தனக்கென தனி பாணியில் சமூகநீதி பேசக்கூடிய அதே சமயம் கமர்சியலான தரமான படைப்புகளை வழங்கி வரும் இயக்குனர் பா.ரஞ்சித் அவர்களின் அடுத்த படைப்பாக தயாராகி வரும் திரைப்படம் தான் தங்கலான். மிகவும் அழுத்தமான கதைக்களங்களை தனது நேர்த்தியான திரைக்கதையால் ஜனரஞ்சகமான படங்களை கொடுத்து வரும் இயக்குனர் பா.ரஞ்சித் அவர்களுடன் முதல் முறை நடிகர் சீயான் விக்ரம் இணைந்திருக்கும் இந்த தங்கலான் திரைப்படத்தில், மோகனன் உடன் இணைந்து பார்வதி, பசுபதி, ஹரி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். கிஷோர் குமார் ஒளிப்பதிவில், செல்வா.RK படத்தொகுப்பு செய்யும் தங்கலான் திரைப்படத்திற்கு GV.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார்.

1800-களின் காலகட்டத்தில் கேஜிஎஃப்-ல் நடைபெற்ற வரலாற்று சம்பவத்தை மையமாக வைத்து பக்கா பீரியட் ஆக்ஷன் திரைப்படமாக உருவாகும் தங்கலான் பிரம்மாண்டமாக 3D தொழில்நுட்பத்தில் தயாராகி வருவதும் குறிப்பிடத்தக்கது. எக்கச்சக்கமான எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தி இருக்கும் தங்கலான் திரைப்படத்தின் முதல் டீசர் இன்னும் சில தினங்களில் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்காக படக்குழுவினர் பிரத்யேகமாக மிக பிரம்மாண்டமான ஏற்பாடுகளை செய்திருப்பதாகவும் தெரிகிறது இது குறித்து அறிவிப்புகள் வெகு விரைவில் வர இருக்கின்றன.

இந்த நிலையில் நமது கலாட்டா தமிழ் சேனலுக்கு பிரத்யேக பேட்டி கொடுத்த பிரபல தயாரிப்பாளர் தனஞ்ஜெயன் அவர்கள் இயக்குனர் பா.ரஞ்சித் அவர்களின் இயக்கத்தில் சீயான் விக்ரம் கதையின் நாயகனாக நடித்திருக்கும் இந்த தங்கலான் திரைப்படம் குறித்தும் நம்மோடு பல முக்கிய தகவல்களை பகிர்ந்து கொண்டார். அப்படி பேசும் போது, “தங்கலான் திரைப்படத்தின் கதை எனக்கு நன்றாக தெரியும். முதலில் இந்த கதையை தங்கம் என்று தான் கொடுத்திருந்தார்கள் அந்த கதையை முதல் முறை நான் படிக்கும்போதே மிகவும் ஈர்க்கப்பட்டேன். ரொம்ப சூப்பரான ஒரு கதை. எப்படி இப்படி ஒரு கதையை உருவாக்கினார்கள் என்று இருந்தது. நாம் RRR படம் பார்த்து ஒரு உற்சாகமடைந்தோம் அல்லவா? RRR படத்தின் கதையில் ஒரு ஆன்மா இருந்தது ஒரு குழந்தையை பிரிட்டிஷ்காரர்கள் எடுத்துக்கொண்டு போகிறார்கள் அதை காப்பாற்றுவதற்காக எந்த அளவிற்கு ஒருவன் போய் போராடுகிறான் அதன் பிறகு மற்றொருவன் போய் துணை நிற்கிறான் என்பதெல்லாம் நமக்கு ஈசியாக கனெக்ட் செய்து கொள்ள முடிந்த ஒரு கதை. அதே மாதிரியான ஒரு கதை தான் தங்கலான். நம்முடைய பின்னணியில் கோலார் தங்க வயல் KGF பின்னணியில் ஒரு அருமையான கதையை இயக்குனர் பா.ரஞ்சித் அவர்கள் எழுதியிருக்கிறார். அவரும் தமிழ் பிரபாவும் இணைந்து எழுதி இருக்கிறார்கள். அந்த கதையை படித்ததும் தயாரிப்பாளர்களிடம் சொன்னேன் தங்கலான் திரைப்படம் உங்களுக்கு ஒரு லேண்ட்மார்க் படமாக இருக்கும் என சொல்லி இருக்கிறேன். அப்படி ஒரு கதையை தான் உருவாக்கி இருக்கிறார்கள் படத்தின் தயாரிப்பிலும் அதே மாதிரி எந்த விதமான காம்ப்ரமைசும் இல்லாமல் தயாரித்திருக்கிறார்கள்..” என்று தயாரிப்பாளர் தனஞ்ஜெயன் அவர்கள் பகிர்ந்து இருக்கிறார் இன்னும் பல முக்கிய விஷயங்களை பகிர்ந்து கொண்ட தயாரிப்பாளர் தனஞ்ஜெயன் அவர்களின் அந்த சிறப்பு பேட்டரியை கீழே உள்ளது இங்கு காணலாம்.