தென்னிந்தியாவின் மிக முக்கியமான நடிகர்களின் ஒருவர் பிரித்விராஜ். பிரபல மலையாள நடிகரான இவர் தமிழில் 'கனா கண்டேன்' படத்தின் வில்லனாக அறிமுகமானார். அறிமுகமான முதல் படத்திலே நடிப்பில் மிரட்டி எடுத்த பிரித்வி ராஜ் அவர்களுக்கு தமிழ் சினிமா பெரும் வரவேற்பு அளித்து பின் தொடர்ந்து பாரிஜாதம், மொழி, சத்தம் போடாதே, கண்ணாமூச்சி ஏனடா, வெள்ளித்திரை, நினைத்தாலே இனிக்கும், ராவணன், காவிய தலைவன் ஆகிய படங்களில் நடித்தார். இதில் பெரும்பாலான திரைப்படங்களில் நடிகர் பிரித்விராஜ் அவர்களின் நடிப்பு மிகப்பெரிய அளவு கவனம் பெற்றது. அதே நேரத்தில் மலையாள திரையுலகில் பிரித்வி ராஜ் முன்னணி நடிகர்களில் ஒருவராகவும் வளர்ந்தார். மேலும் இந்தி, தெலுங்கு ஆகிய மொழிகளிலும் சில படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. நடிப்பு மட்டுமல்லாமல் இயக்குனராகவும் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார் அதன்படி பிரித்வி ராஜ் இயக்கத்தில் கடந்த 2019 மோகன் லால் நடிப்பில் வெளியான லூசிபர் திரைப்படம் மிகபெரிய வரவேற்பை இந்திய அளவில் பெற்றது. மேலும் தொடர்ந்து மோகன் லால் நடிப்பில் உருவான ப்ரோ டேடி படத்தையும் இயக்கி நடித்திருப்பது குறிப்பிடதக்கது. தற்போது பிரித்வி ராஜ் மலையாளத்தில் ‘விலையாத் புத்தா’, இந்தியில் ‘படே மியான் சோட்டே மியான்’ என்ற படத்திலும் நடித்து வருகிறார். மேலும் பான் இந்திய திரைப்படமாக உருவாகி வரும் கே ஜி எப் இயக்குனரின் சலார் திரைப்படத்தில் மிக முக்கியமான கதாபாத்திரத்தில் ப்ரித்வி ராஜ் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.

இதனிடையே மலையாளத்தில் புகழ்பெற்ற எழுத்தாளர் பென்யாமின் என்பவர் எழுதிய 'ஆடுஜீவிதம்' நாவலை தழுவி இயக்குனர் பிளஸி இயக்கிய ஆடுஜீவிதம் – ‘THE GOAT LIFE’ திரைப்படத்தில் பிரித்வி ராஜ் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். இவருடன் கதாநாயகியாக அமலா பால் நடித்துள்ளார். மேலும் படத்திற்கு ஆஸ்கார் நாயகன் ஏ ஆர் ரகுமான் இசையமைக்கவுள்ளார். மேலும் ஒரு சிறப்பு சத்ததிற்கான ஆஸ்கார் விருதை வென்ற ரசூல் பூக்குட்டி இப்படத்திற்கு சிறப்பு சத்தம் வடிவமைப்பாளராக பணியாற்றுகிறார். படத்தொகுப்பு ஸ்ரீகர் பிரசாத் செய்ய ஒளிப்பதிவாளர் சுனில் கேஎஸ் படத்திற்கு ஒளிப்பதிவு செய்கிறார்,

பல கனவுகளுடன் சவுதி அரேபியா சென்று அங்கு ஒட்டகம் மேய்க்கும் பட்டதாரி இளைஞனின் கதையாக உருவாகும் ஆடுஜீவிதம் படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருந்து வருகிறது, காரணம் புத்தகமாக அந்த கதை அதிக வாசகர்களுக்கு பிடித்த நாவலாக இருந்துள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பே தொடங்கிய நிலையில் இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களுக்கு முன்பு தான் நிறைவடைந்துள்ளது. தற்போது இறுதிகட்ட தாயாரிப்பு வேலையில் மும்முரம் காட்டியுள்ள படக்குழு ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் விருந்தாக படத்தின் டிரைலரை வெளியிட்டுள்ளது. டிரைலரில் மிரட்டலான தோற்றத்தில் ப்ரித்வி ராஜ் அவர்களின் நடிப்பு மிகப்பெரிய எதிர்பார்பை படத்திற்கு கொடுத்துள்ளது, டிரைலரில் ஆச்சர்யம் அளிக்கும் ஏ ஆர் ரகுமான் இசை மற்றும் படமாக்கத்தை ரசிகர்கள் புகழ்ந்து வருகின்றனர். தற்போது படத்தின் டிரைலர் ரசிகர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தி வெகுவாக கவர்ந்து வருகின்றது.