'பொன்னியின் செல்வன் 2' படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் துவங்கியுள்ளதை தனது ட்விட்டர் பக்கத்தில் இயக்குநர் பார்த்திபன் பூடகமாகத் தெரிவித்துள்ளார்.

கல்கியின் வரலாற்றுப் புதினத்தை திரைப்படமாக்கும் கனவு தமிழ்சினிமா ஜாம்பவான்கள் பலரால் தொடப்பட்டு, பின் பல காரணங்களால் தொடர்ந்து தள்ளிப்போய் வந்த நிலையில், துணிவுடன் கையிலெடுத்து அதை வெற்றிக்காவியமாக்கிக் காட்டிய பெருமை இந்தியத் திரையுலகின் தவிர்க்கமுடியாத இயக்குநரான மணிரத்னத்தையே சாரும்.

அவ்வகையில், அவர் இயக்கம் மற்றும் தயாரிப்பில் கடந்த செப்டம்பர் 30-ல் பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் முதல் பாகம் உலகம் முழுவதும் 5 மொழிகளில் வெளியானது. பெரும் பொருட்செலவில் உருவான இத்திரைப்படத்தில் தமிழின் முக்கிய நடிகர்களான விக்ரம், கார்த்தி, ஜெயம்ரவி, பிரகாஷ் ராஜ், சரத் குமார், பார்த்திபன், த்ரிஷா, ஐஸ்வர்யா ராய், ஐஸ்வர்யா லெக்ஷ்மி, பிரபு, விக்ரம் பிரபு, சோபிதா துலிபலா, ஜெயசித்ரா, அஸ்வின் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

மணிரத்னத்தின் மெட்ராஸ் டாக்கீஸ் மற்றும் சுபாஸ்கரனின் லைகா நிறுவனம் இணைந்து தயாரித்துள்ள இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். மணிரத்னத்துடன் இணைந்து இப்படத்திற்கு எழுத்தாளர் ஜெயமோகன் மற்றும் குமரவேல் திரைக்கதை எழுதியுள்ளனர். ஒளிப்பதிவு, ரவி வர்மன் மற்றும் படத்தொகுப்பு, ஸ்ரீகர் பிரசாத். சுமார் 250 கோடி செலவில் உருவான இத்திரைப்படம் உலகம் முழுவதும் சுமார் 450 கோடிக்கும் மேல் வசூல் செய்து சாதனை புரிந்தது.

பொன்னியின் செல்வன் புதினத்தை திரைப்படமாக்கலாம் என்ற எண்ணம் எழுந்தபோதே புதினத்தின் நீளம் கருதி இதை இரண்டு பாகங்களாக எடுக்கலாம் என்று மணிரத்னம் திட்டமிட்டிருந்தார். அதன்படி படப்பிடிப்புகள் முடிந்து முதல்பாகமும் வெளியானது. பொன்னியின் செல்வன் முதல் பாக வெளியீட்டின்போதே இரண்டு பாகங்களுக்குமான படப்பிடிப்பை முடித்துவிட்டதாக மணிரத்னம் தெரிவித்திருந்தார். மேலும் முதல் பாகம் வெளியாகி அதற்கடுத்த 6 அல்லது 7 மாதங்களில் அதன் அடுத்த பாகம் வெளியாகும் என்றும் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் தான் 'பொன்னியின் செல்வன் 2' படத்தின் வெளியீட்டுத் தேதியை படக்குழு அண்மையில் அறிவித்து அதிரவைத்து. அதன்படி இப்படத்தின் இரண்டாம் பாகம் இந்தாண்டு ஏப்ரல் 28-ல் வெளியாவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதைத்தொடர்ந்து தான், இப்படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் குறித்த அறிவிப்பை இதில் சின்ன பழுவேட்டரையராக நடித்துள்ள பார்த்திபன் தனது ட்விட்டர் பக்கத்தில் பூடகமாகத் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் தனக்கே உரிய பாணியில் மைக் முன்பாக அவர் நிற்கும்படியான புகைப்படத்தைப் பதிவிட்டு, “அனைவருக்கும் வணக்கம். அடுத்து என்ன என்பது குறித்து யூகியுங்கள் பார்க்கலாம். ஒரு க்ளூ என்னவென்றால் 2” என்று பதிவிட்டுள்ளார்.

இதன்மூலம் பொன்னியின் செல்வன் பட 2-ம் பாகத்தின் டப்பிங் பணிகள் துவங்கியுள்ளதை அவர் மறைமுகமாகத் தெரிவித்துள்ளார். இதிலிருந்து, 'பொன்னியின் செல்வன் 2' படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் துவங்கியுள்ளதை அறிந்துகொள்ள முடிகிறது. இதைத்தொடர்ந்து படத்தின் அடுத்தகட்ட அப்டேட்டுகள் ஒவ்வொன்றாக வெளியாகும் என்றும் எதிர்பார்க்கலாம்.