு பதிவிட்டு இருக்கிறார். தற்போது சந்திரமுகி 2 திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து இருப்பதால் வரும் செப்டம்பர் மாதத்தில் விநாயகர் சதுர்த்தி வெளியீடாக ரிலீஸ் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது குறித்து அறிவிப்புகளுக்காக ரசிகர்கள் ஆவலோடு காத்திருக்கின்றனர். நடிகை ராதிகா சரத்குமார் பதிவிட்ட இன்ஸ்டாகிராம் புகைப்படங்கள் இதோ…