தமிழ் சினிமாவின் நட்சத்திர நாயகர்களில் ஒருவராக திகழும் நடிகர் சிலம்பரசன்.TR தற்போது தனது இரண்டாவது இன்னிங்சை யாரும் எதிர்பார்க்காத விதத்தில் அதிரடியாக தொடங்கி தற்போது வெற்றி நடை போட்டு வருகிறார். கிட்டத்தட்ட இவரது திரை பயணமே முடிந்துவிட்டது அவ்வளவுதான் என பேசும் அளவிற்கு எக்கச்சக்கமான எதிர்மறை விமர்சனங்கள் கற்களாக தாக்கிய போதும் அவை அனைத்தையும் படிக்கட்டுகளாகி தனது சிம்மாசனத்தில் ஏறி அமர்ந்த சிலம்பரசன்.TR தான் ஒரு வெற்றி நாயகன் என்பதை அடுத்தடுத்து ஹிட் படங்களை கொடுத்து நிரூபித்திருக்கிறார். தனது உருவ தோற்றம் குறித்து பேசிய அத்தனை வாய்களையும் அசாத்தியமான டிரான்ஸ்பர்மேஷனால் அடைக்க வைத்தார். மாநாடு & வெந்து தணிந்தது காடு என சூப்பர் ஹிட் திரைப்படங்களை கொடுத்து தனது புதிய வெற்றி பாதையை தொடங்கி இருக்கும் நடிகர் சிலம்பரசன்.TR அடுத்ததாக தனது 48வது படமாக உலகநாயகன் கமல்ஹாசன் அவர்களின் ராஜ்கமல் ஃபிலிம் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்க, கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்தின் இயக்குனர் தேசிங் பெரியசாமி இயக்கத்தில் உருவாகும் STR48 திரைப்படத்தில் நடிக்க இருக்கிறார்.

முன்னதாக நடிகர் சிலம்பரசன்.TR நடிப்பில் பக்கா மாஸ் என்டர்டெய்னர் திரைப்படமாக தயாராகி இருக்கும் திரைப்படம் பத்து தல. நடிகர் சூர்யாவின் ஜில்லுனு ஒரு காதல் மற்றும் நடிகர் ஆரியின் நெடுஞ்சாலை உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கிய இயக்குனர் ஒபெலி.N.கிருஷ்ணா இயக்கத்தில் உருவாகியுள்ள பத்து தல திரைப்படத்தில் நடிகர் சிலம்பரசன்.TR மற்றும் கௌதம் கார்த்திக் இணைந்து முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். கன்னடத்தில் நடிகர் சிவராஜ்குமார் நடிப்பில் வெளிவந்து சூப்பர் டூப்பர் ஹிட்டடித்த மஃப்டி படத்தின் தமிழ் ரீமேக்காக உருவாகி இருக்கும் பத்து தல திரைப்படத்தில் கன்னட நடிகர் சிவராஜ்குமார் அவர்கள் நடித்த மிரட்டலான கதாப்பாத்திரத்தில், AGR எனும் AG.ராவணன் கதாபாத்திரத்தில் நடிகர் சிலம்பரசன்.TR நடித்துள்ளார். மேலும் பிரியா பவானி ஷங்கர், கலையரசன், இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன், அனு சித்தாரா மற்றும் டீஜே அருணாசலம் ஆகியோர் பத்து தல திரைப்படத்தில், முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

ஸ்டூடியோ கிரீன் சார்பில் KE.ஞானவேல் ராஜா அவர்கள் தயாரித்துள்ள பத்து தல படத்திற்கு ஃபரூக்.J.பாஷா ஒளிப்பதிவில், பிரவீன்.KL படத்தொகுப்பு செய்ய இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். பென் ஸ்டுடியோஸ் நிறுவனம் வெளியிட வருகிற மார்ச் 30 ஆம் தேதி உலகம் எங்கும் திரையரங்குகளில் பத்து தல படம் ரிலீஸ் ஆகிறது. இந்நிலையில் நமது கலாட்டா சேனலுக்கு அளித்த பிரத்தியேக பேட்டியில் பல சுவாரஸ்யமான விஷயங்களை பகிர்ந்து கொண்ட தயாரிப்பாளர் KE.ஞானவேல் ராஜா அவர்களிடம், பத்து தல திரைப்படத்தை என்ன ஒரு எதிர்பார்ப்போடு பார்க்க மக்கள் வரவேண்டும்? என கேட்டபோது, “ஒரு மிகப்பெரிய மாஸ் கன்டென்ட் கொண்ட ஒரு நல்ல எமோஷன்... குடும்ப எமோஷன் இருக்கும். சிலம்பரசன்.TRக்கு உச்சகட்ட ஹீரோயிசம் இருக்கும். இதுவரை பார்த்த சிலம்பரசன்.TR படங்களிலேயே உச்சகட்ட ஹீரோயிசம் இருக்கும். அதை ரசிகர்கள் கொண்டாடுவார்கள்.” என தெரிவித்துள்ளார். இன்னும் பல சுவாரஸ்யமான விஷயங்களை பகிர்ந்து கொண்ட தயாரிப்பாளர் KE.ஞானவேல் ராஜா அவர்களின் அந்த முழு பேட்டி இதோ…