தமிழ் சினிமாவின் முன்னணி கதாநாயகர்களில் ஒருவராகவும் அனைத்து தரப்பு வயது ரசிகர்களும் விரும்பக்கூடிய ஹீரோவாகவும் திகழும் நடிகர் ஜெயம் ரவி நடிப்பில் வெளிவரும் ஒவ்வொரு படங்களும் தொடர்ந்து வரிசையாக வெற்றி பெற்று வருகின்றன. தனது ஒவ்வொரு திரைப்படங்களின் கதை களங்களையும் கதாபாத்திரங்களையும் பார்த்து பார்த்து தேர்ந்தெடுத்து நடித்து வரும் நடிகர் ஜெயம் ரவி கடைசியாக கடந்த 2022ம் ஆண்டின் பிளாக்பஸ்டர் திரைப்படமாக பாக்ஸ் ஆபிஸில் 500 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்த இயக்குனர் மணிரத்தினத்தின் பிரம்மாண்ட படைப்பான பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் பொன்னியின் செல்வன் எனும் அருள்மொழிவர்மன் கதாபாத்திரத்தில் கதையின் நாயகனாக நடித்து மக்களின் மனதை கொள்ளையடித்தார். இதன் தொடர்ச்சியாக இந்த 2023 ஆம் ஆண்டு வருகிற ஏப்ரல் 28ஆம் தேதி பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் இரண்டாவது பாகம் ரிலீஸாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

தொடர்ந்து இயக்குனர் ஆண்டனி பாக்யராஜ் இயக்கத்தில் சைரன் மற்றும் இயக்குனர் M.ராஜேஷ் இயக்கத்தில் ஒரு புதிய படம் என அடுத்த திரைப்படங்களில் நடித்து வரும் ஜெயம் ரவி, இயக்குனர் I.அஹ்மத் இயக்கத்தில் உருவாகும் இறைவன் படத்திலும் நடிக்கிறார். இதனிடையே ஜெயம் ரவியின் திரைப்பயணத்தில் 28 வது திரைப்படமாக தயாராகி இருக்கும் திரைப்படம் அகிலன். முன்னதாக ஜெயம் ரவி நடிப்பில் கடந்த 2015 ஆம் ஆண்டு வெளிவந்த பூலோகம் திரைப்படத்தின் இயக்குனர் N.கல்யாண கிருஷ்ணன் உடன் மீண்டும் இணைந்துள்ள ஜெயம் ரவி கதாநாயகனாக நடித்துள்ள அகிலன் திரைப்படத்தில் பிரியா பவானி சங்கர் கதாநாயகியாக நடிக்க, தான்யா ரவிச்சந்திரன் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் ஜிராக் ஜானி, ஹரிஷ் பெரடி, ஹரிஷ் உத்தமன், தருண் அரோரா மற்றும் மதுசூதன் ராவ் ஆகியோர் அகிலன் படத்தில் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

துறைமுகம் மற்றும் அதை சுற்றி நடைபெறும் கதைக்களத்தை மையமாக வைத்து ஸ்கிரீன் சீன் மீடியா என்டர்டைன்மென்ட் பிரைவேட் லிமிடெட் தயாரிப்பு நிறுவனத்தின் சார்பில் தயாரிக்கப்பட்டுள்ள அகிலன் திரைப்படம் வருகிற மார்ச் 10ஆம் தேதி உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீஸாகவுள்ளது. முன்னதாக நடைபெற்ற அகிலன் ட்ரைலர் வெளியீட்டு விழாவில் இயக்குனர் மோகன் ராஜா தனி ஒருவன் 2 திரைப்படம் குறித்த அதிரடி அறிவிப்பை வெளியிட்டார். இதனைத் தொடர்ந்து ஜெயம் ரவியின் கோமாளி மற்றும் சமீபத்தில் வெளிவந்து பிளாக்பஸ்டர் ஹிட்டான லவ் டுடே ஆகிய படங்களின் இயக்குனர் பிரதீப் ரங்கநாதன் பேசும்போது ரசிகர்கள் தங்களது கரகோஷத்தாலும் ஆரவாரத்தாலும் அரங்கே அதிர வைத்தனர்.

அப்போது இயக்குனர் பிரதீப் ரங்கநாதனிடம், ஜெயம் ரவி அவர்களுக்கு நீங்கள் கதை சொல்லி இருப்பதாக தகவல் வந்தது அது பற்றி ஏதாவது? என கேட்டபோது, “கண்டிப்பாக சொல்லி இருக்கிறேன்! அப்போது கோமாளி முடித்த உடனே சொன்னேன். எல்லாவற்றுக்கும் ஒரு நேரம் சரியாக அமைந்து வர வேண்டும் அல்லவா… கண்டிப்பாக அது வரும்” என பதிலளித்தார். தொடர்ந்து எப்போது வரும்? என அவரிடம் கேட்டபோது, “தனி ஒருவன் 2விற்கு எத்தனை ஆண்டுகள் காத்திருந்தீர்கள் இப்போது சொல்லிவிட்டார் அல்லவா, அதுபோல ஒரு நேரம் வரும் அப்போது சரியாக இருக்கும் சொல்வதற்கு” என பதிலளித்துள்ளார். இயக்குனர் பிரதீப் ரங்கநாதனின் இந்த பதிலால் தனி ஒருவன் 2 போலவே கோமாளி 2ம் வருமா என்ற பேச்சுகள் சமூக வலைதளங்களில் வலம் வருகின்றன. அல்லது கோமாளி , லவ் டுடே போலவே அடுத்த அதிரடி ஹிட்டாக ஒரு திரைப்படம் அமையும் என்றும் ரசிகர்கள் ஆவலோடு காத்திருக்கின்றனர்.