மிகப்பெரிய ரசிகர் கூட்டத்தையே வைத்திருக்கும் சிலம்பரசன் TR நடிப்பில் அடுத்ததாக வெளியாகவிருக்கும் திரைப்படம் ‘பத்து தலதிரைப்படம். ஜில்லுனு ஒரு காதல், நெடுஞ்சாலை ஆகிய வெற்றி திரைப்படங்களை இயக்கிய ஒபெலி N கிருஷ்ணா இப்படத்தை இயக்குகிறார். கன்னடத்தில் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்த மஃப்டி’ திரைப்படத்தின் கதைக்கருவை தழுவி எடுக்கப்பட்ட இப்படத்தில் சிலம்பரசன் AG ராவணன் எனும் AGR கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இவருடன் இணைந்து கௌதம் கார்த்திக், பிரியா பவானி ஷங்கர், கலையரசன்,அனு சித்தாரா மற்றும் டீஜே அருணாசலம் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

ஸ்டூடியோ கிரீன் சார்பில் K.E.ஞானவேல் ராஜா தயாரிக்கும் பத்து தல படத்திற்கு ஒளிப்பதிவாளர் ஃபரூக்.J.பாஷா ஒளிப்பதிவு செய்ய பிரவீன்.KL படத்தொகுப்பு செய்கிறார். மேலும் படத்திற்கு கூடுதல் பலமாக இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். இவரது இசையில் முன்னதாக வெளியான ‘நம்ம சத்தம், ‘நினைவிருக்கா’ ஆகிய பாடல்கள் ரசிகர்களை அதிகளவு கவர்ந்து தற்போது டிரெண்டிங்கில் உள்ளது. அதிரடி ஆக்ஷன் காட்சிகளுடன் எதிர்பார்ப்பை எகிற வைக்கும் வகையில் முன்னதாக படத்தின் டீசர் வெளியாகி மிகப்பெரிய அளவு வரவேற்பை பெற்றது.

இந்நிலையில் பிரபல தயாரிப்பாளர் தனஞ்செயன் அவர்கள் பத்து தல படம் பார்த்து விட்டு படம் குறித்து முதல் பார்வையை தனது சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். அதில், “பத்து தல படத்தில் சிலம்பரசன் வெறித்தனமாகவும் மிரட்டலாகவும் நடித்திருக்கிறார். அவரது எனர்ஜி & திரை ஆர்பரிப்பு அருமை.. மேலும் கௌதம் கார்த்திக் மிக அழுத்தமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இயக்குனர் கிருஷ்ணா, தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா மற்றும் படக்குழுவினருக்கு எனது வாழ்த்துகள். நிச்சயம் இந்த திரைப்படம் பாக்ஸ் ஆபிஸில் மிகப்பெரிய அதிர்வை ஏற்படுத்தும்” என்று குறிப்பிட்டுள்ளார் தனஞ்செயன். இதனையடுத்து அவரது பதிவு சிலம்பரசன் ரசிகர்களால் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.

வரும் மார்ச் 30 ம் தேதி உலகெங்கிலும் மிகப்பெரிய அளவு வெளியாகவிருக்கும் பத்து தல படத்தின் இசை வெளியீட்டு விழா வருகிற மார்ச் 18ஆம் தேதி சென்னையில் உள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் மாலை 5 மணி அளவில் மிக பிரம்மாண்டமாக நடைபெறவிருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.