எக்கச்சக்கமான எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளிவந்திருக்கும் நடிகர் பிரபாஸின் ஆதிபுரூஷ் திரைப்படம் முதல் நாளிலேயே மிகப்பெரிய வசூல் சாதனை படைத்துள்ளது. தெலுங்கு சினிமாவின் முன்னணி கதாநாயகர்களில் ஒருவராக வலம் வரும் நடிகர் பிரபாஸ் அடுத்ததாக கே ஜி எஃப் திரைப்படத்தின் மூலம் மிகப்பெரிய கவனம் ஈர்த்த இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் சலார் படத்தில் கதாநாயகனாக தற்போது நடித்து வருகிறார். அதிரடி படமான சலார் படம் வரும் செப்டம்பர் 28ம் தேதி ரிலீஸாகிறது. தொடர்ந்து சயின்ஸ் பிக்சன் ஆக்சன் திரைப்படமாக தெலுங்கு மற்றும் ஹிந்தி என இரு மொழிகளில் இயக்குனர் நாக் அஸ்வின் இயக்கத்தில் தயாராகும் ப்ராஜெக்ட் கே படத்திலும் பிரபாஸ் கதாநாயகனாக நடித்து வருகிறார். இப்படத்தில் மிரட்டலான ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதற்காக உலக நாயகன் கமல்ஹாசன் அவர்களோடு பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் இதற்காக மிகப்பெரிய தொகை கமல்ஹாசன் அவர்களுக்கு சம்பளமாக பேசப்பட்டு இருப்பதாகவும் தகவல்கள் வெளி வருகின்றன. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகளுக்காக ரசிகர்கள் ஆவலோடு காத்திருக்கின்றனர்.

இதனிடையே ராமாயணத்தை கலைக்களமாக கொண்டு பிரபாஸ் நடித்துள்ள ஆதிபுரூஷ் திரைப்படம் இன்று ஜூன் 16ஆம் தேதி உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீஸாகியுள்ளது. ராகவா எனும் ராமர் கதாபாத்திரத்தில் பிரபாஸ் நடிக்க ஜானகியாக சீதை கதாபாத்திரத்தில் கீர்த்தி சனான் நடித்துள்ளார். மேலும் மிரட்டலான ராவணன் கதாபாத்திரத்தில் சைஃப் அலிகான் நடிக்க, லட்சுமணன் கதாபாத்திரத்தில் சன்னி சிங் மற்றும் அனுமான் கதாபாத்திரத்தில் தேவதத்தா நாகே ஆகியோர் நடித்துள்ளனர். கார்த்திக் பழனி ஒளிப்பதிவில், அபூர்வா மோட்டிவாளி சஹை மற்றும் ஆஷிஷ் மட்ரே இணைந்து படத்தொகுப்பு செய்துள்ள ஆதிபுரூஷ் படத்திற்கு அஜய் - அதுல் இசையமைத்துள்ளனர். இயக்குனர் ஓம் ராவட் இயக்கத்தில் உருவாகி இருக்கும் இந்த ஆதிபுரூஷ் திரைப்படத்தை T-SERIES FILMS மற்றும் RETROPHILES ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளன.

இதுவரை இல்லாத அளவிற்கு மிக பிரம்மாண்ட படைப்பாக பெரும் பொருட்செலவில் உருவாகி இருக்கும் இந்த ஆதிபுரூஷ் படத்திற்கு கிராபிக்ஸ் பணிகளுக்காகவே கோடிக்கணக்கில் செலவிடப்பட்டுள்ளது. மேலும் ஆதிபுரூஷ் திரைப்படம் ரிலீஸாகி இருக்கும் ஒவ்வொரு திரையரங்குகளிலும் ஆஞ்சநேயருக்காக ஒரு இருக்கையை ஒதுக்கி இருக்கின்றனர். இன்று படம் வெளியான போது ஆஞ்சநேயருக்காக ஒதுக்கப்பட்ட அந்த இருக்கைக்கு காவி துணி போற்றப்பட்டு ஆஞ்சநேயர் உருவப்படங்கள் வைத்து பூஜைகள் செய்யப்பட்ட நிகழ்வுகளும் ஆங்காங்கே அரங்கேறியது. பாகுபலி திரைப்படத்திற்கு பிறகு அடுத்த ஒரு ஹிட்டுக்காக நீண்ட காலமாக காத்திருக்கும் நடிகர் பிரபாஸுக்கு ஆதிபுரூஷ் திரைப்படமாவது கை கொடுக்குமா என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் முதல் நாள் டிக்கெட்டுகள் முன்பதிவிலேயே உலக அளவில் 120 கோடி ரூபாய்க்கு மேல் பாக்ஸ் ஆபிஸில் ஆதிபுரூஷ் வசூல் செய்திருப்பதாக தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. இதே வேகத்தில் தொடர்ந்து வரும் நாட்களும் வெற்றிகரமாக ஓடும் பட்சத்தில் ஆதிபுரூஷ் திரைப்படம் பாக்ஸ் ஆபிஸில் மிகப்பெரிய வசூல் சாதனைகளை படைக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.